ஞாயிறு, டிசம்பர் 09, 2012

உருவாகிறாள் ஒரு திரேசா

வேலைக்காரியை வேலை வாங்கு என்கிறது ஒரு கூட்டம். 
வேலைக்காரியை வைக்கிற இடத்தில் வைக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரியின் மனசு கல்லால் செய்தது என்று நினைக்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரி என்று வந்து விட்டால், அவள் அவளின் உணர்வுகளை அடமானம் வைத்துவிடவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
அவளுக்கென்று ஆசாபாசங்கள் கூடாது என்கிறது ஒரு கூட்டம்.
பிட்டத்தால் நகர்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் வேலைக்காரியென்றால் எளக்காரம்.
எதற்கெடுத்தாலும் நான் உனக்கு சம்பளம் தருகிறேன் என்று சொல்லி மிரட்டுகிறது ஒரு கூட்டம்..
திருடுவாள் என்கிறது ஒரு கூட்டம்
தின்னுபுட்டு தூங்குவாள் என்கிறது ஒரு கூட்டம்
இவர்களுக்கிடையில், யாரையும் உதாசினம் செய்யமனமில்லாமல், மௌனமாக உருவாகிக்கொண்டிருக்கின்றாள் ஒரு அன்னை திரேசா.

திங்கள், டிசம்பர் 03, 2012

உன் விரல்

நெற்றியில் விழும்
எனது ஒற்றை மூடி கூட
உன் விரலின்
ஸ்பரிசத்தைத்தான் வேண்டுகிறது

வியாழன், நவம்பர் 29, 2012

பார்த்ததில் ரசித்தவை

அழகான கைவேலைப்பாடு இந்த பொம்மைகள். பார்த்தும், எங்கள் நாட்டின் அடையாளத்தைப் (மூவிம்) பறைசாற்றுவதைப்போல் இருந்ததால்பகிர்ந்துகொண்டேன்.



 மலாய்க்கார யானை 
 இந்துக்களின் யானை
சீனர்களின் யானை
 டூரியான் பழம்
ஆரஞ்சுப்பழம்

புதன், நவம்பர் 28, 2012

மௌனம் போதிக்கப்படுகிறது

கற்க கற்க
மௌனம்
போதிக்கப்படுகிறது

%%%%%

வாங்கிய மூச்சு

கனவில் ஓட்டப்பந்தயம்
நான் முன்னே
நானே முன்னே
முதல் நிலையில் நானே
கனவில் மட்டுமே
இது சாத்தியம் மூச்சுவாங்காமல்..

%%%%%%

ஒப்பனை

வெள்ளையடித்து
வர்ண சாயம் பூசி
திஷ்டி பொட்டோடு
கிளம்பியாச்சு
பணிக்கு...

%%%%%%

ஞாயிறு

அமைதியான சூழல்
கடிகார முள் டிக் டிக் டிக்
தலையணையை தேடும் தலைகள்
அதற்குள் விடிந்துவிட்டதோ என
போர்வைக்குள்.. 
மீண்டும் புகுந்துக்கொள்கிறது
இந்த உடல்..

%%%%%%

வெட்டியாய்..

எதற்காக இந்த பரபரப்பு?
தெரியாமலேயே பல நாள்கள்
என்னை விட்டு ஓடி
மறைந்து கொண்டிருக்கிறது.

%%%%%%

கீச்சுக்குரல்

மாட்டிக்கொண்ட எலியும்
மரத்தில் உள்ள குருவியும்
ஒரே மாதிரி கீச்சிடும்

%%%%%%%%

கண்சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்ணடிப்பதற்காக..

சிறு வணிகம்....

சில்லறை வணிகர்கள் பற்றிய பதிவுகளை தற்போதைய நாட்டு நிலவரமாக ஆங்காங்கே (பேஸ்புக் மற்றும் ப்ளாக்) படிக்கநேர்ந்தது. அங்குள்ள (இந்தியா) நிலவரம் தான் இது. இதற்கு நான் சொல்கிற கருத்து பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்து விடாது என்பது தெரியும், இருப்பினும் ஒரு பகிர்தல்தான்.

அதாவது சில்லறை வணிகர்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக, பிரபல பேரங்காடிகளை நிறுவி, பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்போவதாக பரவலாகச் சொல்லப்பட்டு வருவதை, பலர் பலவாறான   சாதகபாதகங்களை  எடுத்தியம்பி தெளிவான ஆய்வுகளை மிகத்துல்லியமா பார்வைக்குக் கொண்டு வந்து,  அந்த முயற்சிக்கு எதிர்ப்புக்குரல் தெரிவித்து வருகின்றனர்.  அதிகமான ஏழைகள் வசிக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில், சிறுவணிகத்தின் மூலம் தம்மை குட்டித் தொழிலதிபர்களாக உருவாக்கிக்கொள்கிற இந்த அணுகுமுறை வரவேற்கக்கூடியதே.

இருப்பினும் அரசாங்கம் அமல் படுத்த விருக்கின்ற இம்முயற்சியை எதிக்கவேண்டுமென்று ஒரேடியாக புறக்கணிக்காமல், சில பாதகங்களையும் நினைவில் கொண்டு கருத்துக்களை சீர்தூக்கிப்பார்ப்பது நல்லதென்று படுகிறது.

அடியேனும் இந்த சிறு வணிகத்துறையில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டு நொந்துபோய், வியாபரத்துறையே வேண்டாமென்று வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவள். அந்த அளவிற்கு கீழறுப்புகள், பிக்கல் பிடுங்கல்கள் மலிந்த  துறை இது. சுதந்திர போக்குடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, கட்டுப்பாடற்ற நிலையில், நாம் வியாபாரம் செய்யும் பொருட்களையே மற்றவர்களும் செய்து. நாம் விற்கும் விலையை விட குறைத்து விற்று, கஸ்டமர்களை அவர்களின் பக்கம் இழுத்து, தொடர்ந்து அவர்களும் வியாபாரம் செய்யாமல், நம்மையும் நிம்மதியாய் விடாமல் அலைக்கழிக்கும் நிலை இந்த சிறு வணிகத்துறையில் அதிகமாக உள்ளதென்பதை எத்தைனை பேர் அறிவர்?

மேலும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்காங்கே அதிகரிக்கின்ற சில்லறை வணிக ஆசாமிகளால்தான் நாடும் நகரமும் தூய்மைக்கேட்டால் சீர்குலைகிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தெருவோரம் தின்பண்டங்களை வியாபாரம் செய்கிறவர்கள் செய்கிற அட்டூழியங்களால் நிறைகின்ற குப்பைகள் தூய்மைக்கேட்டினை விளைவித்து, சுற்றுவட்டார மக்களை, எலி, ஈக்கள், கொசு போன்றவற்றால் நோயுறச் செய்து விடுகிறது என்பதனையும் கவனத்தில் கொள்தல் அவசியம். யார் எவரால் இந்த தூய்மைக்கேடு நிகழ்கிறதென்று, சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரனைக்கு உட்படுத்தவும் முடியாமல், தள்ளுவண்டியில் நாடு நகரம் என இடங்களை மாற்றிக்கொண்டு, செல்கிற இடங்களையெல்லாம் குப்பைமேடுகளாக ஆக்கிவிடுகின்றனர் இந்த சில்லறை சிறு வணிகத்தினர்.

தூய்மைக்கேட்டிற்கு பொறுப்பு ஏற்கிற நிலை உருவாகின்ற போது, தனிமனித சில்லறை வியாபரம் சுமூகமாக நடைபெறலாம்.

எங்கள் ஊரின் (மலேசியா) நிலையும் இதுதான், ஆரம்பத்தில் சில்லறை வியாபாரிகளின் ராஜியத்தால் சாலை நெரிசல், தூய்மைக்கேடு, பெரிய முதலீட்டைக்கெடுக்கும் நிலை, செல்கிற இடங்களில் எல்லாம் வாக்குவாதம், ஒருவர் மற்றவர் வியாபாரத்தை கெடுக்கும் நிலை என ஒரே அராஜகம். இப்போது பெரிய பெரிய நகர்களில் இவர்களின் நடமாட்டத்திற்கு தடை வித்தித்து, சிறிய சிறிய கடை வசதிகளைச் செய்துகொடுத்து, அரசாங்கத்தின் மூலம் வியாபாரத்தையும் பதிவு செய்துகொண்டு (பிஸ்னஸ் ரெஜிஸ்டர்), நிகழ்கின்ற அத்துனை பின்விளைவுகளுக்கு அவர்களையே பொறுப்பு ஏற்கும்படி செய்துவிட்டார்கள். இதனால், பலவிதமான சிக்கல்கள் இடைஞ்சல்களில் உழன்று, மனவுளைச்சலுக்கு ஆளாகி வியாபர துறையே வேண்டாமென்று ஓடிவிட்டவர்கள் பலர். காரணம் பொறுப்புகளை ஏற்பதற்கு யாரும் இங்கே தயாராய் இல்லை என்பதுதான் நிதர்சனம்.   

ஞாயிறு, நவம்பர் 25, 2012

மொழி பிரச்சனை


மாமிக்கு யாராவது உடன் இருந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே யாருக்கும் அதுக்கு நேரமில்லை. பெற்ற பிள்ளைகளே மிரள்கிறார்கள் பேசுவதற்கு, காரணம் பேச்சு தொண தொண என்று அப்படியே நீண்ட தூரம் செல்கிறது..

கொஞ்ச நேரம் யாரும் இல்லையென்றால் எதையோ பார்த்து பயப்படுவதைப்போல் நம்மை சதா அழைத்துக்கொண்டே இருக்கின்றார்.

நன்றாக இருக்கும் காலத்தில் வீடு வீடாக பஞ்சாயித்திற்கு இவர்தான் தலைவி. (தப்பில்லை)

சென்ற திங்கட்கிழமை, ஒருவரை உணவுக்கடையொன்றில் சந்தித்தோம். அப்போது, அவரும் மாமியைப் பற்றி விசாரித்தார். `ஒரு காலத்தில், எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்க மாமிதான் பஞ்சாயித்து போர்ட் தலைவி. கொடுக்கல் வாங்கல், அரிசி பருப்பு, காப்பி சக்கரையென எது கேட்டாலும் உடனே கொடுப்பார்..தங்கமான மனுஷி.. வரேன் வந்து பார்க்கிறேன்.’ என்றார்.

நல்ல விஷயம்தான் ஆனால் இப்போது? யாருக்குமே பேச நேரமில்லை பேசவும் விரும்பவில்லை.. ஆனால் மாமி மட்டும் அதே நிலையில்தான் இன்னமும்.

பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டால், என்ன ஒரே சத்தம்? என்கிறார்.
அக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாரேனும் அழும் சத்தம் கேட்டால், `அந்த பொம்பள என்ன பண்ணுகிறா? புள்ள அழுவுது.! என்கிறார்.

ஏன் இங்குள்ளவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? என்ன மனுஷாட்கள்?

அந்த மனுஷி நம்ம வீட்டிற்கு வர மாட்டாரா?

உங்கம்மா காலையிலே வரும்.. இன்னிக்கு ஏன் வரல.?

நீ மார்கெட் போயிட்டு ஏன் இவ்வளவு நேரங்கழித்து வர?

அவருக்கு பேசுவதற்கு ஆள் இருக்கவேண்டும் எப்போதும்.
அதற்காக எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இவரின் தங்கையை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து விடலாம், என்கிற முடிவுதான் அது.

கொஞ்சம் பணம் அனுப்பி பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கச்சொல்லி, தங்கையிடமும் ஆசை காட்டி விட்டாச்சு. எல்லாமும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில்,  ஒரு அரசல் புரசல் குடும்பத்தில்...

மாமியின் தங்கையின் வயதும் அறுபத்தைந்து, அவரின் உடல் மற்றும் மன நிலை எப்படியோ!? அவர் இங்கே வந்து, அவருக்கு எதும் பிரச்சனை என்றால், ஒருவருக்கு இருவரை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டி வருமே, அவர் யார் வீட்டில் இருப்பார்? எங்கு தங்குவார்? யார் இரு வயதானவர்களையும் பார்த்துக்கொள்வார்கள்.? புள்ளையார் பிடிக்க குரங்காகி விடும் போலிருக்கே. ! என்கிற சிந்தனை சென்ற தீபாவளியன்று உடன்பிறப்புகளின் மத்தியில் உலவ ஆரம்பித்தது. தெளிவாக சிந்திக்கின்றார்களாம்.. ம்ம்ம். சின்னம்மாவை அழைத்து வரும் யோசனையும் கைவிடப்பட்டது. கைவிடப்பட்டது என்பதைவிட ஒத்திப்போட்டார்கள் எனலாம், காரணம் நிச்சயம் அழைத்து வரவேண்டும், ஒரே ஒரு சின்னம்மா, சின்ன வயதில் ஊருக்குப்போனவர், அவருக்கும் ஆசையிருக்காதா, பிறந்த ஊரைப் பார்க்க (மலேசியா). ஆனால் இப்போது வேண்டாமென்று முடிவெடுத்து விட்டார்கள்.  

சரி, இந்த முடிவை அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா?  `இப்போது வேண்டாம், நாங்கள் பிறகு இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கிறோம், இங்கே நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது..’ என்று, அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா? ஹ்ம்ம்..

தன் உடன்பிறப்பையும், பலகாலம் பிரிந்த உறவுகளையும் பார்க்க, இதுவரையில் அந்த குக்கிராமத்தை விட்டு எங்குமே சென்றிராத அந்த மூதாட்டி வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். தன் அக்காள் மகன்கள் வந்து தம்மை அழைத்துச்சென்று விடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு..

ஆனால், நிலைமை இங்கே? அவர்களின் அழைப்பைக்கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள். மிஸ்ட் கால் வைத்து வைத்து ஓய்ந்தே விட்டார்கள், அங்குள்ள சுற்றங்கள்.

எனக்கு மட்டும் அவர்களின் மொழி தெரிந்தால்,அல்லது அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால், நானாவது அந்த அழைப்புகளை எடுத்து, `அத்தை, உங்களை இங்கே அழைத்து வரும் எண்ணம் யாருக்கும் இல்லை. காத்திருக்க வேண்டாம், வயலுக்குப்போய் பிழைப்பைப்பார்க்கவும்..’ என்று தெலுங்கில் செப்பியிருப்பேன்.

இதனால்தான் எனக்கு எப்போதும் கெட்டப்பெயர்..

வியாழன், நவம்பர் 22, 2012

சாருவை சந்தித்தேன்....


நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிட்டியது.  அங்கே தமிழ் நாட்டு பிரபல எழுத்தாளர் சாரு அவர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எழுதவேண்டுமென்று நினைத்திருந்தால் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, சாரு மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள் இலக்கியப்பகிர்வுகள் என அக்கு அக்காக எழுதிப் பகிரலாம்!. நான் நிகழ்காலத்தில் வாழ நினைப்பதால், அவரின் பேச்சுகளில் முழுமையாக ஒன்றிவிட எண்ணி, குறிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. குறிப்புகள் என்னை தடுமாற்றத்தில் ஆழ்த்தும். குறிப்பு எடுப்பதால் பேச்சுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமென்பதால் பெரும்பாலும் நான் குறிப்பு எடுப்பதை தவிர்த்து விடுவேன். நான், என் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுவிட்டு எழுதியதை, மாங்கு மாங்கு என்று குறிப்பு எடுத்து எழுதுபவர்கள் கூட பகிரமாட்டார்கள்.  என்ன, அவர்களிடம், சொற்பொழிவாளரின் பேச்சுகளின் போது பகிரப்பட்ட பெயர், ஊர், கதைகளின் தலைப்பு, இடப்பெற்ற சூழல் என அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல் வரும். என்னுடைய பகிர்வில் நான் உள்வாங்கிக்கொண்டது மட்டுமே வெளிப்படும்.

இருப்பினும், என் தம்பிகளான நவீன் மற்றும் தயாஜி இருவரும் சாரு அவர்களின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள் என்பதை நானறிவேன். அவர்களிடமிருந்து விலாவரியான தகவல்கள் வரலாம்.! ஆக, என்னுடைய இப்பகிர்வு மிக மேலோட்டமாகவே இருக்கும். அங்கே நிகழ்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்வுகளில் சாருவை நேரில் சந்தித்ததை மிக அற்புதத் தருணமாகவே கருதுகிறேன்.

பெரிய ஆள் சாரு. நிறைய விஷயங்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றன. நடமாடும் நூல்நிலையமாகவே திகழ்கின்றார். வாழ்க்கையையே வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அர்ப்பணித்தவர்.  இலக்கியத்தின் மேல் அலாதி பிரியம் கொண்டவர். பேச்சில் வசீகரிக்கின்றார். அறவே இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களையும் இலக்கியத்தின் பால் இழுக்கக்கூடிய ஆற்றல் அவரின் பேச்சிற்கு உண்டு. ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உரையாடுவதைப்போல் மிக எளிமையாக கலந்துரையாடினார் எங்களோடு.

அதிக அலட்டல் இல்லாமல் மிக மிக எளிமையாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிகழ்வு அது.  இலக்கிய ஆர்வலர்கள் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர் வருகை புரிந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அதிக விளம்பரம் இல்லாத, எளிய இலக்கிய நிகழ்விற்கு இந்த வருகையாளர் கூட்டம் பெரிய சாதனைதான். அதுவும் தயாஜியின் `புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர்கள் குழு’ என்கிற வட்டத்தின் கீழ் நடத்திய முதல் நிகழ்வு இது.  முதல் முயற்சியே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதே பெரிய வெற்றிதான்.

தொடர்ந்து அவரை வாசித்து (இணையப்பக்கம் மற்றும் அவரின் எட்டு புத்தகங்கள்) வருவதால், சாரு அவர்களின் எழுத்தில் இருக்கின்ற வீரம், கோபம், குளறுபடி, வெறுப்பு, நகைச்சுவை, கிண்டல் கேலி, உள்குத்து விவகாரம், மறைமுக தாக்குதல்கள் எல்லாம் பேச்சில் இல்லை. பேச்சு ஆன்மிகவாதியைப்போல் சாந்தமாகவே இருந்தது. கேள்விகள் கேட்கப்படும் போது, முக பாவனைகள் மாறுகின்றனவா.? என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்? நித்யானந்தா நல்லவரா கெட்டவரா? (நாயகன் பாணியில்). எனக்கு வாசிக்க நேரமேயிருப்பதில்லை, அப்படியே வாசிக்க விருப்பம் வந்தால், என்ன மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கலாம்.? பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும்? உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார்? (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை? பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம்? அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள்? போன்ற கேள்விகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் அவரின் பதில்கள் அனைத்தும் நிறைகுடமாய் நிதானமாகவே வந்தது. எல்லாவற்றிற்கும் உதாரணக்கதைகள் வேறு சொல்லப்பட்டன. அவை அங்கே வருகை புரிந்திருந்த வாசக எழுத்தாளர்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது என்றே சொல்லலாம்.    

உலக இலக்கியவாதிகளின் கதைகளைப் பற்றிப்பேசினார். அவர்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்கினார். தமிழ் இலக்கியம், சீனாவில் பிரபலமாகப்பேசப்பட்ட நாவல் , பிரெஞ்சு கதைகள் ஆங்கில நாவல்கள், ரஷ்ய இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா என பல சுவாரஸ்யமான விஷயங்களைத்தொட்டு மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.

எங்களின் நாட்டு நிலவரத்தைப் பற்றிய ஓர் உண்மையை ஒரே நாளில் கண்டு கொண்டு, போட்டு உடைத்தார். அதாவது, எங்களிடம் தாய் மொழியான தமிழ் உள்ளது, தேசிய மொழியான மலாய் உள்ளது, படித்தவர்களாகத்திகழ்கிறோம் ஆனாலும் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு மிக மிக கம்மியே.. இது ஒரு ஊனம்.  ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பெரிய இழப்பு. என்றார். நிஜமான குற்றச்சாட்டுதான் இது. இங்கே ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சியைப் பெறாமல் சுமாராக தேரியிருந்தாலே போதுமானது, தொடர்ந்து வாய்ப்புகள் வரும், பல்கலைக்கழகமும் செல்லலாம் ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை என்றால், நம்முடைய சான்றிதழ் குப்பைக்குப்போகும். அதற்காகவே மலாய்மொழியில் தீவிர கவனம் செலுத்திப்பயின்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டோம் என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த குறை எங்களுக்கும் தெரிவதால், இப்போதுதான் ஆங்கிலத்தைக் கற்று வருகிறோம், சொந்த முயற்சியில். நாங்கள் பள்ளியில் படிக்கின்ற காலகட்டத்தில் நிலைமை படு மோசமாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அலட்சியப்போக்கு அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலைமை மாறியிருக்கலாம். ! இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. !? நிஜமாலுமே பெரிய இழப்புதான். இது விழிப்புணர்வைக் கொடுக்கக்கூடிய பார்வையே. நன்றி சாரு.

இங்கே சீன உணவகத்தில் ஒரு அற்புதமான உணவைச் சுவைத்ததாகச் சொன்னார். அந்த உணவைப்பற்றி எழுதப்போவதாகவும் சொல்லி பீடிகை போட்டார். என்ன உணவாக இருக்குமென்று நானும் மிக ஆவலாய் காத்திருந்தேன்.!  உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா? சரி அந்த உணவைப் பற்றி அவர் எழுதுவார். அங்கேயே படித்துக்கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கி வேலையைச் செய்யமாட்டேன். சாரு இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வார்.  

தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் இங்கே ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, நான்கு ஐந்து மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன. இதைப்பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. விகடன் குமுதம் அங்கே என்ன விலை? இங்கே என்ன விலை? அதுபோல்தான், அங்குள்ள ரூபாய் விலையை இங்கே அதே போல் பின்பற்றலாகாது, அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். நிலைமை அங்கு வேறு இங்கு வேறு,என்றார். இருந்தபோதிலும் நான் வாங்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறையாவது தமிழ் நாடு சென்றுவருவதால், அங்கேயே எனக்குத் தேவையான அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிக்கொள்வேன்.  இருப்பினும், சாருவின் கையொப்பம் வேண்டி, அங்கே விற்கப்பட்ட அவரின் `தேகம்’ நாவலை வாங்கி, அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.

சந்திப்பில் என்னை பெயர் சொல்லியே அழைத்தார். முதலில் அடையாளங்காணவில்லை, பிறகு அறிமுகமானவுடன், பல நாள் பழகியதுபோல் மிக மரியாதையுடன் நட்பு பாராட்டினார். அருகில் அமரவைத்தார். நிறைய புகைப்படங்களை எடுக்க ஒத்துழைப்பு நல்கினார்.

கணவரையும் உடன் அழைத்துச்சென்றேன். பெரிய எழுத்தாளரெல்லாம் தமது மனைவியிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என நினைத்து கொஞ்சம் அரண்டுத்தான் போனார். வீட்டிற்கு வந்ததிலிருந்து சாருவின் புராணம் ஓயவில்லை. சாருவை பெரிய இலக்கிய ஜாம்பவான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது அவரைப் பற்றிய தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சாருவைப் பற்றிய தகவல்களை இணையத்தில் ஆராயத்துவங்கியுள்ளார். இணையத்தில்தான் தெரியாதா? நல்லனவைகளோடு மோசமானவைகள்தான் தங்கம்போல் மின்னும்.. அநேகமாக எதிர்மறை சிந்தனையையே பிடித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை காரணம் அவருக்கும் வதந்திகள் என்றால் அல்வா சாப்பிடுவதைப்போல்தான். மிகவும் விருப்பமான ஒன்று.

வாசித்து ஒரு எழுத்தாளரைப் புரிந்துகொள்வதை விடுத்து, வதந்திகளைப் பிடித்துக்கொண்டு நல்ல எழுத்தாளரைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாம் ஒண்ணும் செய்யமுடியாது. அது கணவனாகட்டும், சகோதரிகளாகட்டும், நண்பர்களாகட்டும்..! எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.