திங்கள், ஏப்ரல் 15, 2013

பி.பி.ஸ்ரீநிவாஸின் மரணம்

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸின் பரம ரசிகை நான். பைத்தியக்கார ரசிகை என்றுகூட சொல்லலாம். எங்கு அவரின் பாடல்கள் ஒலித்தாலும், என்ன முக்கியமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, அவரின் பாடல்களில் லயித்துவிடுவேன்..
அப்பேர்பட்ட வசீகர குரலுக்குச் சொந்தக்காரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

எங்களின் வானொலி நிலையங்களில்  அன்னாரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்பமாட்டார்கள். பணியில் இருக்கும் அறிவிப்பாளர்களுக்கு எந்த பாடகரைப் பிடிக்கிறதோ அவரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்புவார்கள். ரசிகர்களின் விருப்பங்களுக்கு என்றுமே செவிசாய்க்காத ஒலிபரப்பு நிலையங்கள் எங்களுக்குக்கிடைத்திருப்பது பெரும் துரதிஷ்டமே.

பகலில் இளைஞர்களை கவர்கிறோமென்று ஒரே கூச்சல் பாடல்களும் அதிநவீன பாடல்களும் ஒலிபரப்பாகும். இரவில் பழைய பாடல்களை ஒலிபரப்புகிறேன் பேர்வழி என, எப்போதுமே ஒரே மாதிரியான பாடல்களை ஒலிபரப்பி வெறுப்பேற்றுவார்கள்., மேலும் அப்பாடல்கள் வானொலியில் ஒலியேறுவதற்கு முன், தமது குரல்வளத்தைப் பறைசாற்ற அப்பாடலை இவர்கள் ஒருமுறை பாடிக்காட்டியோ அல்லது அந்த பாடல் வரிகளுக்கு/கவிதைகளுக்கு மொன்னையாக ஓர் விளக்கதையோ கொடுத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கும்போது பாடல்களைத் தொடர்ந்து கேட்கின்ற ஆர்வமே போய்விடுகிறது.

இந்த அலம்பல்களுக்கெல்லாம் வடிகாலாக அமைந்தது `குருவின் இன்பமிங்கே’ என்கிற இசைப்பொக்கிஷ `வெப்சைட்’. முகநூலின் என் இனிய நண்பரின் அறிமுகத்தில் கிடைத்தது இந்த வெப்சைட். எப்பொழுது அந்த வெப்சைட் என் கண்ணில் பட்டதோ, அன்றிலிருந்து வானொலிக்கும் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளர்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வானொலிக்கு பதில் குருவின் இன்பமிங்கே’வைத் தட்டிவிட்டுவிடுவேன். எந்த ஒரு அறுவையான அறிவிப்பும் இல்லாமல், எல்லாவற்றையும் தமிழ் படுத்துகிறேன் என்கிற படுத்துதல் இல்லாமலும், எரிச்சலூட்டுகிற பாடல்களும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் அற்புதமான பாடல்களைக்கேட்டுக்கொண்டே நமது பணிகளைச் செவ்வனே செய்யலாம்.

அங்கே தினமும் விஜயம் செய்துவிடுவேன். பகலில் அலுவலகத்திலும் இரவு நேரங்களில் வீட்டிலும், விடாமல் என்னுடன் இருப்பது இந்த அற்புத இசைத்தொகுப்புதான்.

அவ்வேளைகளில் நான் அதிகம் கேட்பது பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்களைத்தான்.

பக்திப்பாடல்களையும் இவரின் குரலில் ஒலிக்கின்ற பாடல்கள்தான் அதிகாலை நேரங்களில் என் வீட்டில் பக்திப்பரவமூட்டும்.
 

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
பொழுது விடிந்துவிடும்..விடிந்தால்..
ஒடிவதுபோல் இடையிருக்கும்..இருக்கட்டுமே..
தோள் கண்டேன் தோளே கண்டேன்..
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
முன்னழகைக் கண்டுகொண்டால், பெண்களுக்கே ஆசை வரும்..
துள்ளித்திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று..
சந்திப்போமா இன்று சந்திப்போமா..
பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..
போகப்போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்..
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவிற்குப் பெயர் என்ன..
அந்தரங்கம் நானறிவேன்..
அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்..
அழகிய மிதுலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..
கன்னிவேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா..
மாலையும் இரவு சந்திக்கும் இடத்தில்...

i am going crazy on all this songs ...

பி.பி ஸ்ரீநிவாஸ் அவருக்கு மரணமில்லை. தேனிலும் இனிய பாடல்களை என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. அனைத்தும் இறவாப்புகழ் சொல்லும் பாடல்கள். அவரின்
தாலாட்டும் குரலில் மயங்காதோர் உண்டோ..

இங்கே சென்று அந்த இசைமேதையின் பாடல்களைக்கேட்கலாம்..

http://www.inbaminge.com/t/hits/Voice%20of%20P%20B%20Srinivas/

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சாட்டிங்

குடும்பத்தில் உள்ளவர்களின் முகநூல் அக்கவுண்ட்’ஐ தெரிந்துவைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொள்வது வழக்கம். 

நான் என் கணவருடையதையும் அவர் என்னுடையதையும் பார்த்துக்கொள்வோம். பெரும்பாலும் சட்டை செய்வது கிடையாது, இருப்பினும் பார்ப்போம்.

நீண்ட நாள் கழித்து நேற்று அவருடைய அக்கவுண்ட் உள்ளே நுழைந்து என்ன செய்கிறார் என்று பார்த்தேன். சாட்டிங்கில் பகிர்ந்துள்ளதைப் படித்தேன். 

ஒரு பெண்ணிடம் அடிக்கடி சாட் செய்துள்ளார். ஹை.. இருக்கியா? குட் மார்னிங்... சாப்பிட்டாயா? என்ன சாப்பாடு? இவ்னிங் ஃப்ரீயா? பிறந்தநாள் வாழ்த்துகள். பரிசு வேண்டுமா? என்ன பரிசு வேண்டும்... நான் வாங்கித்தரவா? குட் நைட்.. வீட்டில் யாரும் இல்லையா? என இப்படியே... (ஆபாசமாக ஒன்றுமில்லை..) 

என் கணவர் பப் செல்லும் போதெல்லாம் அதிகமாக உளறியிருக்கின்றார் அப்பெண்ணிடம். தண்ணீ மப்பில் அதிக அன்பைப்பொழிந்துகொண்டு... 

அப்போதெல்லாம் அவர் செய்துள்ள சாட்.. ஒரே உளறலாக இருந்துள்ளது. அப்பெண்ணிற்கு குழப்பம்.

சார், நீங்க என்ன சொல்லவறீங்க? ஆங்கிலத்தில் சொல்லவேண்டாம், தமிழில் சொல்லுங்கள்.. புரியல.. மலாய் மொழியில் சொல்லலாமே... என மீண்டும் மீண்டும் சாட்டில் கேள்விகளை அனுப்பிக்கேட்டவண்ணமாக இருந்துள்ளார். 

மறுநாள், மேலே உளறியதை ஒரு பொருட்டாகக் கருதாமல் மீண்டும், சாப்பிட்டியா? வேலை முடிந்துவிட்டதா? வீட்டில் யாரும் இல்லையா? தூங்கலையா? என இவரின் சார்பாக சாட் தொடர்கிறது. 

இதே கேள்வி பரிமாற்றங்கள் தான் தினமும்... போர் அடித்துவிட்டது போலும், இப்போதெல்லாம் அவளிடம் அவ்வளவாக சாட்டில் பிதற்றுவது இல்லை. பதில் போடுவதும் இல்லை. 

ஆனால் அப்பெண் தொடர்ந்து,  இருக்கீங்களா? வேலை முடிந்துவிட்டதா? என்ன பதிலே காணோம்..! சாட் செய்யப்பிடிக்கவில்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுங்கள்.. மௌனம் வேண்டாம்.. !! என தொடர்ந்து மெசெஜ் செய்தவண்ணமாகவே உள்ளார். 

நேற்று நான் இந்த சாட் சமாச்சாரங்களைப் படித்துக்கொண்டிருக்கும் போது, புத்தாண்டு வாழ்த்துகள் சார், என அனுப்பியிருந்தார் அப்பெண். 

நான் பதில் எழுதினேன். 

`புத்தாண்டு வாழ்த்துகள் மேடம். ’

`நலமா?’

`ம்ம் நலம்?’ 

`ரொம்ப நாளா ஆளையே காணோம். !!?’

`ரொம்ப பீஸி மேம்..’

`வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு சார்..’

`ஆடிட் இருப்பதால் தினமும் அதிக வேலை. பேஸ்புக் வருவதில்லை. கவலை வேண்டாம், வந்தால் நிச்சயம் உங்களுக்கு ஒரு ஹை சொல்வேன்.. ஒகே வா?’

`ம்ம் ஒகே சார். தெங்ஸ்..’

`பை..’ 






வியாழன், ஏப்ரல் 11, 2013

இங்கிதம்..

நம்மவர்களின் மனோபாவங்கள் நம்மை எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதனைச்சொல்லும் ஒரு சிறுகதை இது.

கேளுங்க கதையை.;

என்னுடைய கடை வீடு ஒன்றினை விற்பனை செய்வதற்கு நான் ஆள் பார்த்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கில் பலரிடம் சொல்லிவைத்தாகிவிட்டது. அதற்கான நேரம் வராததால், சரியான விலையில் கொடுத்தும், வாங்குபவர்கள் அமையவில்லை.

அந்த வீட்டின் தற்போதைய விலை அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும் வாங்குபவர்கள் நம்மவர்களாக இருந்தால் வாங்கியவிலையை விட கொஞ்சம் கூடுதல் லாபத்தில் விற்கலாமே என்கிற சிந்தனையில் இருந்தேன்.

வீட்டின் விலை, ஐம்பத்தைந்தாயிரம் நான் வாங்கும்போது. பதிநான்கு வருடங்களுக்குமுன். இப்போது அவ்விலை நான்கு மடங்காக உயர்வு கண்டுவிட்டது. எனக்கு நான்கு மடங்கெல்லாம் வேண்டாம். இரண்டு மடங்கில், அதாவது நூறாயிரம் விற்றால் போதுமானது. அவ்விலைக்கும் ஆட்கள் வந்தார்கள், பார்த்தார்கள், சென்றார்கள் பதில் இல்லை.

இப்படி காலதாமதாமாவதற்கு காரணமும் உள்ளது. அதாவது அந்த வட்டாரம் அதிக அளவில் அயல்நாட்டவர்கள் வசிக்கும் கோட்டையாக மாறிப்போனதால், உள்ளூர்வாசிகள் அங்கு தங்குவதற்குத் தயங்குகின்றார்கள். வன்புணர்வு, வழிப்பறிக்கொள்ளை, கொலை, திருட்டு, கடத்தல், விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு அந்த இடத்தின் பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் அடிபடுவதால் நிலைமை மோசமாகிவிட்டது. அங்கே விடுகளை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றார்கள். வாடகைக்கு வேண்டுமானால் விடலாம், அதுவும் அயல்நாட்டவர்களின் மத்தியில் கிராக்கிதான்.

வாடகைக்குக் கொடுத்திருந்தேன்.

இரண்டு நாள்களுக்கு முன் சரோஜா என்கிற ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டு வீட்டின் விலை பற்றி விசாரித்தார்.

“ விஜி தானே, அப்பா நல்ல வேளை நம்பர் இருந்தது. அந்தக் கடை வீடு வித்துட்டீங்களா’ங்க?”

“இன்னும் விற்கவில்லை, சேவாக்கு போய்கிட்டு இருக்கு. ஏங்க வேணுமா?”

“ சேவாக்கு கிடைக்குமா?”

“சேவாக்கு ஆள் இருக்காங்களே, வேணும்னா, வாங்கிக்கோங்க...”

“வாங்கிடுவேன் ஆனா இப்போ பணம் இல்லைங்க. அதான் சேவாக்கு..!!?”

“ சேவாக்கு ஆள் இருக்காங்களேன்.. என்ன செய்ய.?”

“வெளியூர் காரன்தானே, போன்னா போகப்போறான்.”

“அதெல்லாம் முடியாது..வேணும்னா டிப்போர்ஷிட் கொடுத்து புக் பண்ணுங்க, அதற்கப்புறம் சேவா ஆட்களை வெளியேற்றுவதைப்பற்றி பேசலாம். அதே விலைதான். விலையை ஏற்றவில்லை.”

“நான் ஜூலை மாதம்தான் பணம் கொடுக்கமுடியும். என் மகள் பிரைடல் படித்து சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்திட்டா, அந்த ஏரியாவில் ஒரு பிரைடல் ப்யூட்டி பாலர் தொறக்கலாம்ன்னு நினைச்சிருக்கோம். கடைவீடு, ஆள் நடமாட்டம் இருக்கும், மேலே வீட்டிலேயே தங்கிக்கொண்டு, இந்த பிரைடல் ப்யூட்டி பாலரும் நடத்தலாம்ன்னு நினைக்கிறோம்..”

“தாராளமா செய்யலாம், வீட்டை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். வாடகையைப் பற்றிபேசவேண்டாம், வீட்டில் ஆள் இருக்கு..”

“சரிங்க, அப்படியென்றால் வீட்டை ஒரு முறை பார்க்கலாமா?” என்று இரண்டு நாளாக என்னைத்துரத்தியவண்ணமாகவே உள்ளார் சரோஜா.

நேற்று அழைத்துச்சென்று காண்பிக்கலாமென்று முடிவு செய்திருந்தேன்.  கடுமையான மழை. மழையென்றால் மழை அப்பேர்ப்பட்ட பேய்மழை. என்னால் இன்று வர இயலாது, என்பதனை சொல்வதற்கு, நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. மீண்டும் நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. பிறகு அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. பிறகு இருவரும் மாறி மாறி அழைத்தோம் அழைப்பு செல்லவில்லை. கடுமையான மழையின் காரணமாக நெட்வர்க் பிரச்சனை வந்துவிட்டது.அதுமட்டுமல்ல அவர் எனக்கு மிஸ்ட்கால்தான் கொடுக்கின்றார். நான் அழைத்தால் சாவகாசமாகப் பேசுகின்றார். அதிலும் மிச்சம் பிடிக்கின்றார்கள்..என்ன செய்ய.!  

வீட்டிற்கு வந்து தொலைப்பேசியைப் பார்த்தால், பதினைந்து மிஸ்ட் கால்கள். எடுக்காத அழைப்புகள். அழைத்தேன். “நான் அவ்வீட்டின் கடைத்தெரு வாசலில் தான் நின்றுகொண்டிருக்கின்றேன். நீங்கள் எங்கே? ” என்றார் சரோஜா.

மழையின் கடுமையால் வீட்டிற்கு வந்துவிட்டேன் எனவும், நாளை வேண்டுமானால் பார்க்கலாம் என்றேன். இல்லை நான் இங்கே நிற்கின்றேன், நீங்கள் முடிந்தால் இப்பொது வரப்பாருங்கள். என்றார் அம்மணி. மழை மழை கடுமையான மழை நான் இப்போது எங்கும் வரமுடியாது என்று கூறிவும், சரி அப்படியென்றால் நாளை கண்டிப்பாக வரவேண்டும் என்றார்.

இன்று காலையிலிருந்து அழைப்புகள் ஓயவில்லை. ‘யங்க கண்டிப்பா வந்திடுங்க.. கண்டிப்பா வந்திடுங்க.. என நினைவுறுத்தியவண்ணமாக இருந்தார்.  மாலை நேரங்களில் மழை வருவதால், உணவு நேரத்தில் சந்திக்கலாம் என்கிற எனது முடிவைச் சொன்னேன். மதிய உணவு நேரத்தில் வரவேண்டுமென்றால் என்னை அழைத்துவர யாரும் இல்லையே, நீஙகள் வந்து அழைத்துச்செல்கிறீர்களா? என்று கேட்டார்.  மதிய உணவுநேரத்தில் அரக்கப்பறக்க ஒடிவரும் என்னை, அங்கே வா, இங்கே வா என அலைக்கழிக்கவேண்டாம். முடிந்தால் சனி ஞாயிறுகளில் பார்க்கலாம். என்றேன். முடியாதுங்க, எனக்கு அவசரமாக வேண்டும். சரி நானே வந்துவிடுகிறேன். அந்த ஸ்பேர் பார்ட் கடையில் காத்திருப்பேன், அங்கே சந்திக்கலாம் என்றார்.

மதிய உணவு நேரம் வருவதற்குள் காருக்கு விரைந்தேன். பாதிவழி சென்றவுடன் தான் கைப்பேசியை எடுத்துவர மறந்திருந்தேன். அடக்கடவுளே.. எப்படி?

காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு. (கார்களின் வரிசை, நெரிசல் அதிகம்..) சரோஜாவைத்தேடினேன். மூச்சுவாங்க ஓடிவந்தார். உங்களின் காரைப்பார்த்ததிலிருந்து கார் பின்னாலேயே ஓடிவருகிறேன். நீங்கள்தான் என்னைப்பார்க்கவேயில்லை. என்றார்.

ஸ்பேர் பார்ட் கடையில் நிற்பதாகச்சொன்னீர்களே, அங்கே நிற்கவேண்டியதுதானே.! ஏன் இப்படி மூச்சுவாங்க ஓடிவாருவானேன்!!.. கேட்டேன். ஒரு அசட்டுச்சிரிப்பு அவரிடம்..

இருவரும் வீடு பார்க்கக்கிளம்பினோம். வீடு சாத்தியிருக்கிறதே, எப்படிப் பார்ப்பது. ?

இதோ காலியாக இருக்கும் இந்த பக்கத்துவீட்டைப்பாருங்கள் அதுபோலவேதான் இருக்கும் நம் வீடும். வீட்டைப் பார்க்கவேண்டுமென்றால், வாடகைக்கு இருப்பவர்கள் வந்தபிறகு பார்க்கலாம், என்றேன். சம்மதித்தார்.

வீட்டைச்சுற்றிக்காட்டிய பிறகு இருவரும் நடந்து வந்துகொண்டிருக்கும்போது, வழியில் ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன். அவரும் வீட்டைப்பற்றி விசாரித்தார். வீடு என்னாச்சு? வித்துட்டீங்களா? நான் ரொம்ப நாளாக உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பாசாருக்குக்கூட வருவதில்லையே நீங்கள்.! என்னாச்சு? என்று மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். நான் வீடு மாறிப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்கிற விவரத்தைச்சொல்லி, எனது தொலைப்பேசி எண்களைக்கொடுத்தேன்.

சரோஜாவிற்குக் கோபம்வந்துவிட்டது. என்னிடம் வீடு விற்பதாகச்சொல்லிவிட்டு, இப்போது அவரிடம் கொஞ்சுகின்றீர்களே. இதுக்கு என்ன அர்த்தம்?  நான்தான் வீட்டை வாங்குகிறேன் என்றேனே, பிறகு ஏன் அவரிடம் நம்பர் கொடுக்கின்றீர்கள்.! நான் இல்லாத சமையத்தில் ரகசியமாக பேரம் பேசவா? என்றார் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல். எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. என் தோழியும் சுதாகரித்துக்கொண்டு, ஓ..இவங்கதான் பையரா.. ஒகே ஒகே. நான் உங்களிடம் நேரமிருக்கும்போது அழைத்துப் பேசுகின்றேன், என்று சொல்லி இடத்தைக்காலி செய்தார்.

சரோஜாவின் பக்கம் திரும்பி, இது உங்களுக்கே ஓவரா இல்லை.!? நீங்கள் வீடு பார்க்க வந்த்தால் நான் யாரிடமும் பேசக்கூடாதா? இவ்வளவு நாள் வாங்காத வீடு, இப்போ விசாரிக்கும்போதே உடனே வாங்கிவிடுவார்களாக்கும்.. கடுப்பு வந்துவிட்டது. சுதாகரித்துக்கொண்டு.. மதியவேளை என்பதால், உணவு உண்ண சீனக்கடைக்கு நாசிஆயாம் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

சாப்பாடு ஆடர் கொடுத்தாச்சு. சாப்பாடு வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

இப்போதான் சாப்பிட வந்தேன். ஓ..வீடு இருக்கா? எந்த ஏரியா? கடை போடலாமா? என பேச்சு தொடந்தது.

சாப்பாடு வந்தது. “யங்க..யங்க.. நான் அவரசமா வெளியே போகணும், இந்த சாப்பாட்டை புங்குஸ் (பொட்டலம்) பண்ணச்சொல்லுங்க, என்றார். குளிர்பானத்தை மடக்கு மடக்கு என குடித்துமுடித்தவேளையில் காலில் சுடுதண்ணீ ஊற்றியதுபோல் பரபரப்பானார். அங்கு வந்த சீனத்தியிடம், இவரின் தட்டில் உள்ள உணவை பொட்டலங்கட்டச்சொல்லி, அவரிடம் கொடுக்கச்சொன்னேன். பொட்டலத்தை வாங்கியவர், பணம் செலுத்துவதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலையில்லாமல், என்னிடம் நன்றிகூட சொல்லாமல், பொட்டலத்தை வாங்கிய மறுவினாடி மறைந்துபோனார்.

சீனர் கடையில், நான் மட்டும் தனிமையில், நேரமின்னையால், அரக்கப்பறக்க உணவை வாயில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டும் சாப்பிடாமலும் கடையை விட்டு வெளியேறி அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

தாமதம்தான்.. இருப்பினும் பூனைபோல் உள்ளே வந்து அமைதியாக அமர்ந்துகொண்ட்டேன்.

கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். சரோஜா இருபத்தைந்து முறை அழைத்திருந்தார். அழைத்துக்கொண்டும் இருந்தார். நான் எடுக்கவில்லை. என்ன அவசரமாக இருந்தாலும், இனி இவர் தேவையில்லை என்கிற முடிவில் நான்.. !!

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

காலை சூரியன் (மாமிகதை)


மாமிகதை..

தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்தியம் செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. ஒரு நாள் விட்டு மறுநாள் அதே போல் ரணமாகிறது.. தாங்கமுடியாத அரிப்புவேறு பரிதாபம்தான். என்ன செய்ய? சக்கரைவியாதி இருந்தால் தோல் அரிப்பு வருமாம். புண் ஆறுவது கொஞ்சம் கஷ்டமே. மருத்துவரும் சொன்னார்.

ஏற்கனவே தன் தாத்தாவை கவனித்துக்கொண்ட என் தோழி ஒரு ஐடியா கொடுத்தாள்.. காலை சூரியன் தோலில் படும்படி, பத்து அல்லது இருபது நிமிடங்கள் வெயிலில் அமரவைத்துப்பார். கொஞ்சம் நிவாரணம் கிடைக்கலாம் என்றார்.

என் வீட்டு பணிப்பெண்ணிடம், இன்று வேலைக்குக் கிளம்பும்போது, பாட்டியை வெயிலில் கொஞ்சநேரம் அமர வை. என்றேன்.

நான் அலுவலகம் சென்று சேர்வதற்குள் தொலைப்பேசியில் அழைத்தாள்.. அக்கா வெளியே உட்காரவைக்கவா..? என்று.

சாப்பாடு கொடுத்துவிட்டு பிறகு செய், இல்லையேல் மயக்கம் வந்துவிடப்போகிறது, என்று கூறி அழைப்பைத்துண்டித்தேன்.

வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் ...
புகார் செய்தார் மாமி...

யம்மா, மொட்டை வெயிலில் என்னை உட்காரவைத்து வாட்டி எடுத்து விட்டாள். அவளைப் போகச்சொல். நான் போறேன்..

என்னடி ஆச்சு? என்ன பிரச்சனை? ஏன் பாட்டி இவ்வளவு கோபமா..!!! பணிப்பெண்னிடம் கேட்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு , பாட்டியை வெயிலில் உட்காரவைத்தேன்.

உச்சிவெயிலில்...

அடிப்பாவி.. மூட்டாளா நீ? யாராவது மொட்டை வெயிலில் உட்காரவைப்பார்களா?

நீதானே சொன்னாய்.. சாப்பிட்டபிறகு உட்காரவை என்று. அதான் அதேபோல் செய்தேன்.

அடக்கடவுளே....!!!!!

கொழுத்துகிற வெயிலின் கீழ் கிழவியை அமரவைத்து, முகமெல்லாம் கருத்துப்போய் சோர்ந்துதான் போயிருந்தார்.. பாவம்.

நீ இனி ஒண்ணும் செய்யவேண்டாம் தாயி.. எல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கும்பிடுபோட்டேன்.

வேலை சொல்வதைவிட, எருமை மேய்க்கலாம் போலிருக்கு.

வெள்ளி, மார்ச் 29, 2013

கண்ணீர் விட்டேன்.

சென்ற செவ்வாய்க்கிழமை சித்தப்பா இறந்துவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று யாரும் சொல்லவேண்டாம். அனுதாபம்தான் இருப்பினும் கொடுத்துவைத்தவர், வாழ்வை அனுபவித்து, குழந்தைகளையெல்லாம் திருமணம் செய்துவைத்து விட்டு, அப்பா இல்லாத எங்களுக்கும், எல்லா நல்லது கெட்டதிலும் தூணாக துணையாக நின்று, குடும்பங்களின் ஒற்றுமையில் முழுபங்கேற்று, பொறுப்புள்ள ஒரு சித்தப்பாவாகவே (அப்பா - அப்படித்தான் அழைப்போம்)  திகழ்ந்தவர் அப்பா.

சந்தோசமாக வாழ்ந்து, நடமாடிக்கொண்டிருக்கும்போதே நோய் கொண்டுவிட்டது. தம் வலிக்கு தாமே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்து, மருத்துவமனை வாசலிலேயே மயக்கமுற்று மரணமடைந்துள்ளார். 

நோயிற்கு நன்றி.! ஏன் நோயிற்கு நன்றி..!? 

சிலர்  படுத்தப்படுக்கையாகி நரகவேதனையில், மலம் மூத்திரம் போவதுகூட தெரியாமல், ருசி பசி அறியாமல், இரவு எது? பகல் எது என்பது கூட தெரியாமல், பலருக்குப் பாரமாகி இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்றிருப்பார்கள். வாழ்வதற்காக கோவில் சென்ற காலங்கடந்து, சாவிற்காக வேண்டிக்கொள்கிற  இக்கட்டான நிலைக்குக்கொண்டு வந்து விடுவார்கள்.

என் தோழி ஒருவளிடம், என் மாமி படும் நரகவேதனைகளைப் பற்றிப் பகிந்துகொள்வேன். (மாமிக்கு எண்பத்தைந்து வயது, என்னோடுதான் இருக்கின்றார் - வேலைக்காரி வைத்து பார்த்துக்கொள்கிறோம்.)  அவள் கொடுத்த ஒரு ஆலோசனையை நினைத்து, இரண்டு நாட்கள் சிரித்தேன்.

கடையில் விற்பனை செய்யும் கோத்தா பால் (milk in box), அதனின் ப்ரண்ட் பெயரோடு சொன்னாள். அப்பாலை வாங்கி மாரியம்மன் கோவிலில் கொடுத்து, சம்பந்தப்பட்ட முதியவரின் பெயரைச்சொல்லி ஆத்தாவிற்கு அபிஷேகம் செய்தால், வயதானவர்களுக்கு விரைவிலேயே விடுதலை வந்துவிடுமாம். அவர்களின் பாட்டிக்கு அப்படித்தான் செய்தார்களாம். மறுநாளே இறப்பு வந்துவிட்டதாம். (நகைச்சுவைதானே..!)

சித்தப்பாவின் மரணம் துயரம்தான். என் அம்மாவிற்கு பதினாறு வயது இருக்கும்போது, ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தில் முதல் மருமகளாக வாழ்க்கைப்பட்டார்.  தாயிற்குப்பின் என் அம்மாதான் குடும்ப விளக்கு அங்கே. சித்தப்பா அத்தைகளோடு குழந்தைகளான நாங்களும் வளர்ந்தோம் அவ்வீட்டில். கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம்.

என் அப்பா சொல்வார், விவரம் தெரியும் வரை, அப்பாவை அண்ணன் என்றும், அம்மாவை அண்ணி என்றும், சித்தப்பா அத்தைமார்களை பெயர் சொல்லியும் அழைத்துவந்துள்ளோம் என்று.

இதனால் அப்பா குடும்பம் என்றால் மிக நெருக்கம். அவர்களுக்கு எதாவதென்றால் மனம் பதறும். தானாகவே நிகழும் நிகழ்வாக மனதிற்குள்ளேயே மாறியிருக்கும் நிலை அது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், குடும்ப சிக்கல்கள் வந்தாலும், பின்னால் `நீ ச்சீ.. நான் ச்சீ..’ என்று துப்பிக்கொண்டாலும், எதாவதொன்று என்றால் கண்களில் நீர் பொலபொல வென வந்துவிடும்.

மேலும் இறந்துபோன இந்தச் சித்தப்பா என்பவர், எல்லா உறவுகளுக்குள்ளும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பவர். திருமணமா? அவர்தான் வேட்டி ஜிப்பாவோடு, முதல் ஆள். மரணமா.? அவர்தான் காரியம் நடத்துவதற்கு, அதை எடு, இதை எடு, அடுத்தக்கட்ட வேலைகள் என்ன.! என்பதற்கு வழிகாட்டியாக இருப்பவர். (எழுதும்போதே நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன.)

காமாலை நோய். வயிறு பெரிதாகிக்கொண்டே வந்தது. உடல் மெளிந்துகொண்டே போனது. பற்கள் மஞ்சள், கண்கள் மஞ்சளைப்பூசிக்கொண்டது போறதொரு மஞ்சள். அப்படிப்பட்ட மஞ்சள். அந்த நோவுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், விருந்து விஷேசங்களுக்கு மக்கர் செய்து தாமதமாக வந்தாலும், ஆஜராகிவிடுவார் அப்பா.

எல்லா உறவுகளின் விஷேசங்களிலும் இருப்பார். மனதில் வைத்து பழிவாங்குதல் போன்ற அற்ப எண்ணங்கள் இல்லாதவர். மொத்தத்தில் மிக நல்ல மனிதர். இறப்பிற்கு வந்தவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் இது.

மருத்துவமனையும் மருந்தும் கையுமாக அலைந்துகொண்டிருந்தார். தொலைப்பேசியில் பேசிக்கொள்வோம். “உனக்காம்மா அழைத்தேன், தவறுதலாக அழைத்துவிட்டேன் போலிருக்கு. சரி அதுகிடக்கட்டும் கழுதை, அப்பாவ வந்து பார்க்கலையா? பணம் கிணம் இருந்தா கொடு. மருமகனுக்கு தெரியவேண்டாம்.. என்பார். மெனக்கட்டு பணம் எல்லாம் அனுப்பியதில்லை. பார்க்கும்போது அஞ்சோ பத்தோ கையில் கொடுப்போம். அவ்வளவுதான். இறந்துவிட்டார் என்பதற்காக அள்ளியள்ளி கொடுத்தோம் என்றெல்லாம் கதை விடுவது தேவையற்றது.

மருத்துவமனையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், அப்பாவின் கைப்பேசிக்கு அழைத்தேன். அம்மாதான் எடுத்தார். அழுதுக்கொண்டே பேசினார்.  `உ..ங்...க....ப்ப்பா.. உங்...கப்பா... ந...ம்...ம..ல விட்டுட்டுட்டூ.. போயிடுவார்...ர்ர்..ர்ர்..ன்னு ப..ப..ய..ம்ம்மா இருக்கும்ம்ம்மா..’ என்றார். ஆறுதல் சொன்னேன். எனக்கு அழுகையே வரவில்லை. `இரவு ஆஸ்பித்திரிக்கு வரேன்ம்மா.’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தேன்.

பிறகு இரண்டு மணிநேரங்கழித்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு தொடர் அழைப்பு.. உறவுகளுக்கு மத்தியில் தீப்போல் பரவியது செய்தி.
அன்றிரவே உறவுகளின் படையெடுப்பு. அந்த சிறிய விடே நிறைந்துவிட்டது.

அப்பாவின் வீடு ப்ளாட் வீடு. வீடு ஐந்தாவது மாடியில் உள்ளது. படியேறித்தான் போகவேண்டும். லிஃப்ட் இல்லை. செய்தி கேட்ட மறு நொடியில் பலர் அங்கே குவிந்துவிட்டனர். எனக்கு முன், என் தம்பி தங்கைகள் எல்லோரும் மிக விரைவாக சென்றுவிட்டார்கள். காரில் செல்லும்போதே, கண்ணீரோடுதான் சென்றேன். நம்மைப் பார்த்தவுடன் என்ன ரகளையாகுமோ என்கிற சிந்தனையில்..

நம்மவர்கள் உறவுகளோடு பின்னிப்பிணைபவர்கள். இதுபோன்ற துக்க நிக்ழ்வில், மிக நெருக்கமானவர்களோடு, நடந்தவற்றைச் சொல்லி அழுது மற்றவர்களையும் அழவைத்து விடுவார்கள்.

காரைவிட்டு இறங்கியவுடன், அப்பாவின் முகத்தைக் கண்டு கண்ணீர் விட வேகவேகமாக படியேறினேன். நான்காவது மாடியிலேயே கண்ணைக்கட்டியது. மூச்சு வாங்கியது. நிற்க மனமில்லை, தொடர்ந்தேன் வேக வேகமாக.. வீட்டு வாசலையடைந்தேன். என்னைப் பார்த்தவுடன், சின்னம்மா.. 

“வா விஜயா, நீ போன் பேசும் போது அப்பாவின் உயிர்போச்சு, ஆனால் டாக்டர்கள் அந்தச் செய்தியை என்னிடம் சொல்லவில்லை, எனக்குத்தெரிஞ்சு போச்சு.” என கதற ஆரம்பித்தார். நான் என்ன செய்வேன்.! எனக்குத்தான் மூச்சு வாங்குதே. புஸ் புஸ் புஸ்.. என மூச்சு விட்டேன். அழுகையே வரவில்லை. முகத்தை மூடிக்கொண்டு சமையலறை பக்கம் சென்று கொஞ்சம் நீர் பருகிவிட்டு வந்தேன். சுமாராக இருந்தது. அழுகை சுத்தமாக நின்றுபோனது. அமைதியாக வந்து தலைமாட்டில் அமர்ந்துகொண்டேன்.

அதன் பிறகு என் அம்மா வந்தார், என் அம்மாவைப்பார்த்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு.. `அக்கா வரார், அக்கா வரார்..’ என. அம்மா நுழைந்தவுடனும் அதே போல்தான்.  “அக்கா, பாருங்கக்கா உங்கள் செல்லக்கொழுந்தனை..” என்று கதறினார் சின்னம்மா. அம்மானாலும் அழ முடியவில்லை. விடுகிற மூச்சு, குறட்டையொலி போல் கேட்க ஆரம்பித்தது. திணறினார். கண்களில் நீரே வரவில்லை. அடுத்தடுத்து வருகிற அனைத்து உறவினர்களுக்கும் இதே நிலைதான். படியேறிய களைப்பில், மூச்சுத்திணறல் வந்து, கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என கேட்க ஆரம்பித்து விட்டனர். யாராலும் அழமுடியவில்லை.

முதலில் சந்திக்கின்ற தருணம், அழுகை வரவில்லை என்றால், அதன் பிறகும் வராது. சுதாகரித்துக்கொண்டு, மூச்சுவாங்குதல் நின்றவுடன் சாவகாசமாக அழலாம் என்றால், அதில் ஒரு வித நடிப்பு கலந்து விடும். ஆக, ஏறிய களைப்பில் நீர் பருகிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர் எல்லோரும். யாரும் அழவில்லை.

என் மற்றொரு சித்தப்பா மனைவி வந்தார். அவர் நன்றாக அழுகிறவர். அவர் அழுதால் எல்லோரும் அழுதுவிடுவார்கள். எல்லோரையும் அழவைத்துவிடுவார். மேலும், இறந்த இந்த சித்தப்பாவும் அவரும் உற்ற நண்பர்கள். அடித்து அடித்து விளையாடிக்கொள்வார்கள். அந்த சின்னம்மா வந்தால் இன்னும் ரகளையாகுமே என நாங்களும் காத்திருந்தோம். வந்தார். வந்தவர், நேராக சமையற்கட்டு பக்கம் சென்று என்னை அழைத்து, பெருவிரலை வாயின் பக்கம் வைத்து, சமிக்ஞையில் தண்ணீர் கேட்டார். 

தண்ணீர் குடித்து அமர்ந்த அவரிடம். “ம்மா ஒகே வா?” என்றேன்.

“ஒகேதான் புள்ள, என்னன்னமோ கற்பனை செய்து வந்தால், வாங்கின மூச்சில், கண்ணீரே வத்திப்போச்சு. மூச்சு எரைக்கிது, கால் கையெல்லாம் உதறுது.. எதுவுமே யோசிக்கமுடியல..” என்றார். ஆஸ்த்மா வியாதிக்காரர்களுக்கு வரும் மூச்சு போல், புஸ் புஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவருக்கு.

அப்போது நான் கண்ணீர் விட்டேன். சோகத்தில் அல்ல, துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக சிரித்ததால் வந்த கண்ணீர் அது. ஒரே மாதிரியான அனுபவம் 

எழவு வீட்டில் என்ன சிரிப்புன்னு யாரும் கேட்டுவிடக்கூடாது பாருங்க...!!

ஒரு அற்புதத் தத்துவம் மின்னியது- நம் உடம்பு சோர்வாக இருக்கும்போது, நம்மால், பிறருக்காக அழ முடியாது.


   

ஞாயிறு, மார்ச் 24, 2013

குழந்தை மனசு

பாலர் பள்ளி மாணவி ஒருவளிடம், அவளின் ஆசிரியர், happy family என்கிற தலைப்பைக்கொடுத்து படம் வரைந்து கொண்டுவரச் சொல்லியிருக்கின்றார். 

மாணவி வீட்டிற்கு வந்து, படம் வரைகிறார். கலர் அடிக்கிறார். குடும்பத்தில் அப்பா,அம்மா, அண்ணன் இவள் என நான்கு பேர்தான். ஆனால் அவள் ஐந்து பேரை வரைந்து கலர் அடிக்கின்றாள். 

அவளின் அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், மகளின் புத்தகத்தை வாங்கி பரிசோதிப்பார். இந்த happy family படத்தைப்பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சி.

“என்ன நீ, நாம் நான்குபேர் கொண்ட குடும்பத்தில், ஐந்து பேரை வரைந்திருக்கின்றாய்?” என்று சொல்லி, ஐந்து பேரில் ஒருவரை அழித்துள்ளார்.

குழந்தை ஹிஸ்தீரியா வந்ததுபோல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழ ஆரம்பிக்கிறது. புத்தகத்தையெல்லாம் விட்டு வீசுகிறது, நான் இனி பள்ளிக்குப் போகமாட்டேன். நீ ஏன் அந்த ஐந்தாவது நபரை அழித்தாய். வரை வரை மீண்டும் வரை என ஒரே கூச்சல்.

தாயிற்குக் குழப்பம்.! என்னாச்சு இவளுக்கு? யார் அந்த ஐந்தாவது நபர் என்று கேட்டதற்கு..

காக்கா, அவளும் நம் குடும்பம், அவர்தான் எனக்கு சோறு ஊட்டுகிறார். அவரையும் சேர்க்கவேண்டும் என அடம் பிடித்து, பழையபடி வரைந்து கொடுத்தவுடன்தான், குழந்தை அமைதியானாளாம்.

காக்கா - இந்தோனிசிய பணிப்பெண். (உண்மைக்கதை)

சனி, மார்ச் 23, 2013

மார்பகப்புற்று


நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வேலைக்குச் செல்லும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆண் பெண் பேதமின்றி இந்த சலுகையை எங்களின் அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது. வவுச்சர் வடிவில். ஐநூறு ரிங்கிட் பெருமானமுள்ள வவுச்சர் அது.

இன்று நான் சென்று வந்தேன். ப்பெஸ்மியர், மெமொஃக்ரம், இரத்தப்பரிசோதனை என அரை நாள் அதிலேயே கழிந்தது என் பொழுது.

பெயரில்லாமல் வந்த அந்த வவுச்சரை யாருக்காவது கொடுத்து விடலாம் என்றிருந்தேன், காரணம், நம் உடலை நம்மால் படிக்கமுடிந்தால், நோய் குறித்த அச்சம் தேவையில்லை என்றே தோன்றியது.. என் உடல் ஆரோக்கியம் குறித்த அபார நம்பிக்கையில் நான் எப்போதும்.

அந்த வவுச்சரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பையிலேயே வைத்திருந்தேன். யாருக்குக்கொடுக்கலாம் என்கிற யோசனையில்..!!

இரண்டு நாட்களுக்கு முன், என் சக ஊழியரின் தாய் இறந்து விட்டார். தெரியும் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று, இருப்பினும் நோய் என்ன என்பது பற்றித்தெரியாது. எதோ கேஸ்ட்ர்க் வலியின் முற்றிய நிலை என்றார் தோழி. நிலைமை படு மோசமாகவே, அரசாங்க மருத்துவமனைக்குக் அழைத்துச்சென்றுள்ளார்கள். அங்கே கண்டுபிடிக்கப்பட்டது பிரச்சனை என்னவென்று.!

இறப்பிற்குச்சென்றேன்.. பிரச்சனை என்னவென்றால் மார்பகப்புற்றுநோய். நோய்க்கிருமிகள் மூளைக்குப்பரவி விட்டது. மோசமான நிலையில் உள்ளார் நோயாளி என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.

நோயாளி, பல கிளினிக் வாசல்கள் ஏறி இறங்கிய நிலையில், இதை ஏன் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை?

சாதாரண சுகாதாரப் பரிசோதனையால் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கமுடியாது. முறையான பரிசோதனைக்குச்செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, இடித்துபோய் விட்டார் தோழியின் அப்பா. மரணமடைந்த மாதுவின் கணவர். தப்பு பண்ணிவிட்டேனே என வேதனையடைந்தார். கதறினார். (குடும்ப நண்பர்தான்)

இந்த செய்தி என்னை உறுத்தவே, கையில் உள்ள வவுச்சரை எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன்.

தோழிகளே, ஒரு முறையாவது MAMMOGRAM பரிசோதனைக்குச்செல்லுங்கள். தோழிகளின் கணவன்மார்களே, மனைவிமார்களை அழைத்துச்சென்று முறையான பரிசோதனை செய்ய ஆவன செய்யுங்கள்.

ஆரோக்கியமே வளம்.