ஞாயிறு, மார்ச் 02, 2014

எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் மறைவு

ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற அரசியல் வரலாற்றுப்பின்னணியில் படைக்கப்பட்ட நாவல் மற்றும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்... 

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், நூற்றுக்கணக்கான தொடர்கள், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் உலக சினிமா கட்டுரைகள்.. பத்திரிகையாளர், ஊடகவியலாளர், என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் (அதற்கு மேலும்) ஊடகத்துறையில் இருந்து வருபவருமான...

தலைசிறந்த இலக்கியவாதி என்கிற மகுடத்தை, மலேசிய பத்திரிகைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய மறைந்த ஆதிகுமணன் அவர்களின் மூலமாக மனப்பூர்வமாக சூட்டப்பற்ற இலக்கியவாதியுமான...

தமிழகத்தில் கரிகால சோழன் விருது பெற்றவருமான...

இறக்கும் இறுதி மூச்சுவரை பத்திரிகைத்துறை மற்றும் நாடக டாக்குமெண்டரி தயாரிப்பு என தமது பொழுதினை இலக்கியம் எழுத்து என்கிற வட்டத்திற்குள்ளேயே அமைத்துக்கொண்ட துடிப்புமிக்க தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பாசிரியருமான...

எனது இனிய நண்பருமான...

திரு. ப.சந்திரகாந்தம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்.

மாமிகதை - விடியல்

இரவெல்லாம் அழைத்து அழைத்து தொல்லை செய்த மாமியின் செய்கை இரண்டு நாட்களாக விசித்திரமாகவே இருக்கின்றது. விடியற்காலை நான்கு மணிக்கு நான் வெளியே அமர்கிறேனே என்கிறார். வெளியே யாரும் இல்லை, என்றதிற்கு, பரவாயில்லை நான் அமர்கிறேன் என்று அடம்பிடித்தார். சரி வாருங்கள் என்று வெளியே அழைத்துச்சென்ற போது..

“ அய்யோ.. என்ன இன்னும்விடியவில்லை.? இருட்டாக இருக்கிறதே.. !!?” என்கிற முனகல், சலிப்புடன்.. 

இன்றைய கச்சேரி என்னாகுமோ தெரியவில்லை. நாளைக்கு வேலை. இரண்டு நாள் விடுமுறை பொழுது மாமியிடம் மல்லுக்கட்டுவதிலேயே முடிவடைந்தது.

வேலைக்குக் கிளம்பிச் செல்லுகையில், என்னுடைய யூனிபர்ம்’ஐ இறுக்கிப்பிடித்துக்கொண்டு, வேலைக்குச்செல்லாதே, என்பார்.

பரிதாபம் என்பதைவிட, கோபம் ஜாஸ்தியாக வருகிறது.. சிலவேளைகளில் எனக்கு.!

சனி, பிப்ரவரி 22, 2014

நாய்கள் விற்பனைக்கு

கூண்டுக்குள் விடப்பட்ட நாய்
வாலாட்டிக்கொண்டே இருந்தது
எஜமானனைக் கண்டுபிடிக்க..

வியாழன், பிப்ரவரி 20, 2014

நிழலாய்....

பிரமுகர் வருகை
பெரிய ஆட்களின் முற்றுகை
பார்வை பட முண்டியடிப்பு
புகைப்படக்கருவிகளின் மின்னல் கீற்று
அங்கே நானும் இருந்தேன்
கண்ணாடி நிழலில்... 

புதன், பிப்ரவரி 19, 2014

இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு

பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை என்கிற செய்தி கிடைத்த அன்றைய காலைவேளையை நினைத்துப்பார்க்கிறேன்.

காலைத் துயில் எழுந்தவுடன் தலையைச் சொரிந்துகொண்டு வானொலியை முடுக்கிவிடுவது அப்போதைய அன்றாட கடமைகளில் ஒன்று. 

அன்றைய காலை செய்தி, பாதிநேரம் அவரின் படுகொலை பற்றியதுதான். 

கணவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார். அவருக்கு செய்தி தெரியாது. தற்போதைய சூழல்போல் கைப்பேசி இருந்திருந்தால், அவரிடம் சொல்லி ஆறுதல் தேடியிருப்பேன். பேரதிர்ச்சியாக இருந்தது இச்செய்தி.. படுபாவிகளா.. அழகிய முகத்தை வெடிவைத்துவிட்டார்களே.. என்று வேதனையாக இருந்தது.

ஐய்யோ.. என்ன கொடுமை. என்கிற வேதனை முனகலோடு வாசலுக்கு விரைந்தேன். எதிர்விட்டு பெரியவர் அவரின் வீட்டுவாசலில், மண்வெட்டியால் நிலத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.

விடியலை நோக்கி காத்திருக்கும் இருட்டிய காலைப் பொழுது அது. சுறுட்டோ சிகரட்டோ தெரியவில்லை, புகைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக அவரின் பூந்தோட்டத்தில் என்னமோ செய்துகொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

`பெரியப்பா.. பெரியப்பா..’

`என்னம்மா.. காலையிலே..’

`ரஜீவ் காந்தியை குண்டு வைத்து கொலை செய்துவிட்டார்களாம்..’

`யாரவன்?’

` நேரு பேரன். இந்திராகாந்தி மகன். இந்தியாவோட பிரதமர்.’

`அய்யோ.. என்னமா சொல்றே? அவரா? என்னாச்சு? அய்யோ. நிஜமாவா? யம்ம புரளியா இருக்கப்போவுதும்மா.. நில்லு நில்லு நான் பேப்பர பார்த்துட்டுத்தான் சொல்லணும் .. நம்ப முடியல.. கடவுளே. என்ன அநியாயமா இருக்கு..’ என்று முனகிக்கொண்டே, மண்வெட்டியை கோபமாக கடாசி விட்டு உள்ளே போனார் வேகமாக..

நான், பக்கத்துவீட்டில் பூஜை செய்ய வெளியே வந்த ரோஷியின் அம்மாவிடம்.. இது குறித்து மேலும் தகவல் அறிய பேச்சுக்கொடுத்தேன்..

`ஆமாம் என் மகன் சொல்லிக்கொண்டிருந்தார்.. ச்சே.. குண்டு வெடித்தது, அதுவும் தமிழ்நாட்டிலாம் .. நம்மவர்கள் வைத்த குண்டாம். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. எதும் செய்தி கிடைத்தால்.. சொல்லு.. நானும் சொல்றேன். கவலைதான்.. போ, வேலைக்குக் கிளம்பு..’ என்று சொல்லி, மணியடித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

மறக்கமுடியாத நாள். அன்றுமுழுக்க மலேசிய மண்ணில் இந்தச் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு அது அப்படியே அமுங்கிப்போனது.

முன்பு பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சிகள் கொண்டுவரும் செய்திதான்.. அதுகூட, இந்தியாவில் எப்படித்திரித்து செய்தி பகிரப் படுகிறதோ, அதே மாதிரிதான் இங்கேயும் வரும். கூட்டிக்குறைத்து எல்லாம் இருக்காது. ஒட்டுமொத்த அவலத்திற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று செய்திகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. பிரபாகரன், நளினி போன்றோர்களின் பெயர் புகைப்படங்கள் அதிகமாக வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. நாங்களும் நம்பினோம். காரணம் உண்மைச் செய்திகளைவிட, பரபரப்புச்செய்திகள்தான் அதிகம்.

தமிழ்நாட்டில் அப்போது ஜெயா ஆட்சி என்றுதான் நினைக்கிறேன். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

அப்போது என்மகளுக்கு இரண்டுவயது. இருபத்திமூன்றுவருடங்கள் கடந்துவிட்டன.

மூவருக்கு விடுதலை. இருபத்துமூன்று வருட சிறைவாசத்திற்குப்பிறகு...

வாழ்த்துகள்..

திங்கள், பிப்ரவரி 17, 2014

காதலுக்கு எதிர்ப்பு

பெண்ணிற்கு நீ சரியான ஜோடிதான்
குடும்ப உறுப்பினர்கள்..
உன்னை மருமகனே என்பதற்கு
உன்னை மாமா என்பதற்கு
உன்னை சித்தப்பா என்பதற்கு
உன்னை பெரியப்பா என்பதற்கு
உன்னை மச்சான் என்பதற்கு
உன்னை மகனே என்பதற்கு
உன்னை பேரா என்பதற்கு
உன்னை கொழுந்தனே என்பதற்கு
உன்னை அண்ணா என்பதற்கு
நீ சரியான ஆளா?
ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள்
ஜாதி பார்க்கவில்லை
காதலுக்கு எதிரியும் அல்ல
ஆனாலும் திருமணம்  நடக்காமல் போகலாம்..

புதன், பிப்ரவரி 12, 2014

கவிதை, கேள்வி. விளக்கம்..

புரிகின்ற கவிதைகளை எல்லாம் நல்ல கவிதைகள் என்று யாரும் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் புரியாத கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல என்கிற அறியாமை வட்டத்திற்குள் புகுந்துகொள்வதும் சரியில்லை.

எழுத்துவடிவில் சொல்லப்பட்ட புரியாத சில விஷயங்களில் எனது புரிதல் குறித்து, `என்னமோ சொல்லவருகிறார்களே, நமக்குத்தான் புரியவில்லை போலும்..’ என்று பலமுறை அதை மீள்வாசிப்பு செய்து, புரிய முயன்று தோற்று,எனது புரிதல் அறிவை நானே நொந்துகொண்ட அனுபவமும் உண்டு. கவனிக்க *மழுங்கிய நிலையிலான எனது புரிதல் அறிவு..*

கவிதை குறித்து எந்த முன்முடிவும் எடுக்காமல், நமது புரிதல் அறிவை நாமே ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டினால், எனக்குப் புரியாதது மற்றவர்களுக்கும் புரியாது, அல்லது, நான் புரிந்துகொண்டதுதான் மற்றவர்களுக்கும் புரியும் என்கிற நிருபர் கண்ணோட்டப் புரிதல் விலகும்.

செய்தி சேகரித்து, அதை அப்படியே எழுதி மக்களுக்கு விளங்க வைப்பதும், ஆழ்ந்த வாசிப்பில், சிக்கலான வாழ்க்கைச்சூழலில் சிக்குண்ட மனம் உதிக்கின்ற கவிதை அல்லது இலக்கியப் படைப்பு என்பதும் முற்றிலும் வேறானது. கடினமான படைப்பிலக்கிய வாசிப்பு என்று தனியொரு வாசகன் முயலாதவரை,அதுமாதிரியான முயற்சிகள் மேலும் தொடராதவரை, நவீன எழுத்து கவிதை குறித்த நாலாந்தர விமர்சனங்கள் நம் இலக்கியச்சூழலில் `எழுத்தாளர்கள்’ என்கிற முகமூடிகளால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற கெடுபிடிகள் இலக்கிய உலகிற்கு அவசியம் என்றே தோன்றுகிறது. காரணம், இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றபோதுதானே, இவ்வளவு அழகான தெளிவான கலைப்படைப்புகள் உங்களின் (நவீன் மற்றும் வல்லின குழு) மூலமாக உயிர்ப்பெற்று ஜனிக்கிறது.

இக்கட்டுரையின் மூல சாரத்தை வெட்டியோ அல்லது இதில் குறைபாடுகள் உள்ளது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோ தர்க்கம் செய்ய யாராவது முன்வருவார்களா? வரத்தான் முடியுமா? (முடியும், வெட்டியாக மொண்ணையான கருத்துகளை முகநூலில் பதிவேற்றி, அதை விவாதிக்க `ஆமாம் சாமி’ போடுகிற கூட்டத்தைத் திரட்டி, தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள்.) `கடவுளின் மலம்’ என்கிற கவிதை நாறவில்லை. ஆனால், அக்கவிதை குறித்த விமர்சன எழுத்துக்களின் கீழ் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலில், உலகிற்கே படம்பிடித்துக்காட்டினார்கள்.. அவரவர் அறியாமையின் உச்சநிலையின் அடையாளங்களை..) என்னக் கொடுமை.!

நவீன கவிதை ஒன்றினை வாசிக்கின்றீர்கள். புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்.? நான் இப்படிச் செய்து புரிந்துகொள்ள முயல்வேன்.

நம்மைச்சுற்றி நடந்த, நடக்கின்ற, மனதை உலுக்கிய அல்லது பாதித்த அரசியல் நிகழ்வையோ, அல்லது சமுதாய சீர்க்கேட்டு நிகழ்வையோ அல்லது எதாவதொரு அவலத்தையோ மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.. கவிதையில் வருகிற வரிகளை அதே அர்த்தத்தில் தட்டையாக வாசித்து புரிந்துகொள்ளாமல், நடந்த அவலங்களோடு கொஞ்சம் மெனக்கெட்டு ஒப்பிட்டுப் பார்த்து உள்வாங்கி, பிறகு இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி வாசித்து,கவிதையின் உள்ளர்த்தக் கருத்துகளை விளங்கிக்கொள்ள முயல்வேன்.

புரிந்தபின் அதனின் மூலக்காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லது நடந்த குறிப்பிட்ட நிகழ்வாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிதல் என்பது அங்கே ஒரே மாதிரியாகத்தான் நிகழும். இது வயப்பட, நாம், நம்மைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை சுரணை உணர்வுடன் விழிப்புநிலையில் அணுக பழகிக்கொள்ளவேண்டும். இவ்வுணர்வு வருவதற்கு,பரவலான வாசிப்பு அனுபவமும் அவசியம் தேவைப்படுகிறது. இது என்னைப்போன்ற பாமரனுக்கும் சாத்தியம். ஆனால் நடப்பது என்னவென்றால்; இங்கே, நமது வாசிப்பின் விழிப்பு மற்றும் சுரணை உணர்வு என்பது, உள்ளூர் பத்திரிகை வாசிகள் ஜீரணிக்கமுடியாமல் வாந்தி எடுக்கின்ற உணர்ச்சிப்பூர்வ செய்திகளாலே தூண்டப்பட்டுகிறது. அதன்பின் நடப்பது என்ன? `நான் ச்சீ, நீ ச்சீ’ என நம்மை நாமே தூற்றிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதுதான். நண்டுகதை என்பார்களே அதுபோல்.

# பி.கு- மறைமுகமாக அவலத்தைச்சொல்லுகின்ற கவிதைகளில் - எனது வாசிப்பு பெரும்பாலும்.. #