திங்கள், டிசம்பர் 19, 2011

இரவிந்திரநாத் தாகூர் ஓர் அறிமுகம்

எங்க ஊர் சிற்றிதழில்,  அண்ணன் (திரு கண்ணன்) அவர்கள் இரவிந்திரநாத் தாகூர் பற்றிய ஓர் கேள்வியை எழுப்பினார்.  அதற்கு நான் செய்த ஒரு சிறிய அறிமுகம் தான் இது. 2008யில் வந்தது.

கண்ணா அண்ணனின் கேள்விற்கு எனது சிறிய அறிமுகம். இரவிந்திரநாத் பற்றிய விவரம் எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும் அவருடைய கவிதை புத்தகம் ஒன்று என்னிடத்தில் உள்ளது. அதைப் பகிர்ந்துக்கொள்வோமே..!

ஓஷோவின், ’மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் போது, இரவிந்திரநாத் தாகூரைப்பற்றிய தகவல் ஒன்றை இடைச்சருகலாக நுழைத்திருப்பார். அதாவது, காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கோவில்களையும் சிற்பங்களையும் அன்றைய ஆட்சியாளர்கள் அழிப்பதற்கு ஆயத்தமானபோது, அதற்குக் கடும் எதிர்ப்பை வழங்கியவர் இந்த இரவிந்திரநாத் தாகூர் தான் என்று சொல்லியபோது, எனக்கு அவரைப்பற்றிய தேடலில் ஆர்வம் பிறந்தது. அப்போது கண்டெடுத்த புத்தகம்தான் தாகூரின் ‘ஏகாந்தப்பறவைகள்’.  படித்தேன் பரவசமடைந்தேன்.

கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, ஓவியம், இசை, மேடைப்பேச்சு, என பல துறைகளில் ஆழமான, அழகான, அறிவார்ந்த புதிய சிந்தனைகளை காலத்தை வெல்லும் படைப்பாக படைத்து, வங்கமொழி இலக்கியதிற்கு வளமூட்டிய ஒரு மகாகவி.

அவரது பாடல்களைப் பாடாத வங்க இல்லமே இல்லை எனும் அளவிற்கு, கொடிக்கடிப்பறந்த ஒரு வங்க கவிஞர். அவரின் கவிதைகள் சில......

‘அழகே நீ உன்னைக்
காதலில் அடையாளம் கண்டுக்கொள்.
கண்ணாடி காட்டும் பொய்ப்பாராட்டில்
இல்லை உனது அடையாளம்!’

‘என் வீட்டிற்குள் வர
உன்னை நான் அழைக்க மாட்டேன்
எனது நேசனே,
எல்லையற்ற என் தனிமைக்கு வா!’

‘உனது அமைதியின்
மையத்திற்கு என்னை அழைத்துப்போ,
என் இதயத்தை
உன் பாடல்கள் கொண்டு நிறைக்க!’

‘ஒரு சொல்லை
எனக்காக வைத்திரு
உனது மௌனத்தில்
நான் இறந்தபிறகு சொல் அதை
‘நான் நேசித்தேன்’ என்று!’

‘இதுவே
எனது கடைசி வார்த்தையாக
இருக்கட்டும் -
“ உன் அன்பில்தான்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” !’...........

காதலை மிக அழகாகச் சொல்லும் கவிதைகள் இவை. வாசிப்போரின்  மனதைக்கொள்ளைக் கொள்ளும் ஆற்றல் இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியுமா என்ன.!

நன்றி:  தென்றல் (வார இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக