வியாழன், ஜனவரி 26, 2012

எனது வினா.?

வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்
எழுதுகிறார்கள்
முத்திரை பதிக்க

ஒரு வரி
இரு வரி
பல வரிகள்

ஒரே ஒரு
வரியில் இருந்தால்
’குறிப்பு’
என்கிறார்கள்


வார்த்தைகள்
போதிக்கும் போது
’தத்துவம்’
என்கிறார்கள்

இரண்டு வரிகளில்
சொல்லிவிட்டால்
நவீன ’குறள்’
என்கிறார்கள்.

இடையிடையே
கோடுகள் இட்டு
தமிழை
அழகு படச் சொன்னால்
’மரபு’
என்கிறார்கள்

சொற்களைப் பிய்த்து பிரித்து
மேலும் கீழும்
அடுக்கும் போது
’கவிதை’
என்கிறார்கள்

மனதை வசீகரிக்கும்
வாசகங்களை
’புதுக்கவிதை’
என்கிறார்கள்

ஒட்டுமொத்தமாக
நீளும் போது
’கட்டுரை’
என்கிறார்கள்

பக்கம் பக்கமானால்
’கதை’யாகிறது

அத்தியாயம்
அத்தியாயமானால்
’நாவலாகி’....
இலக்காகி
இலக்கியமாகிறது

வெறும் வார்த்தைகள்
இப்படி வேறுபட்டு நின்றாலும்
குமுறல்களுக்கு
இதுதான்
மொழி

மற்றொரு குமுறல்
ஒற்றை வரியோடு
எனது வினா..
எது இலக்கியம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக