செவ்வாய், மார்ச் 20, 2012

காலநேரம்


மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். மாமி அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமியின் கிட்னி ரெண்டும் பழுதாகிவிட்டதால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஒரு குழாயும் இடது கையில் ஒரு குழாயும் பொருத்தி, ஒன்றினில் நீர் இறங்கிக்கொண்டும், ஒன்றினில் நீர் வெளியேறிக்கொண்டும் இருந்தது. இரண்டு கால்களிலும் புண். நடக்க முடியாதபடி கால்கள் வீங்கியவண்ணமாகவே இருந்தன. மருத்துவமனை ஸ்பெஷலிஸ்ட் என்பதால், நல்ல கண்காணிப்பு, தரமான சிகிச்சை முறை, இரவு பகல் பாராமல் தாதிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

நாங்கள் சென்றபோது பயங்கர குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் மாமி. கூடுதலாக போர்வைகள் வாங்கிப்போர்த்தியும் குளிர் விட்டபாடில்லை. ஏர்கோண்ட் அதிக குளிராக இருப்பதால் வந்த நிலை இது. அந்த ஏர்கோண்ட்’ஐ கொஞ்சம் குறைக்க முடியுமா.? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன். குறைக்க மாட்டார்களாம். சூழல் உஷ்ணமாக இருந்தால் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுமாம்! சூடான சிதோஷ்ண நிலையில் அது அதிவிரைவாகப் பெருகுமாம், பரவுமாம்.. (சொன்னார்கள்)

பசியில்லை தூக்கமில்லை என்றார். கணவர் வெளியே டாக்டரிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

காலையில் யாரோ பக்கத்து வீட்டில் (வார்ட் என்பதற்கு வீடு என்றார்) இறந்துவிட்டார்களாம், அந்த பையனின் அம்மா பயங்கரமாகச் சத்தம் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஆட்கள் குவிந்து விட்டார்கள். மாலை பூ என எக்கச்சக்கமாக.. என்னம்மா பெட்டியெல்லாம் கூட கொண்டுவந்து விடார்கள்! அப்படிக்கத்துகிறார்கள், மனசே நல்லா இல்லை. தோ நல்லா கேள், மோட்டார் சத்தம் இன்னமும் கேட்கிறது பார், என்றார்.

அது மோட்டார் சத்தம் அல்ல, ட்ரோலியின் சத்தம். அழுக்குத்துணிகளை பணியாட்கள் எடுத்துச்செல்கிறார்கள், என்றேன்.

ம்ம்ம்.. பக்கத்தில் ஒரு சீனத்தி இருக்கின்றாள், ஓயாமல் எதையெதையோ சாப்பிடுகிறாள் ஆனால் என்னிடம் மட்டும் பேசவில்லை, யார் இறந்தார்கள்? என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாள். ரொம்ப மோசம்மா டவுன்’ல உள்ளவர்கள். அங்கெல்லாம் அப்படியில்லை, கேட்காமலேயே சொல்வார்கள்.

ஆஸ்பித்திரி என்றால் இதெல்லாம் சகஜம். நீங்க ஏன் அதெல்லாம் பார்கறீங்க?

ச்சே, மக்க மனுஷாளுங்க.. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? எதையுமே கண்டுக்காமல் இருந்தால் என்ன புண்ணியம்?

சரி மணியாச்சு தூங்குங்க என்றேன்.

எங்கம்மா தூக்கம் வருது? பசியே எடுக்க மாட்டேங்கிறது. துக்கமும் வரமாட்டேங்கிறது... கதை பேசறாங்க டாக்டர் நர்ஸ் எல்லாம், விடிய விடிய...,  கல்யாணமான பொண்ணுங்க, நம்ம தமிழ் பொண்ணுங்கக் கூட ஆம்பள பசங்கக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுதுங்க. தொட்டுத்தொட்டு பேசுதுங்க.. படித்த டாக்டரெல்லாம் கூட.. ச்சே, என்ன கண்றாவியோ..!

அதற்குள் பக்கத்து சீனத்தி என்னமோ சொல்ல, விரலை உதட்டருகே வைத்து உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு, அவள் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்கிறார். எப்படி விளங்கும், அவள் சீன மொழியில் பேசுகிறாளே?

உதடுகளைப் பிதுக்கி, கண்களை ஓரமாகக் கொண்டு ஜாடை காட்டினார், அவர்களின் பேச்சு விளங்கியதைப்போல..!

சரி இதற்கு மேலும் இருப்பது சரியல்ல, நோயாளிகள் தூங்க வேண்டும், விளக்கை எல்லாம் பணியாட்கள் அணைக்கத்துவங்கியதைப் பார்த்தவுடன். நாங்களும் கிளம்பவேண்டுமே.!


ம்ம்ம், சரி நாங்க கிளம்பறோம்மா. நாளைக்கு காலையிலே அண்ணி வருவாங்க.. சரியா? என்றேன். அதற்குள் கணவரும் அருகில் வந்தார். கிளம்பறோம் என்றோம்.

ரெண்டு வெள்ளியிருந்தா கொடுய்யா.. அம்மா காலையிலே பசியாற எதாவது வாங்கிக்கொள்கிறேன் என்றார். நடக்கவேமுடியாதபடி உடம்பெல்லாம் ட்யூப். இதில் எப்படி. ? சரி, குழந்தையான அம்மாவிற்கு ரெண்டு வெள்ளி கொடுத்து விட்டுக்கிளம்பினோம்.

வெளியே வரும்போது, ஒரு நர்ஸ் எதிரில் வந்தார், அவரிடம் கேட்டேன், என்ன சிஸ், காலையிலே யாரோ இறந்து ஒரே அமளிதுமளியாச்சாமே?

நர்ஸ் சொன்னார், அப்படி எதுவும் நடக்கவில்லை, மெம்.

1 கருத்து:

  1. உங்க மாமிக்கு பயம் வந்திடுச்சு போல...அதான் கெட்ட கனவு வருது

    பதிலளிநீக்கு