செவ்வாய், செப்டம்பர் 27, 2016

மனம் கொடுக்கும் சிக்கல்


உண்ணா நோன்பு ஆயுளைக்கூட்டும், என்கிற வாசகம் தத்துவமாக வந்து, குட் மார்னிங் என்று சிமிட்டியது வட்சாப்பில். (எதாவது தத்துவம் அனுப்பி, good morning, good evening, good afternoon & good night என்று சொல்கிறவர்களின் வட்சாப்களை நான் சட்டை செய்வதே இல்லை. இன்று எதோ பயனுள்ளது சொல்லப்பட்டதுபோல் தென்பட்டது அதனால்தான் வாசித்தேன்.) அதை வாசித்துமுடிக்கின்ற போதுதான் நினைவுக்கு வந்தது நான் இன்னமும் பசியாறாமல் இருக்கின்றேன் என்று. உடனே வயிற்றில் கரமுர சத்தம் வரத்துவங்கியது. பசி ஆரம்பித்தது, வாங்கி வத்திருக்கின்ற பிஸ்கெட்ஸ்’கள் வா வா என்றன. உடனே காப்பி கலக்கி பசியாறினேன்.
எதுவாக இருந்தாலும் அதைப்பற்றிய நினைவுகளின்போதுதான் ஞாபகங்கள் இடைமறித்து அதையொட்டிய சிந்தனைகளை நமக்குத் தூண்டிவிடும். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்..

இப்போ யாராவது மாங்காயை நம்முன் கடித்து சாப்பிட்டால், நமக்கு நாவில் எச்சியில் சுரந்து தொண்டைக்குள் இறங்கும். அந்த இரசாயண மாற்றம் ஏற்படுத்துகிற தொடர்பு பார்த்தீர்களா. நமக்கு அப்போது அந்த மாங்காயைச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் துளிகூட வராது ஆனால் எச்சியில் மட்டும் பாட்டுக்கு சுரந்துகொண்டே இருக்கும்.
சாப்பாட்டுவேளையில், நாம் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றபோது, ஒருவர் அவசரமாக நம்மிடம் பேச்சுக்கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்நேரம் பார்த்து நாம் வாயில் உணவினை வைத்து மென்றுக்கொண்டே அவரிடம் பேசுகிறோம், அப்போது அவரைக் கூர்ந்து கவனித்தோம் என்றால், அவரை அறியாமலேலே அவருக்கு எச்சில் ஊறும் அதை அவர் சாமர்த்தியமாக மறைக்கப் பார்ப்பார், ஆனாலும் அதை நாம் மிக சுலபமாக கண்டுபிடித்து விடலாம். `சாப்பிடுங்க.’ என்போம். அவர் `சாப்பிட்டுத்தான் வரேன்’ என்பார். அதுவே சாப்பிடாமல் வந்தவர் என்றால், வாயில் உமிழ்நீர் சுரந்து உதட்டின் வழியாக கீழே வழிகிற நிலைமைகூட வரும். இத்தனைக்கும் நாம் அப்பளம் வைத்து ஒன்னுமேயில்லாத பழைய சாம்பார்தான் சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அந்த ஆழ்மன இரசாயண மாற்றத்தைக் கவனியுங்கள்.

ஊருக்குச்சென்றிருந்தபோது, கடைதெருவிற்கு சாமான்கள் வாங்கச்சென்றேன். அங்கே எனக்கு முன் நின்றிருந்த பெண் குழந்தையின் தலையில், ஈரும் பேணும் அப்படியே புழுத்துக்கிடந்தது. `அதை ஏன் நீ பார்த்த.?’ என்று கேட்பவர்களுக்கு, நம்மைவிட குள்ளமாக யாராவது நம்முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றால், நாம் அவர்களின் தலையைத்தானே பார்ப்போம்.! அக்குழந்தையின் தலையில் பேண்கள் மொய்க்கிறன. இரட்டை இரட்டையாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக்கொண்டு குடும்பம் நடத்துகிறது அங்கே. ஒவ்வொரு முடியிலும் முத்துமுத்தாக பேண்களின் முட்டைகள், இன்னமும் குஞ்சுகள் பொரிக்காமல். குழந்தையின் விரல்கள் சதா தலையினைச் சொரிந்தவண்ணமாகவே இருந்தது. சொரிகிறபோது பொந்தில் இருந்து வெளியேறுகிற எறும்புகள் போல் பேண்களின் வரிசை. அதைக்கண்ணுற்ற நான், என்ன வாங்கவந்தேன் என்பதை மறந்து பேண்சீப்பு இருக்கா.? என்று வாய்தவறி கேட்டும்விட்டேன். மனம் பாய்ந்த இடத்தில் வாய்வார்த்தைகள் தானாக வந்துவிழுகிறது. அதுமட்டுமல்ல, அன்று முழுதும், என் கை என்னையறியாமலேயே தலையை சொரிந்துகொண்டே இருந்தது. இதுவும் ஆழ்மன இரசாயண தொடர்பு பிரச்சனையே.

கண்கள் சிவந்து கண்வலி வந்த ஒருவரிடம் நாம் கொஞ்சநேரம் பேசினால், நமது கண்களின் நீர் லேசாக சுரக்கும். கண்கள் கூசுவதுபோல் இருக்கும். உடனே கண்களைப்பார்த்து பேசமுடியாமல் அங்கும் இங்கும் பார்ப்போம்.
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வெடிகுண்டைத்தூக்கிப்போட்டார். அதாவது, நானும் அவரும் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். லேசான நெஞ்சுவலி, அதனால் கைகள் நடுமுதுகு, தோள்பட்டை, பின்னங்கழுத்து என குத்தலான வலி. வலி கொஞ்சம் கொஞ்சமாக கூடி அதிகரிக்க ஆரம்பித்தது. எழுபது வயதைத்தொடுகிற அம்மாவிற்கு மாரடைப்பு பிரச்சனை எதெனும் இருந்தால் என்ன செய்வது என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். ஆனால், மாரடைப்பு என்கிற அறிகுறி இப்படி இருக்காது, நான் மாமியின் மூலம் பார்த்துள்ளேன், மூச்சுத்திணறலோடு உடல் வேர்வையினைக் கக்கும், ஆக, இது நிச்சயம் மாரடைப்பாக இருக்காது என்கிற எனது யூகத்தை அவரிடன் பகிர்ந்தேன்.
அதற்கு நண்பர் சொன்னார், பெண்களின் நோய் தன்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு ஒருவித வெளிப்பாட்டுடன், வலியின் தன்மை கூடலாம் அல்லது குறையலாம். என் அம்மா, ஒரு பக்கம் கைவலிக்கிறது என்றார். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். வலி குறைவுதான் என்றார், ஆனால் டெஸ்ட் எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மூணு ப்ளாக் இதயத்தின் குழாயில். உடனே angiogram செய்தோம். இப்போது நன்றாக உள்ளார், என்றார் நண்பர்.

ஓ, இருக்கலாம், இருந்தபோதிலும் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எல்லா பரிசோதனைகளையும் எடுத்தாகிவிட்டது, பிரச்சனை ஒன்றுமில்லை. இதயத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை. காய்ச்சல் அடிப்பதால் உடலில் வலி இருக்கும் அந்த வலிதான் சிலவேளைகளில் நமக்கு சிக்கல்போல் தோன்றும், என்று சொல்லி, இருந்தபோதிலும் cardiologist க்கு appointment கொடுத்துள்ளார்கள். என்றேன்.
கண்டிப்பாக பரிசோதனைக்குக் அழைத்துச்செல்லுங்கள், என்று சொல்லி ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அதுதான் வெடிகுண்டு.
நெஞ்சுவலியினைப் பற்றிப்பேசினால், நமது இதயத்தின் துடிப்பு அதிகரித்து நமக்கும் நெஞ்சுவலி லேசாக வருகிறமாதிரி இருக்கும் என்றார்.
ஆமாம் என்னால் அது உணரமுடிந்தது.! நெஞ்சுப்பகுதியை தடவி விட்டுக்கொண்டு கொஞ்சம் நீர் பருகினேன்.

கொட்டாவி விடுகிறவரைப்பார்த்தால், கொட்டாவி உடனே வரும். தும்மலும் தொற்றும். அதுபோல, நெஞ்சுவலி பற்றிப்பேசினாலே அது நமக்கும் வருவதைப்போல் இருக்கும்.

அதுமட்டுமல்ல, எந்த வியாதியாக இருந்தாலும், அதன் தன்மையைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் அது நம்மைத் தாக்கும்.

1 கருத்து:

  1. மிகச் சரி
    அதிலும் எழுத்தாளர்களுக்கு
    கூடுதலாய் உணரச் சாத்தியம்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு