திங்கள், டிசம்பர் 26, 2011

கவிதைப்பூவின் விவாகரத்து


ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்.
குடும்ப வாழ்வு சந்தோசமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. இதற்குக் காரணம் அந்த மனைவி. அவள் மிகவும் நல்லவள். கலகலவென்று இருப்பவள், மேலும் அவளுக்குக் கணவனின் அந்தரங்கங்களை ஆராயும் புத்தி வந்ததில்லை. சந்தேகப்படுவதும் அவளின் சுபாவமல்ல. தனிமனித சுதந்திரம் பேணுபவள். அநாவசியமாக பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைப்பவளும் அல்ல.

கணவன் இதற்கு எதிர்மறையானவன், அமைதியாக இருக்கும் தமது மனைவி எதோ ஒரு கபட நாடகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் ஒரு நெருடல், சந்தேகம்.

தினமும் அவளை ஆராய்வதோடல்லாமல் எதாவதொரு சங்கடத்திற்கு உட்படுத்திவிடுவான்.

வெளியே எங்கேயாவது சென்று வந்தாள், தொலைபேசியை ஆராய்வான். கைப்பையை ஆராய்வான்.

ஒரு முறை கடைத்தெருப்பக்கம் போனபோது, போனில் ஒரு மிஸ்ட் கால் வந்தது, தங்கைதான் -  உடனே அழைக்க கைப்பேசியில்  போதிய தொகையில்லாத காரணத்தால், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பொதுத் தொலைப்பேசியில் தமது தங்கையை அழைத்தாள். யதார்த்தமாக அப்பக்கம் காரைச்செலுத்திய அவளின் கணவன் இதைக் கவனித்து விட்டான்.  அவளைக் கையும்களவுமாக (!) பிடித்து விட்டதாக நினைத்து, விவரத்தைப் பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்யத்துவங்கினான். வீட்டில் ஒரே ரகளை. மனைவிக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. அமைதியாக இந்த ஆர்ப்பாட்டத்தைக் கவனித்துக்கொண்டு, சிரிப்பதா அழுவதா என்று யோசித்த வண்ணமாக இருந்தாள்.

சந்தேகம் வந்தால் என்ன சொல்லி நியாயப்படுத்தினாலும் பிரியோஜனமில்லை என்பது தெரிந்த மனைவி அமைதியாயிருந்தாள்.

ஒரு முறை தோழி ஒருவள், வீட்டிற்கு தொலைப்பேசியின் மூலம் அழைத்திருந்தாள். அழைப்பை எடுத்த கணவன், அவளை தேவையில்லாமல் தாறுமாறாக திட்டித்தீர்த்து விட்டான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத மனைவிக்குக் கோபம்வரவே, அவனிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டு, தமது மன ஆதங்கத்தையெல்லாம் கொட்டித்தீர்த்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டு வீசினாள், பாத்திரங்களையெல்லாம் உடைத்து நாசமாக்கினாள், இஸ்தீரியா வந்தவள் போல்.!

விவாகரத்து செய்யப்போவதாகக் கூறி மிரட்டினாள். கொஞ்சம் கூட சுதந்திரமில்லாத இந்த வாழ்க்கை தமக்குத் தேவையேயில்லை என்கிற முடிவிற்கு வந்துவிட்டதாகச் சொல்லி அழுதுவடிந்தாள்.  இதைக்கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத கணவன் அரண்டுபோனான். (சுயகௌரவம் என்கிற பாசாங்குப்போர்வையில் வளர்க்கப்பட்டவன் கணவன், ஆக இதுபோன்ற விவாகரத்து விஷயங்களின் அவ்வளவு சுலபமாக சம்மதம் தெரிவித்துவிடுவான் என்பது நிறைவேறாத ஒன்றே.)

திட்டம் தீட்டப்பட்டது;  அன்பு, பாசம், தீராக்காதல், நேசம்,  என் உயிர் நீ என பொறாமைக்குணத்திற்கும் சந்தேகத்திற்கும் அரிதாரம் பூசப்பட்டது.

காலில் விழாத குறையாக, கட்டிப்பிடித்து முத்தமிட்டு அவளை வசப்படுத்தினான். செல்லமே மானே தேனே என்கிற அலங்கார வாசங்களால் வார்த்தைகளை நிரப்பி..

இரவிலும் சில ஊடல்கள், கோபப்படுவதைபோல் பேசி, சமாளிப்புக்கு வந்து, தாவித் தடவி, கவ்வி கலவியில் தான் முடிகிறது.

இதெல்லாம் பழகித்தான் போனது மனைவிக்கு. எவ்வளவுதான் கோபம் வந்தாலும்,  ஆண்கள் தமது சாமார்த்தியத்தையும் பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி மயக்குகிறபோது, பெண் என்பவள் இந்த இடத்தில் நிச்சயமாக மண்ணைக்கவ்வுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அன்பு என்கிற ஆயுதத்தைத் எங்கோ ஓர் இடத்தில் நுழைக்கின்ற போது அவள் கிறங்கித்தான் போகிறாள், மயங்கித்தான் போகிறாள்...

இந்த சம்பவத்திற்குப்பிறகு, அவனின் தொல்லைகளில் இருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருந்தாலும், அதுவும் சில காலம்தான் தாக்குப்பிடித்தது. மனைவி மகிழ்கிறாள் என்றால் அவனுக்குத் தேள் கொட்டியதைப் போல் ஆகிவிடுகிறது, அவனில்லாத இடங்களில் அவள் மகிழ்கிறாள் என்றால், அந்த மகிழ்ச்சி அவனுக்கு தீப்போல் சுடுகிறது.

மீண்டும் துளிர் விடுகிறது பொறாமைத்தீ.

பேஸ் புக், ப்ளாக், புத்தக வாசிப்பு, எழுத்துத்துறை என சில சுவாரஸ்யமான விஷயங்களின் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவள் மனைவி. வீட்டை விட்டு வெளியே சென்றால்தானே பிரச்சனை.! வீட்டிலேயே  தமக்குப் பிடித்தமானவற்றில் தமது பொழுதினைக்கழிக்க இவைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவளாய் மாற்றிக்கொண்டாள்.

பொறுக்குமா கணவனுக்கு..! என்ன இவள், எப்போதுமே உற்சாகமாகவே இருக்கின்றாள்..!

எதோ ஒரு கேள்விக்குறியோடு.. நெருடலாக மீண்டும் பூதக்கண்ணாடிக்கொண்டு ஆராய ஆரம்பித்தான் அவளை. செய்கிற எல்லாவற்றையும் எட்டியெட்டிப் பார்ப்பது, என்ன புத்தகம் வாசிக்கிறாள் என்பனவற்றையும், அப்புத்தகம் சொல்லும் அர்த்தமென்ன என்பதைப்பற்றியும் ஆராயத்துவங்குவான்? செக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தால், தொலைந்தாள் அவள்.. தேவையா அவளுக்குச் செக்ஸ் எண்ணம்? தாம் இருக்கும் போது செக்ஸ் சிந்தனை அவளிடம் நுழைந்தால், நிலைமை என்னாவது.? என்கிற ஈகோதான் கணவனுக்கு.

இது போன்ற சல்லையான தொல்லைகளைத்தவிர்க்க மனைவி தனிமையை நாடினாள்.  இரவு நேரங்களின் கணவன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்குவது சகஜம். கணவனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பது, செய்தி கேட்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள், சன் மூசிக் என தொலைக்காட்சியின் முன் அமர்ந்துகொள்வது பிடித்தமான ஒன்று.. அதுவும் அதனின் ஒலிகளை சத்தமாக வைத்துக் கொண்டு ரசிப்பதென்பது வழக்கமானதுதான்.

மனைவிக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. அவளின் உலகமென்பது தனி, பூக்களும் வாசமும் நிறைந்த அமைதியான நந்தவனம் அவளின் உலகம். தனிமையை சுவாசித்து சுவைப்பவள். வாழ்வே அவளுக்குத் தியானம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தமது தனிமையை அவள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டள்.

மாடியில், தமது கணினியுடன் தாம் விரும்பிக்கேட்கும் பாடல், பேஸ் புக் பகிர்வுகள், மொட்டை மாடி காற்று வாங்குதல், சில நல்ல நட்புகளுடன் அளவளாவி மகிழ்வது.. புத்தக வாசிப்பு, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது போன்ற செய்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டாள். இரவு நேரங்களில் தனிமையில் கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை மணி நேரம்வரை தொல்லைகளற்ற பொழுதினை இப்படிப் பயனான வழியிலே கழிக்கின்றாள். தொலைப்பேசி அழைப்புகளைக் கூட சட்டைசெய்வதில்லை இதுபோன்ற நேரங்களில்..

இரவில் கணவனோடு படுக்கைக்குச் செல்லுகையில் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு..அவனோடு அதுவும் அவன், அவனது அன்றாட நடவடிக்கைகளை முடித்துகொண்டு மேலே வரும் போதுதான், மனைவியும் தயார் நிலையில் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டியபடி. அவனின் வருகை தெரியும் அவளுக்கு.. டீவி அடைக்கப்பட்டு அமைதியாகும் போது.

கணவனுக்கு மீண்டும் சந்தேகம்.. (எப்போதும் வருவதுதானே!) இவள் என்ன செய்கிறாள் மேல் மாடியில், தான் கீழே டீவியில் நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது, இவள் என்னமோ செய்கிறாள், எதோ ஒரு காரியத்தில் மூழ்கி தன்னை முழுமையாக மறந்துவிடுவதாக எண்ணி, இவளை விடக்கூடாது என முடிவெடுத்து, ஒர் அரிய திட்டத்தைத் தீட்டுகிறான்.

வேலை முடிந்து வந்தவுடன் அவள் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்கிறான். 

ஆம், இதுதான் அந்தத் திட்டம், இன்னும் ஒரிரு நாட்களில், அறைக்கே ஹோம் தியட்டர் வரப்போகிறது. எல்லாமும் இனி மாடியிலேயே நிகழப்போகிறது. சாப்பிட்டுவது மட்டும்தான் கீழே.  மேலே வந்தால், அவ்வளவுதான், அப்படியே கட்டிலில் கிடந்தபடியே எல்லாமும் முடிவுறும்.

இதைக்கேட்ட மனவிக்குக் கவலை வந்துவிடுகிறது. தமது தனிமை பறிக்கபடுவதை நினைத்து வேதனை அடைகிறாள். தனிமை ஒரு தவம் அவளுக்கு. அது எப்போதும் கிடைக்காது, அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் அவளைச் சுற்றி ஆட்கள் இருப்பது, வாழ்வின் மேல் வெறுப்பு வந்துவிடுகிறது.

நிம்மதியாக அதை அனுபவிக்கின்ற தருணம் வீட்டில் வாய்த்தும், அதுவும் இப்படி பாதியிலேயே பறிபோவதை எண்ணி கலக்கம் கொள்கிறாள்.   தர்மசங்கடம்தானே.!? நாம் செய்வதையெல்லாம் யாராவது ஒருவர் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தால், என்ன செய்வது?  யாருக்கா நாம் பிறவி எடுத்துள்ளோம்? செய்த தியாகமெல்லாம் போதாதா? நாம் எப்போது வாழ்த்துவங்குவது? இது ஒரு தொடர்கதையானால் பிறவிப்பயன்தான் என்ன? மகன் ஆறு வயதுவரை தாய்ப்பால் குடித்தான், பதினேழு வயதுவரை அவளைக் கட்டிக்கொண்டு தூங்கினான்.. இப்போது அதற்கு அவசியமில்லாமல், அவனும் மீசை முளைத்த ஆம்பளையாக, ஆனால் மனைவிக்கு மட்டும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமாகவே...

விடிவே இல்லையா இதற்கு? யோசித்தாள் மனைவி. தமக்கு இந்த இரைச்சல் வாழ்க்கை வேண்டாமென்கிற முடிவில், அறையை மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டாள். பக்கத்து அறை, விருந்தினர் வந்து தங்குவதற்காக செய்யப்பட்ட அறை. அவ்வறையைத் தூய்மைப்படுத்தி, தமது எல்லாப்பொருட்களையும் ஆவனங்களையும் எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு மாற்றலாகிச் செல்ல தயாரானாள்.

இதுவும் விவாகரத்து மாதிரிதான்.

கணவனால் மனைவியை ஒன்றும் செய்ய முடியாது, அவள் எந்தத் தவறும் செய்யாதவரை...

உலகப் புகழ்பெற்ற ஒரு சிறுகதை

படித்ததில் பிடித்தது

நன்றி சுஜாதா.

லாட்டரி

ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுதான் அந்தக் கிராமத்தின் புராதன வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும்.
அதிகாலையிலேயே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்ப்பார்க்க இன்று லாட்டரி யார் பெயருக்கு விழப்போகிறது என்கிற விவாதங்களிடையே ஓரிருவர் இந்தப்பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப பழைய மனிதர்கள், தொடர வேண்டுமென்று அதட்ட இறுதியில், மைதானத்தில் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப்பெட்டி வைக்கப்படுகிறது. நடுவர் நியமிக்கப்படுகிறார். அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப்பெட்டியிலிருந்து சீட்டு எடுத்துப் பிரிக்காமல் காத்திருக்கிறார்கள். எல்லோரும் எடுத்தப் பின் அவரவர் சீட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள். வெள்ளைச் சீட்டு கிடைத்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள். ஒரே ஒரு சீட்டில் மட்டும் ஒரு கருப்புப்புள்ளி இருக்கிறது. அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது “சீக்கிரம் முடித்து விடுங்கள்” என்கிறார் கிராமத்துப்பெரியவர். நடுவே ஒரு கற்குவியல். ஆளுக்கொரு கல் பொறுக்கிக்கொள்கிறார்கள். சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி ”இது அநியாயம்” என்று கதறி மைதான நடுவில் நிற்க, அனைவரும் அவளை கல்லால் அடித்துக் கொல்கிறார்கள்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

சனி, டிசம்பர் 24, 2011

அக்க்க்க்கப்பக்க்க்க்ப்போத்த்த்துத்துத்தூ


எனது வீட்டின்

இடது புறத்தில் வசிக்கும்
மலாய் அன்பரின் குழந்தையும்

வலது புறத்தில் வசிக்கும்
சீனக் குடும்பத்தின் குழந்தையும்

என் தம்பியின் குழந்தையைப் போலவே
பேசுகிறார்கள்...

என்ன ஆச்சிரியம்.!
அவர்களின் அம்மா மார்களுக்கு
அந்த பாஷை விளங்குகிறது

ஆ,ஆ ஆ, சரி டா செல்லம்
என, அவர்களின் பாஷையிலே
பதிலுரைக்கின்றார்கள்..

வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேட்டரி வீக்

மதிய உணவு நேரம். உணவு வாங்கச்சென்றேன். நான் மட்டும் தனியே..

வழக்கம்போல், உணவு வாங்குமிடத்தில் காரை நிறுத்தியபோது, என் காரின் முன்னே இரண்டு மலாய்க்காரர்கள், கைகளைப் பிசைந்து கொண்டு என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்தவண்ணம் இருந்தார்கள்..

நான் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், கடைக்குள் நுழைந்து, அறுசுவை உணவை ஒரு பிடிபிடித்து விட்டுத் திரும்பினேன். திடீரென்று பயங்கர மழை. என் காருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், குடை பிடித்தே ஆகவேண்டும். அவ்வளவு கடுமையான மழை.

கடைவரிசையிலேயே நடந்த பிறகு, நான்கு ஐந்து அடிகள் வைத்தால் காருக்குள் சென்று விடலாம்.. இருப்பினும் கடுமையான மழையில் நிச்சயமாக உடைகள் (யூனிபர்ம்) நனையும். ஓரமாக நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்..

முதலில் பார்த்தேனே அதே மலாய்க்காரர்கள் அங்கே குடையோடு நின்றுகொண்டிருந்தார்கள்...

“காருக்குச் செல்ல வேண்டுமா? குடை வேண்டுமா?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே என்னருகில் வந்தார்கள். எனக்கு பயம் தான், காரணம் இங்கே நிறைய ஜேப்படி,வழிப்பறி கொள்ளைகள் மலிந்துகிடக்கிறது. எங்குபார்த்தாலும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகை வானொலி தொலைக்காட்சிகளின் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை காரணம், உணவிற்குத்தேவையான பணத்தை மட்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மற்றதையெல்லாம் பர்சிலே, ஆபிஸில் பத்திரமாக வைத்துவிட்டுத்தான் வெளியே செல்வது என் வழக்கம். நகைகளைப்பிடுங்கப் போகிறார்கள் என்றால், எனக்குத் தங்கமணிவது பழக்கமில்லை..மஞ்சள் கயிறு, அதில் ஒரு சின்ன குண்டுமணி, அவ்வளவே.!

இருப்பினும் நானே ஒரு தங்கம், என்னை எதாவது செய்துவிட்டால்.. (ஏற்கனவே நான் சொன்ன ஒரு சிறிய தகவலால், பெண்களெல்லாம் ஒன்று திரண்டு, என்னை வாசகவட்டத்திலிருந்து விரட்ட பலவாறான எஸ்.எம்.ஸு களை நாடுதழுவிய நிலையில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற குறுந்தகவல் என்க்கும் சிலாப்பா (தவறுதலாக) வந்திருந்தது.) அதுவேறு எனக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒன்னும் பெரிதாகச் சொல்லிவிடவில்லை. ‘ உங்கள் எல்லோருக்கும் வாசிப்புப் பழக்கமில்லை, வாசகர் என்கிற பெயரில் பேனா பிடித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? இலக்கிய உலகம் பாழாய்ப் போக!’ இதுதான் நான் எழுதியது. கோபித்துக் கொண்டார்கள். உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. நீ என்ன பெரிய மேதையான்னு சண்டைக்கு வருகிறார்கள்.!! !@#$%^&* என்னத்தச் சொல்ல.!!?

சரி அது கிடக்கட்டும், கதைக்கு வருவோம்.. அப்போது அவர்கள் என் அருகில் வந்தவுடன், நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு..

“பரவாயில்லை, காரி பக்கத்தில்தானே இருக்கின்றது ஓடிவிடலாம், குடை வேண்டாம்!” என்றேன்.

அதில் ஒருவன் தயங்கித்தயங்கி,  “இல்ல அக்கா (மலாய்க் காரர்கள் பண்புள்ளவர்கள், வயதில் மூத்தவர்களை அக்கா என்றும், சிறியவர்களை தங்கையென்றும் அழைப்பார்கள்) குடைக்குள் வாருங்கள், நான் கார்வரை கொண்டுவிடுகிறேன்..” என்று சொல்லி, குடையை விரித்தார். எனக்கு தர்மசங்கடமாக இருப்பினும், பயங்கர மழையாதலால், சரியென உதவியைப்பெற்றுக் கொண்டு, அவர்களின் துணையோடு கார் வரை சென்றேன்.., அப்போது அவனின் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளியே வந்தன.

“அக்கா, என்னுடைய காரை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை, உன்னுடைய எஞ்ஜின் பக்கம் கொஞசம் திறந்துக் கொடுத்தால், நான் என்னுடைய கொனெக்டரைக் கொண்டு உனது பேட்டரியில் பொருத்தி, எனது காரை ஸ்டார்ட் செய்துக்கொள்வேன், எனது நண்பனை அழைத்தேன், கடுமையான மழை என்பதால் வரவில்லை.. தொலொங் லா (உதவுங்கள்)” என்றான்.

அடப்பாவமே, இதுதான் பிரச்சனையா? இதில் எனக்கு எந்த குறைவும் வந்து விடாதே.. ஏற்கனவே இதே போல் ஒரு பிரச்சனையில் நான் மாட்டிக்கொண்டபோது, ஒரு மலாய் அன்பர்தான் எனக்கு உதவினார். அதுவும் அதே உணவு வேளையின் போதுதான், ஆனால் அன்று மழையில்லை.

’நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.’

(என்ற அவ்வையின் செய்யுள்தான் உடனே நினைவுக்கு வந்தது.)

“சரி அஃடிக் (தம்பி) பிரச்சனை இல்லை,தாரளமாக எடுத்துக்கொள்!” என்றேன்.

அவனும் எனது காரின் எஞ்ஜின் பகுதியைத்திறக்கச் சொன்னான். நான் அப்படியே செய்தேன். வயரின் நீளம் போதவில்லை. உடனே நான் அவனிடம் “காரைக் கொஞ்சம் பின்னாடி கொண்டு வா! “ என்றேன்.

இருவரும் சிரித்தார்கள். நான் மட்டும் தாமதமாகச் சிரித்தேன்.

மின்குழல்தான்


நம்பிக்கையின்மையால்

முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களின் நேர காலமில்லாமல் கொட்டமடித்து விட்டு, 24மணி நேரமும் ஸ்டேடஸ், கமெண்ட்ஸ், லைக்ஸ் என ஜாலம் காட்டிவிட்டு, ஊர்கதை பேசிவிட்டு, மணிக்கணக்காக வெட்டியா பொழுதைக் கழித்து விட்டு, ஜொள்ளு விட்டு, மயங்கி மொக்கையாக மாறி, போடுவதற்கு ஒன்றுமேயில்லாமல், யாராலோ முகத்திரை கிழிக்கப்பட்டு, தாம் நினைத்தபடி எதுவும் நடவாத போது, ஒரு வித விரக்தியின் விளிம்பிலும், வெறுப்பின் உச்சத்திலும் இருந்துகொண்டு விலகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனநோயாளிகள்...,

அங்கே நெட், வலைத்தளங்கள், பேஸ் புக், இணைய இதழ், குகூள் என, எதோ ஒரு உன்னதத் தேடலில் இருக்கும் நம்மைப் பார்த்து, அறிவுரை மழை பொழிதால், அரை விடனும் போல் இருக்குமா இல்லையா?

அறிவுரையோடு இருந்தாலும் பரவாயில்லை, என் கணவருக்குப் பிடிக்கவில்லை! மாமியாரைக் கவனிக்கனும்! பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம்! வீட்டு வேலைகள் செய்யாமல் பொம்பளைங்க இங்கேயே குடியாய் இருப்பதை நினைக்கும் போது அருவருப்புதான்! நான் உருப்படியான வருமானம் வரும் தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன்! பின்னல் தையல் என என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்! எதாவது தன்முனைப்புப் பயிற்சியில் என்னை நிரப்பிக்கொள்ளப்போகிறேன்..! மனிதனாகப் பிறந்தவர்கள் பயன் உள்ளவர்களாக வாழ்ந்துச் சாகவேண்டும்! வெற்றியைதேட வேண்டாம், அது உன் காலடியில் கிடக்கிறது!!!! (ஷப்ப்ப்பா) என் தத்துவமெல்லாம் சொன்னால் சும்மா விடலாமா?

எதோ ஒரு தன்முனைப்பு சொற்பொழிவில் கலந்துகொண்டு, மறுநாள் திடுத்திப்பென..  மந்திரிச்சு விட்ட மங்கம்மாக்களாய், புனித ஆத்மாக்களாய் மாறி, காலகாலமாக தன்னம்பிக்கையோடு  இருப்பவர்களிடம்,  இதுபோன்ற அறிவுரைகளை வாரி வழங்க நினைத்தால், பாச்சா பலிக்குமா என்ன.!? பாவம், இல்லை..இல்லை  பரிதாபப் பிறவிகள்.

சரி, பிடிக்கவில்லை, மனநெருடலைத்தருகிறது, போதும் பட்டதெல்லாம் இனி இது வேண்டாம், எல்லாம் நல்ல அனுபவம், இதுவும் வேணும் இன்னமும் வேணும், சருக்கல் எல்லாம் பாடமாக, வருங்காலத்தில் இந்தப் பாடம் நல்ல வழிகாட்டி, இருந்த வரை கொட்டம் கும்மி கொண்டாடம் என வெளிப்படையாகக் கூறி, ஏற்றுக்கொள்கிற பக்குவம் என்றுதான் வருமோ நம்ம பெண்களுக்கு?

இப்படிச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆரம்பத்தில் சுத்தமாக மறந்து விட்ட மாமி, கணவன், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள், ஆன்மிக வாழ்வு.. (எனக்கு இப்போதெல்லாம் கடுங்கோபத்தைத் தருவது, இந்த, நான் ஒரு ஆன்மிகவாதி, என்கிற வார்த்தையே, எனோ தெரியவில்லை) என எப்படி இப்படித்திடீரென பொங்கியவண்ணம்.. (டவுட்டு) . எல்லாம் ஒரு பாதுகாப்பிற்க்காகத்தான் எனபதுதான் நன்றாகத் தெரிகிறதே!. உணர்வுகளை அழகாக மறைத்துவிட்டோமென்று மகிழவேண்டாமே.. புரியும் ஒரு சிலருக்கு, நமது அறியாமை.

சிலர், சில பல வேளைகளில் விரக்தியின் விளிம்பில் இருப்பதற்கு இந்த அறியாமையே மூலக்காரணம். யார்தான் தவறு செய்யவில்லை? யார் தான் உத்தமர்கள்? யார் தான் திருட்டுத்தனம் செய்யவில்லை? யாரிடம்தான் கள்ளத்தனமில்லை? யார்தான் அவமானப்படவில்லை? யார் தான் ஹெங்கி பங்கி வேலைகளுக்கெல்லாம் ஆசைப் படவில்லை? யாருக்குத்தான் காதலில்லை? யாருக்குத்தான் காமமில்லை??  இப்படி இன்னும் பல யாருக்குத்தான்.. என, அடுக்கிக்கொண்டே போகலாம்...

உலகின் நிலை இப்படியாக இருக்கும் பட்சத்தில், ஏன் நாம் நமது உணர்வுகளுக்கு மட்டும்  வர்ணம்பூசி, பூதக்கண்ணாடிக்கொண்டு பார்த்து, மனம் வெதும்பி புத்தராக மாற நினைத்து, போதனையில் பல்டி அடிக்கவேண்டும்?! அசிங்கமாக இல்லையா!? வெளியே வாங்கப்ப்பா செல்லங்களா.!

சொல் புத்தியும் இல்லாமல், சொந்த புத்தியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இருந்தால், யார் காப்பாற்றுவது.!?  எவ்வள்வு பெரிய குருவிடம் பயிற்சிப் பெற்றாலும், மாற முடியுமென்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி?.

வியாழன், டிசம்பர் 22, 2011

ஆண் பார்வை

முன்னே நடக்கும் போது
பின்னே ஒரு உருத்தல்

கீழே குனியும் போது
மேலே ஒரு நெருடல்

நேர் பார்வையிலும்
நேர்மையில்லாமல்..

பேச்சின் போது
அகலமாய் விரியும் கண்கள்

எதாவது தென்படாதா!?
என அங்கும் இங்கும்
ஏக்கத்துடன்..

எதோ ஒரு ஆவலில்
அலைபாயும் சுமையுடன்

“ நீங்களெல்லாம் அக்கா தங்கைகளோடு பிறக்கவில்லையா?”
என்கிற வசனம் எங்களுக்கே புளித்துத் தான் போனது.