வியாழன், ஏப்ரல் 05, 2012

ஒரு விவாதத்தையொட்டி, வல்லின ஆசிரியர், தம்பி நவீன் எனக்குக்கொடுத்த பதிலடி

தமிழகத்து நாட்டாமைகள் – ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிக்கு பதில்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, ‘தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை’ எனும் எனது கட்டுரைக்கு எதிர்வினை எழுதியிருந்தார். அவருக்கு என் பதில்.
வணக்கம் ஸ்ரீவிஜி . தங்கள் கருத்துக்கு நன்றி. முதலில் உங்கள் வாசிப்பு இவ்வளவு மேலோட்டமானதாக இருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இதை உங்கள் அரசியல் பார்வையோடும் ஒப்பிடலாம்தான். என்ன செய்வது பல காலம் எழுதும் எழுத்தாளர்களுக்கே அது வாய்க்காத போது உங்களுக்கு இல்லாதது ஆச்சரியமில்லை. உங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை.

‘கலைஞர்கள் உருவாகிறார்கள் உயிரைக்கொடுத்து… ஆனால் ரசிகனை உருவாக்க முடியுமா? ஆஸ்ட்ரோ இல்லாத காலத்திலே, உள்ளூர் கலை வளர்ந்ததா? எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, நம்பியார் போல் பேசிதானே மேடையில் கலகலப்பூட்டினார்கள்.! எஸ்டேட்களில் தமிழ் திரைப்படங்கள் தானே காட்டப்பட்டது!’
ஆமாம் நீங்கள் சொல்வது மெய்தான். ஆனால், அப்போது உள்ளூர் தயாரிப்புகளைப் போட களம் இல்லாமல் இருந்தது. அசலான மலேசிய வாழ்வைச் சொல்லும் படைப்புகள் வராமல் இருந்தன. இப்போதும் ஒன்றும் பெரிதாக வந்துவிடவில்லைதான். ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்லாண்டு காலமாக திரைத்துரையில் புழங்குபவர்களே தமிழகத்தில் சொதப்பும் போது களம் இல்லாத நமது கலைஞர்களின் பலவீனம் ஆச்சரியமில்லை. இதை மாற்றியமைக்க தொடர்ச்சியான முயற்சிகள் வேண்டும். ஒரு கலைத்துறை எடுத்த எடுப்பிலேயே A விலிருந்து Nக்கு போவதில்லை. அது தொடர் நகர்ச்சி. ஒன்றின் தோள் மேல் மற்றொன்று ஏறியே அது வளரும். அந்தப் பரிணாமத்தில் விமர்சனங்கள், விவாதங்கள், எல்லாமுமே அதை வளர்ப்பதற்கான உரம்தான். இந்நிலையில் மலேசிய ஆக்கங்களை ஒளிபரப்புவதற்கான உருவாக்கப்பட்ட வானவில்லில் ஏன் தமிழக ஆக்கங்கள். மேலே நீங்கள் சொன்ன அம்சங்கள் மாறினால்தான் என்ன? இங்கு மற்றுமொரு விடயத்தை ஒட்டியும் விவாதிக்கலாம். ரசிகனை உருவாக்க முடியாது என்கிறீர்கள். முடியும் என்கிறேன் நான். வைரமுத்து, மேத்தாவை படித்த எத்தனையோ இளைஞர்களை நவீன கவிதை பக்கம் திருப்பியதுண்டு. சாண்டில்யனை மட்டுமே வாசித்தவர்கள் சாருவை வாசிப்பதுண்டு. எல்லாம் பயிற்சி. இசை கேட்பது. சினிமா பார்ப்பது. அவ்வாறு தீவிர தன்மையில் சென்ற பின்னர் அவன் மீண்டும் வணிக கலையை விரும்ப மாட்டான்.
‘தனிநபர் ரசனை என்பது, அரசியல் போலவா? இங்கே ஓட்டு போடு, அங்கே ஓட்டு போடு என்று விலாவரியாக விளக்கம் கொடுத்த பிறகு, சொல்கிறபடி புரிந்துக்கொண்டு ஓட்டு போட்டு விட்டு வருவதற்கு!?’
நீங்கள் பேசுவது கலை. நான் பேசுவது அரசியல். இதில் மலேசியத் தமிழர் பொருளாதார நிலை உள்ளது. இதன் மூலம் மலேசிய சினிமா துறை இன்னொரு தாவலை நிகழ்த்த முடியும். ஈரனிய சினிமா போலவும் லத்தின் அமெரிக்க சினிமா போலவும் நமது வாழ்வை இன்னும் ஆழமாக உலகமெங்கிலும் கொண்டு செல்ல முடியும். இதை ஒரு முழுநேர தொழிலாக வருங்கால சந்ததியினர் அமைத்துக்கொள்ள முடியும். இந்த அரசியல் மூலம் கலை வெளிப்பாடு சாத்தியம். இன்றைய போராட்டம் இன்றைக்கானதல்ல. வருங்கால சந்ததியனரின் வாய்ப்புகள் புதுப்பிக்கப்படும்.
‘கலைஞர்களின் ஆதங்கம் புரிகிறது, அதற்காக ரசனை உணர்வை, ஒரு ரசிகன் விட்டுக்கொடுக்க முடியுமா? மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப்பொருத்தவரை, தமிழ் நாட்டு இலக்கியங்களும் தமிழ் நாட்டு திரைப்படங்களுமே அதிகம் கவர்கிறது.’
தோழி, உங்களை யார் விட்டுக்கொடுக்கச் சொன்னது? நீங்கள் உங்கள் ரசனையை முழுமைப்படுத்த வேறு சேனல்களே இல்லையா? அல்லது, மலேசிய கலைஞர்களுக்காக ஒரு சேனல் தருவதால் உங்கள் ரசனைக்கு குறைச்சல் ஏற்படுகிறதா? இதில் முக்கியமான விசயம், உங்களை தமிழ் நாட்டு இலக்கியமும் திரைப்படமும் கவர்கிறது என்கிறீர்கள். அது உங்கள் கருத்துதான். உங்கள் ரசனைதான். இங்கு நான் சில கேள்விகள் கேட்கலாம். முதலில் தமிழக படைப்புகள்தான் கவர்கிறது என்றால் மலேசியப் படைப்புகளில் எத்தனை படித்தீர்கள்? எத்தனை நாவல்கள் படித்தீர்கள்? எத்தனை சிறுகதைகளைப் படித்தீர்கள்? அது குறித்து இதுவரை ஏதேனும் விமர்சனம் செய்துள்ளீர்களா? தமிழகப்படைப்பென்றால் உங்களை எந்தப் படைப்பு/ யார் படைப்பு கவர்கிறது? ஏன்? கேட்டால் ரசனை என்பீர்கள். அப்படி சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். நான் இதுவரை சில நாவல்களை ஒட்டி விமர்சனம் செய்துள்ளேன். மலேசிய நாவல்கள் அடங்கும். அது குறித்து மாற்று விமர்சனம் செய்கிறீர்களா? அவை தரமற்றவை எனச் சொல்ல உங்களிடம் எவ்வகையான உழைப்பு உண்டு? மலேசியாவில் மாற்று முயற்சிகள் செய்யும் கலைஞர்களின் ஆக்கங்களைப் பார்த்துள்ளீர்களா? அதன் சாதக பாதகங்களைப் பேச தயாரா? ‘மோசம்’, ‘நல்லா இல்ல’ எனும் ஒற்றை வரியைத் தவிர உங்களால் வேறெதுவும் விரிவாக பேச முடியுமா? முடியும் என்றால் நான் தயார். இன்றிலிருந்து மலேசிய இலக்கியம் குறித்து விவாதம் செய்வோம். என்னால் சர்வ நிச்சயமாக உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் வைக்கத் தகுந்த மலேசிய சிறுகதைகளைக் காட்ட முடியும். உங்களால் அதை இல்லை என மறுத்து ஏன் அது மோசமான கதை என எழுத முடியுமா? குறைந்த பட்சம் 5 நல்ல நாவல்களை என்னால் சுட்ட முடியும். அதை மறுத்து பேச தயாரா? தமிழக இலக்கியங்கள் உங்களைக் கவர்கிறதென்றால் எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. எந்த படைப்பு. ஏன்? சும்மா போற போக்கில் மலேசியாவை மட்டம் என்றும் தமிழகம் சூப்பர் என்றும் சொல்லி புத்திஜீவிகள் போல காட்டிக்கொள்பவர்கள் வரிசையில் நீங்களும் இணைய நினைக்காதீர்கள் தோழி.
‘தயவுசெய்து, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாடு, இனம் என்கிற பிரிவுக்குள் கொண்டுவரவேண்டாமே.! வல்லினம் நடத்திய, கலை இலக்கிய விழாவிலும், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைவதே சிறப்பு, அவர்களை மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள், சிங்கை தமிழர்கள் என ஏன் பிரிக்கின்றீர்கள் என்றுதானே பேசப்பட்டது!? அந்த நிகழ்விற்கு, ஆதவன் தீட்சண்யா வரவில்லையென்றால், ஏன், நானே கூட வந்திருக்க மாட்டேனே.’
கலை என்ற விசயத்தில் நாடு, இனம் என்றுதான் பிரிக்க வேண்டியுள்ளது. காரணம் கலை வாழ்வைப் பேசுகிறது. எல்லா வாழ்வும் ஒன்றல்ல. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மை தமிழர்களின் மனம் மலேசியாவில் உள்ள சிறுபான்மை தமிழ் மனதோடு ஒத்துப்போவதில்லை. இலக்கிய செயல்பாட்டில் ஆளுமைகளுடான உரையாடல் அவசியம். அவ்வாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் வருவது சாத்தியமான விடயம்தான். நானும் மலேசிய இலக்கியம் குறித்து பேச லண்டன், சிங்கை சென்றுள்ளேன். அங்குச் சென்று பேசியது நமது நாட்டு படைப்பை ஒட்டிதான். தமிழகப் பயணங்களில், இலங்கை பயணங்களில் மலேசிய படைப்புகள் குறித்து பேசுகிறேன். அதே போல இங்கு வருபவர்கள் மலேசிய ஆக்கங்களை அறிந்து செல்கின்றனர். இது ஒரு வகை கருத்து பரிமாற்ற நிகழ்வு. இலங்கை தமிழன் மனம், மலேசிய தமிழன் மனம், தமிழகத் தமிழன் மனம் வெவ்வேறாவை. அது அரசியல், வாழ்வு, சமூக சிக்கலால மாறு பட்டுள்ளது. எனவே, ஒரு குடையின் கீழேல்லாம் எதையும் அடைக்க முடியாது. மற்றபடி வல்லினத்தில் எல்லா முயற்சிகளையும் மீறி நீங்கள் எதற்கு வந்தீர்கள் என்பது உங்கள் சிக்கல். உங்கள் தேர்வு. அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் ஒருவரை வைத்து அனைவரையும் எப்படி எடை போடுவது? அங்கு இருந்த வடையை சாப்பிடத்தான் வந்தேன் என்று சொல்பவர்களும் உண்டு. அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது.
‘யாரையும் தரம் குறைப்பது நமது நோக்கமல்ல இங்கே ஆனால் கலை என்கிற வட்டதின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பனவற்றில் (இசை,சினிமா, இலக்கியம், ஓவியம்) ரசிகனை பிரம்பால் அடித்து வழிக்குக் கொண்டுவரமுடியாது என்பதுவே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தொடர்ந்து போராடட்டும், கேட்பதெல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே ஆனால் இவர்களின் படைப்பை ரசிக்க ரசிகர்கள் பெருக வேண்டும் என்பதுவே எனது பிராத்தனை.’
யாரும் யாரையும் வழிக்குக் கொண்டு வர வேண்டியதில்லை. சினிமா என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த பெரிய கலைத்துறை. அதற்கான வாய்ப்புகள் இருந்தால்தான் கிடைக்கும். என் கட்டுரையில் எங்குமே ரசிகன் மாற வேண்டும் சொல்லவில்லை. அல்லது பிரம்பால் அடிக்கவில்லை. எம் கலைஞர்களுக்கு களம் கொடு என்கிறேன். ராஜாமணி போன்ற தமிழக முதலாளிகள் இருக்கும் வரை மலேசிய கலைஞன் நிலை இதுதான் என்கிறேன்.
‘பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா// இது கூட அங்குள்ளதுதான்.’
இப்போது அதனால் என்ன? ஒரு கட்டுரையை உங்களால் முழுமையாக விளங்கி கொள்ள முடியாமல் என்னத்த தமிழக படைப்புகளில் ரசித்தீர்கள்? நான் தமிழகப் படைப்புகளை ஒதுக்கித் தள்ள சொல்லவில்லை. நான் கொண்டாடும் தமிழகப் படைப்பாளிகள், ஈழப்படைப்பாளிகள், சிங்கைப் படைப்பாளிகள் எத்தனையோ பேர் உண்டு. அ.மார்க்ஸின் ஆளுமை, ஆதவனின் கவிதை வீச்சு, யோ.கர்ணனின் புதிய கதை சொல்லும் முறை, ஷோபாவின் அரசியல் விழிப்புணர்வு, ஜெயமோகனின் இலக்கியக் கூர்மை எல்லாவறையும் மதிக்கிறேன். ஆனால், நான் அங்கேயே நிர்க்க விரும்பவில்லை. இவர்களோடு இணைந்தே மலேசியப் படைப்பாளிகளைப் பார்க்கிறேன். ரெங்கசாமியின் நாவல்,  யுவராஜனின் சிறுகதைகள், பாலமுருகனின் கட்டுரைகள், சண்முகசிவாவின் இலக்கியக் கூர்மை என இரண்டையும் ஒரே தரப்பில் வைக்கிறேன். இவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் இயங்க வேண்டுமென விரும்புகிறேன். நான் சொல்ல வருவது இதுதான். உங்களுக்கு விளங்காததால் சுருக்கி இப்படி சொல்கிறேன்.
1. மலேசிய ஊடகங்களில் மலேசியத் தமிழனே தலைமை வகிக்க வேண்டும்.
2. இலக்கியம், ஓவியம், இசை பொறுத்த வரை ஓரளவு களங்கள் நமக்கு உண்டு. ஆனால், திரை துறை வளர அதற்கான களங்கள் விரிவாக்கப்பட வேண்டும்.
3. மற்றபடி தமிழக ஆக்கங்கள், இங்கு ஒளியேறுவதில் என்ன சிக்கல். அவர்கள் நம்மைக்காட்டிலும் முந்தியிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் அறிவை பெருவதிலும் பரிமாற்றம் செய்வதிலும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், நம்மை நாம் வளப்படுத்த நமது ஆக்கங்களை மேம்படுத்த என்ன செய்யப் போகிறோம்?

புதன், ஏப்ரல் 04, 2012

அடுத்தவேளை

குளிக்கும்போது,
வழிபாடு நினைவுகள்..

வழிபாடு செய்யும் போது,
சாப்பாட்டு நினைவுகள்..

சாப்பிடும்போது
படிப்பதைப் பற்றிய நினைவுகள்

படிக்கும்போது
உறங்கும் நினைவுகள்

உறங்கும்போது
நாளைய விடியலின் நினைவுகள்.

இன்னும் விடியவில்லை.
நினைவுகள்

ஓஷோவின் கதை இது

முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் உள்ள குக்கிராமத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கொண்டு எந்த வேலையும் செய்யாமலேயே காலத்தை கழித்து வந்தான். முப்பாட்டன் காலத்து சொத்துக்கள் இருந்ததால் அவனது ஜீவனத்துக்கு குறைவொன்றும் இல்லை. எப்போது தெருவில் சென்றாலும் கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செல்வான். யாருமே இவனை மதிக்கமாட்டார்கள். மாறாக அதே ஊரில் ஏழை பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மதித்தார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. தன் நண்பனிடன் கேட்டான் 

"அதெப்படி?, அவன் அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிறான். ஆனால் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள். என்னை எவனும் மதிக்க மாட்டேங்கறான்?"

நண்பர் கூறினார், "அவனை எல்லோரும் அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் அறிவாளி என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டால், உன்னையும் எல்லோரும் மதிப்பார்கள்." 

அந்த நொடியே, நம்மாளுக்கு அறிவாளி ஆகிவிட வேண்டும் என்ற பேராவல் உண்டானது. ஆனால் எப்படி என்ற உபாயம்தான் தெரியவில்லை. நண்பரின் ஆலோசனைக்கிணங்க ஊருக்கு வெளியே உள்ள ஒரு சாமியாரை பார்த்து, அவரிடம் பேசி, அறிவாளியாகும் வழியை கண்டு பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன், அந்த சாமியாரை சந்திக்க சென்றான். 

தியானத்தில் இருந்த சாமியாரின் முன்னால் தவிப்புடன் அமர்ந்திருந்தான். வெகு நேரம் கழித்து கண் திறந்த சாமியார், அவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன், மெலிதாக புன்னகைத்தார். பிறகு, "தெளிவாக சொல். நீ அறிவாளி ஆக வேண்டுமா? அல்லது அறிவாளி போல காட்டிக்கொள்ள வேண்டுமா?", என்று கேட்டார். 

இவன் திருதிருவென முழித்தான். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சாமி?", என்று கேட்டான். 

அவர், "அறிவாளி ஆவதற்கு வருடங்கள் ஆகும். ஆனால் அறிவாளி போல காட்டிக்கொள்வதற்கு கண நேரம் போதும். அறிவாளியாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமயத்தில் மாட்டிக்கொண்டு விழிக்க நேரிடும்.", என்று கூறினார். 

இவன் உடனே, "அப்படியானால் நான் அறிவாளியாக வேண்டாம். அறிவாளி போல காட்டிக்கொண்டால் போதும்." என்று கூறினான். 

சாமியார் இவன் காதில் ஏதோ சொல்ல, இவன் முகம் பிரகாசமானது.

அடுத்த நாளே அவன் பெயர் அந்த நாடு முழுவதும் பிரபலம் ஆனது. இவன் பின்னால் பலர் வரத்தொடங்கினர். அவனை அறிவாளி என்று ஒரு கூட்டம் தலையில் வைத்து கொண்டாடியது. வெளியூர் சென்றிருந்த அவனது நண்பருக்கு மகா ஆச்சர்யம். இவனிடம், "எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லோரிடமும் அறிவாளி என்ற பெயர் பெற்றாய்?", என்று கேட்டார். 

அவன், "இன்று இரவு நடக்கும் இலக்கிய கூட்டத்துக்கு வா. உனக்கே புரியும்." என்று கூறினான்.  

அன்று இரவு இருவரும் அந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெருங்கூட்டம். அறிஞர் ஒருவர் தனக்கு தெரிந்த கருத்துக்களை மக்களிடம் கூறிக்கொண்டிருந்தார். 

அவர் பேசி முடித்தவுடன், நம்மாள் எழுந்து, நீங்கள் கூறுவது அத்தனையும் பொய். எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்." என்று அடித்து பேசினான். 

அவர் சில சான்றுகளை எடுத்துக்காட்டினார். இவன், "இல்லையில்லை. இவை எல்லாம் போலியாக தயாரிக்கபட்டவை. உங்களை நம்ப முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க முடியுமா?" என்று சவால் விட்டான். அவர் அமைதியாகி விட்டார். 

இப்படியே வரிசையாக ஒவ்வொருவரின் கருத்துக்கும் எதிர்கருத்தை தெரிவித்து, நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டான். எல்லோரும் பயந்து பின்வாங்கினார்கள். இவன் நண்பனிடம், "பார்த்தாயா?,  இருக்கிறது என்று சொல்வதற்கு நிறைய அறிவும், சான்றுகளும் தேவை. இல்லை என்று சொல்வதற்கு அறிவும், சான்றுகளும் தேவை இல்லை. இருக்கிறது என்று நிரூபிக்க நிறைய கால அவகாசம் வேண்டும். இல்லை என்று நிரூபிக்க, கண நேரம் போதும். என்னிடம் விவாதம் செய்யும் அனைவரும், ஒரு கட்டத்தில் பின் வாங்கி விடுவதால், மக்களும் என்னை அறிவாளி என்று ஒப்புக்கொண்டு விட்டனர்." என்று பெருமிதம் பொங்க கூறினான். 

இந்த கதையை படிக்கும்போது, நம்மூரில் இருக்கும், பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். 


- சுகி. சிவம் 
பாலாவின் பக்கத்திலிருந்து - சுட்டது.
படித்ததில் பிடித்தது

செவ்வாய், ஏப்ரல் 03, 2012

மழைக்காப்பி

ஒரு ஆசை
அதற்குத் தோதாக
லேசான மழை

எட்டிப்பார்த்தேன்
சாரல் நனைத்தது
மின்சார கதவுதனை

என் பிம்பம்
எனக்கே தெரிந்தது
நிழலாக..
அதுவும் நனைந்தது
மழையில்

திடீர் யோசனை
வென்டிங் மிஷின் வெளியே
காசு போட்டு
காப்பியை எடுத்தேன்

காப்பியுடன்
கையை வெளியே நீட்டினேன்
டிக் டிக் டிக்..
மழைத்துளிகள் கலந்தன

காப்பியில் விழுத்த
மழைத்துளியும் காப்பியாய்
தெறித்தன..
காப்பி வெதுவெதுப்பானது

இன்று,  இப்போ
ஆபிஸில நான்...
மழைக்காப்பி குடித்துக்கொண்டு...!


திங்கள், ஏப்ரல் 02, 2012

சொல்லத்தெரியாது எனக்கு

கடினமான முறையில்
சுற்றி வலைத்து
சொல்லத்தெரியாது, எனக்கு

மௌனத்தை மொழிபெயர்த்து
உணர்வுக்கு ஒளியூட்டி
தமிழ் சொற்களையெல்லாம் ஒன்றுதிரட்டி
வாசகங்களை நீட்டி
வாசிப்போரை வாட்டி  
எழுத்துக்களுக்கு உயிரூட்டி
கோர்க்கப்படுகிற உணர்வுகளில்
உடன்பாடு இல்லை, எனக்கு

சிப்பி, முத்து, நத்தை
காற்று, பூ, மகரந்தம்
கடல், அலை, கரை
இலை செடி கொடி
என்றெல்லாம் உவமைகளை அடுக்கி
உணர்வுதனைச் சொல்வதில் என்ன பயன்?

எழுத்து ஜாலம்
சொல் விளையாட்டு
புரியாத வார்த்தைப் பிரவகம்
மொழியைப் புரட்டிப்போடுதல், என
வாசகர்களை கிலி பிடிக்கவைத்து
எண்ணத்திற்கு உருவம் கொடுப்பதில்
இஷடமில்ல, எனக்கு

வானளவு உயர்த்தியும்
நச்சத்திரங்களோடு சேர்த்தியும்
வென்மதியோடு ஒப்பிட்டும்
சூரியனுக்கு நிகராக 
பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாக
உன்னைப் பரிகாசிக்கத்து
போலியான வெளிப்பாட்டால்
ஆக்கிரமிக்கத்தெரியாது, எனக்கு

யாரையோ சொல்லி
எவரையோ உதாரணம் காட்டி
எங்கேயோ வந்து
புழு, வண்டு, தேனி, எறும்பு, கரப்பான்பூச்சி என
எதாவது ஒரு உவமையில் நிறுத்தி
சொல்லவந்ததை சொல்லாமலேயே
முற்றுப்புள்ளி வைக்கப்படுகிற
ஜாலமெல்லாம் தெரியாது, எனக்கு

வெள்ளை மனதில்
உதிப்பதையெல்லாம்
ஒளிவு மறைவு இல்லாமல்
அப்படியே சொல்லி பழகியாச்சு

புதிர் போடாமல்
தெளிவாக
நேராகவே சொல்கிறேன்
ஆச்சிரியத்தோடு, என் வினாவை.

‘_________________!?’





மகேசன் சேவை

யாருக்கு என்ன நடந்தாலும், விதி கர்மா என்பேன், அது என்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி. ஆனால், என் பிள்ளைகளுக்கு எதாவது வந்துவிட்டால் மட்டும், என் மனம் இப்படித்தான் யோசிக்கும்,..

`
நான், யாருடைய மனம் நோகும் படி எதாவது செய்துவிட்டேனா,!? யாருக்காவது எதாவது துரோகம் செய்தேனா? என்னையறியாமல் எதாவது பாவக்காரியங்களில் ஈடுபட்டுவிட்டேனா!? இறைவா என்னை மன்னி..என்று மன்றாடுவேன்.

எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது, பெற்றவர்களின் பாவ புண்ணியங்கள் பிள்ளைகளைச்சேரும், என்கிற வாசகத்தில்..! இது மூட நம்பிக்கை என்று புறந்தள்ளிவிட முடியாது. நான் பார்த்திருக்கின்றேன் என் அனுபவத்தில், ஒருவர் செய்த பாவத்தால், அவரின் ஒன்றுமறியா மகன்கள் பலிகடா ஆனதை.

திருமணமான பெண், கணவனின் நண்பர், வீட்டிற்கு வரப்போக இருக்கையில், அவனின் மேல் மோகம் கொண்டு, காதல் ஏற்பட்டு. காதல் முற்றி, வீட்டை விட்டு ஓடிவிடும் அளவிற்கு வந்து விட்டது நிலைமை. அவன் திருமணமாகாதவன். ஒரு பெண்பித்தன். அவனின் பொழுதுபோக்கே பெண்களை வசப்படுத்தி தம் வலையில் விழ வைப்பதுதான். அனுபவிப்பது, பிறகு அடுத்த பெண்ணைப்பார்ப்பது, அவனுக்கு அது சுவாரஸ்யம்.

இவளின் விஷயத்தில் இந்த லீலைகள் எடுபடவில்லை. நன்றாகச் சிக்கிக்கொண்டான். அவளும் அவனை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, இருவரும் ஊர்விட்டு ஓடிவந்துவிட்டனர்.

அவள் வீட்டைவிட்டு அவனுடன் ஓடுகிறபோது, அவளுக்கும் அவளின் கணவனுக்கும் பிறந்த ஆண்குழந்தைக்கு மூன்று வயது. பால் குட்டிக்கும் பச்சைக் குழந்தை. அக்குழந்தை தாயைக்காணாமல் கதறி அழுத காட்சி காண்போரை கரைய வைத்ததாம்.

அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பம் பட்ட அவஸ்தைகள் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த மூன்று வயது குழந்தை `அம்மா காணோம்.. அம்மா வேணும்.. அம்மா அம்மா..என தினமும் வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடி பெற்றவளைத்  தேடுவான்.
அந்தக்காட்சியை எழுதுகிறபோதே என் கண்கள் பனிக்கின்றன.


காதல் ஜோடிகள் பல வருடங்கள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி மறைந்து வாழ்ந்து, வெளி உலகிற்கு அறிமுகமானபோது அவர்களுக்கு இரண்டு மகன்கள். 

ஏற்கனவே உள்ள இவரின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த மூன்று வயது மகனையும் அங்கே விட்டு, இங்கே விட்டு.. நான் பார்க்கிறேன்! நீ பார்.! பெத்தவளே விட்டுட்டுப்போயிட்டா நமக்கென்ன.! அப்பனும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான்.! யார் பார்ப்பா இவனை..? சொத்து பத்தா இருக்கு வைச்சுப் பார்க்க..! ரொம்ப ராங்கி.. பார்க்கமுடியல.. என்று அங்கேயும் இங்கேயும் அலைக்கழிக்கப்பட்டு, பள்ளிக்குக் கூட முறையாக அனுப்பாமல்,  போகும் இடமெல்லாம் மொத்தடிப்பட்டு, கெட்டபெயரைச் சுமந்து, வளர்ந்து பெரியவனாகி, திருடு, பொய் புறட்டு என போலிஸ் வாசலெல்லாம் ஏறி இறங்கி, ஒரு வகையாக, வாழ்வில் செட்டல் ஆகிவிட்டான்.

இவர்களின் புதிய உறவில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவன், பதினாறுவயதில், பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கி, கழுத்திற்குக்கீழ் உடல் செயலிழந்து, இப்போது கிட்டதட்ட முப்பது வயதாகியும் அதே நிலையில், சக்கர நாட்காலியில் உலவுகின்றான்.. தமது கைகளைக்கொண்டு உணவு உண்பதற்குக்கூட இயலாமல் இருக்கும் நிலையில் அவன். 

தாய்தான் உணவு ஊட்டி விடுகிறாள். மூன்று வயது பச்சைப்பிள்ளைக்கு பால் கொடுக்காமல் தவிக்க விட்டதன் காரணமாகவே, முப்பதுவயது மகனுக்கு இன்னமும் உணவு ஊட்டுகிற நிலையில் வைத்துவிட்டார் இறைவன், என்பார்கள் சிலர்.

அவள் படுகிற அவஸ்தைகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இன்னொரு மகன், வேலை செய்யும் இடத்தில், கம்பனியின் பணத்தைக் சூறையாடிவிட்டான் என்கிற குற்றச்சாட்டின் பேரில் போலிஸுக்குச் சென்று, பழிபாவங்களை சுமந்து, செய்துகொண்டிருந்த வேலையில் இருந்தும் நீக்கப்பட்டான்.

பிள்ளைகள் படுகிற அவஸ்தைக்கு, தான் செய்த பாவங்களே மூலக்காரணமென்று அவளும் மதம்மாறி பல தெய்வங்களிடம் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருக்கின்றாள். இன்னமும் துன்பங்கள் தொடர்கதைதான்.


ஆகவே,  பிள்ளைகளின் வாழ்வு சிறக்க, பாவச்செயல் என்று வகைப்படுத்தப்பட்ட எந்த காரியத்திலும் நான் ஈடுபடவே கூடாது என்கிற எண்ணம் தணலாய் இருக்கும் எனக்குள்.

நான் நல்லொழுக்கங்களையும் நேர்மையையும் கடைபிடிக்கின்ற போது, என் குழந்தைகளுக்கு எதுவும் நிகழாமல் இறைவன் அவர்களைக் காப்பான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு.

பிறர்மேல் பொறாமை படுவதற்குக்கூட அஞ்சுவேன். அது கூட பாவச்செயல்தான். பல அவலங்களின் தொடர்கதைகளுக்குக் காரணம் இந்த பொறாமை குணமே.

இறைவனிடம் வேண்டுவது, எனக்கு எந்த முறைக்கேடான சந்தர்ப்பத்தையும், சோதனையையும் கொடுத்துவிடாதே. நான் இப்படியே நல்ல பெண்ணாகவே இருந்து விட்டுச் சாகிறேன்.

என் வாரிசுகளை நல்லபடி காப்பாய். மக்கள் சேவைக்காகவே உருவாகிறவர்கள் அவர்கள். பெரிய ஆட்களாக வருவார்கள், மக்களைக் காப்பாற்றுவார்கள்.

நீயே துணை.      

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012