புதன், ஜூலை 11, 2012

வெட்டிவேலை


நாய்

நீ வீசுகிற
எலும்புகளுக்கெல்லாம்
வால் ஆட்டவேண்டுமென்றால்
என்னை நாயாக அல்லவா
படைத்திருப்பார்
அந்த இறைவன்.

%%%%%

ஏக்கம்

சட்டியில் பிரட்டிய
சட்டிச்சோற்றின்
இறுதி பருக்கை
கையில் தொட்டு
நாக்கில் வைக்கும் போது
நன்றி சொல்கிறேன்
அம்மாவின் சமையலுக்கு

%%%%%%

அவசரம்

`கிளம்புங்க.. கிளம்புங்க
என்று கணவனை
ஓட்டும் பெண்கள்
அவன் கிளம்பிய பிறகும்
கிளம்பாமல்
பல வருடங்களாக...

%%%%%%

இழக்கமனமில்லை

பேச்சில் சுவாரிஸ்யமில்லை
இடையிடையே
உப்பு எனவும்,
ஜாங்கிரி எனவும்
மாங்காய் எனவும்
காரம் எனவும்
கற்றாலை எனவும்
வலுக்கட்டாயமாக
சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும் இழக்க மனமில்லாமல்.....

%%%%%%%

மனப்பதிவுகள்

பதிவிடும் தருணங்களில்
தோன்றித்தோன்றி
மறைகின்றன
காகிதத்தின் வென்மைக் கோடுகளாய்
மனப்பதிவுகள்
கண்கள் சிமிட்டப் படும்போது
கருத்துக்களும் இல்லாமல்
காகிதங்களும் இல்லாமல்..
வெரித்துக் கொண்டிருக்கிறேன் 
வெறுமையை

%%%%%%

அமைதியாய்.

நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்
உன்னால் பொறுக்கப் படும் கற்களை 
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். 
நமது இடவெளி நீளும் போது
நீ எறிகின்ற கற்களால் 
எனக்குச் சேதம் வராமல் 
என்னை நான் தற்காத்துக் கொள்ள 
கவசம் தேடிக் கொள்கிறேன்.. 
மௌனப் புன்னகையில்...

%%%%%%


பால்யதோழி

நீண்ட நாள் சந்திக்காத
என் ஒத்த வயது பள்ளித்தோழி
ஒரு திடீர் சந்திப்பில்
அப்படியே பார்த்த மாதிரியே இருவரும்..
கையில் குழந்தையோடு..
உன் குழந்தையா?இல்லை, பேரக்குழந்தை..
விடைபெறும் போது
`
பாட்டிக்கு டாட்டா சொல்லுஎன்னையும் பாட்டியாக்கினாள்
பதினைந்து வயதிலே அம்மாவான அவள்....

%%%%%%

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?

இணைய முத்தம்

உணர்வே இல்லாத
உன் `உம்ம்மா’ விற்காக
நிஜமாக துடிக்கத்தான் செய்கிறது
என் இதயம்

செவ்வாய், ஜூலை 10, 2012

உண்மையே உன் விலை?

ஒரு விஷயத்தையொட்டிய எதிர்ப்புக்கடிதம் பத்திரிகையில் வந்திருந்தால், அதைப் படித்து விட்டு, கருத்துகளைத்திரட்டி பதில் மடல் எழுதவேண்டும்; இல்லையேல், பிரச்சனை என்ன என்பதனை சீர்த்தூக்கிப்பார்த்து அதைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். அதை விடுத்து எழுதியவரின் கைப்பேசி எண்களை எடுத்து, அதை யாரிடமாவது கொடுத்து, இரவு பகல் பாராமல் கண்ட கண்ட குறுந்தகவல்களை எல்லாம் அனுப்பி வெறுப்பேற்றுவது எந்த விதத்தில் நியாயம்?

பாதிக்கப்பட்டவருக்கு கருத்து சொல்வதற்கு சரக்கு ஏதுவும் இல்லாதபட்சத்தில் இப்படிக் குறுக்குவழியில், எழுதியவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீமை விளைவித்து குளிர்காய்ந்து குள்ளநரி வேடம் தரிக்கும் கோழைகளை என்ன செய்வது?

ஒரு சாதரண உலக நியதி வழக்கத்தில் உள்ளதுதான், அதாவது உன்னைப்பற்றி ஒருவர் விமர்சனம் செய்துவிட்டால், அதற்கு நீ அதிக முக்கியத்துவம் கொடுத்து படப்படப்பாகிறாய் என்றால், சொல்லப்பட்ட விஷயம் அப்பட்டமான உண்மை என்றும் அதை நீ முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாய் என்றுதானே அர்த்தம்.! இது கூட தெரியாமல்,  எல்லா எதிர்ப்புகளுக்கும் கதவடைக்கிறேன் பேர்வழி என, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு பிச்சை எடுக்கும் பாணியில் தொலைபேசி அழைப்பு விடுத்து அழுது வடிவது மிக மிகக் கேவலமான செய்கை இல்லையா!.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது போன்ற மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் என்ன செய்வார்கள்? அதிகார துஷ்பிரயோகம் தானே..

கடந்த ஞாயிறு அன்று நான் எழுதிய, `வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்’ என்கிற கட்டுரை, எனது புகைப்படத்தோடு என் சொந்த பெயரோடு மிக சிறப்பாக வந்திருந்தது பத்திரிகையில்.  இவ்வேளையில் தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி உரித்தாகுக-.

ஒரு வாசகரோ அல்லது எழுத்தாளரோ தைரியமாக தமது கருத்துகளை முன் வைக்க பத்திரிகையும் அதற்குத்தகுந்தாட்போல ஆதரவு வழங்கினால், உழல்கள் அவ்வளவு தைரியமாக செய்யப்படமாட்டாது.  ஊழலை ஒழிக்கமுடியாதுதான் ஆனால் ஓரளவு குறைக்கப்பார்க்கலாம். இப்படி நமது ஆதங்கத்தைச் சொல்ல  நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு பத்திரிகைத்துறையே. அவர்களும் சில வேளைகளில் நமது படைப்புகளுக்கும் கருத்துகளுக்கு பாரமுகமாகவே இருந்து விடுகின்றார்கள் என்பதுதான் வேதனை.! நமக்கு எதற்கு இந்த வீன் வம்பு என.!

எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு உடன்படவில்லை என்றால், கருத்து மோதல்களுக்குத் தயாராக வேண்டுமேயொழிய அற்பத்தனமாக அறைகூவல் அடக்கத்தின் மறுவுருவை பறைச்சாற்றிவிடும். எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்குமல்லவா.!

அந்த எதிர்வினைக் கட்டுரை, பத்திரிகையில் வெளிவந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகின்றன, ஆனாலும் எனக்கு வரும் அநாமதைய அழைப்புகளும் அசிங்கமான குறுந்தகவல்களும் எனக்கு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

என்ன மாதிரியான வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்டிருந்தால், இதுபோன்ற அருவருக்கத்தக்க குறுந்தகவல்களை அனுப்ப எததனிப்பார்கள்.!?

குறுந்தகவல் 1 - நான் உனக்கு சாப்பாடு வாங்கித்தந்தேன், அதற்கு இதுதான் நீ செய்யும் நன்றியா?

குறுந்தகவல் 2 - அறவே நடிக்கத்தெரியாத உனக்கு, நான் பணம் கொடுத்து நடிக்கவைத்தேனே, அறிவிருக்கா?

குறுந்தகவல் 3 - முட்டாள் உனக்கு எழுதவே தெரியாது. நீ எழுதி கிழிக்கிறாயா?

குறுந்தகவல் 4 - வேட்டிக்குள் அடங்கி இருக்கவே மாட்டாயா? (மற்றது வேண்டாம்)

குறுந்தகவல் 5 - அறிவுகெட்ட முண்டம், யார்கிட்ட மோதற!?

குறுந்தகவல் 6 - ஏற்கனவே நிறைய மூக்கு உடை பட்டாய், போதாதா? இன்னும் உடைபடுவாய், நான் கைத்தட்டிச் சிரிப்பேன்..ஹஹஹ

குறுந்தகவல் 7 - யாரோ ஒரு பிரபலமான நாடக நடிகர் உன் நடிப்பைப் பார்த்துக் காறித் துப்பினாராம்.! அதோடு உனக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாம், அதனால் தான் நீ இப்படியெல்லாம் எழுதி உன் வயிறெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறாயாம்.! ஹஹஹ

குறுந்தகவல் 8- உன் படத்தைப்போட்டு பல்லைக்காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கற கட்டுரையில், பெரிய அழகின்னு நினைப்பு.

குறுந்தகவல் 9 - நேற்று நாங்கள், தலைநகர் பிரிக்ஃபீல்டில் ஒரு ரெஸ்டரண்டில் சாப்பிடச்சென்றோம், அப்போது எல்லோரும் உன் லட்சணத்தைப் பற்றித்தான் பேசினார்கள். நாடறிந்த ஒன்று உன் நாற்றமெடுத்த கதை.

ஒரு இருபது அழைப்புகள் - 181 குறுந்தகவல்கள். எந்த அழைப்பையும் எடுக்காமல் எந்த குறுந்தகவலுக்கும் பதில் போடாமல் - கால் ஆட்டிக்கொண்டு ப்ளாக் எழுதறேன்..

எவ்வளவு மோசமாக இருக்கின்றது பார்த்தீர்களா நமது இலக்கிய உலகம்? பத்திரிகையில் இவற்றையெல்லாம் சொன்னால், இப்போது ஒன்றும் வேண்டாம், அவர்கள் என்னமோ சொல்ல வருகிறார்கள், அவற்றை இந்த வாரம் போட்டு விட்டு, அடுத்த வாரம் நீங்கள் உங்களின் கருத்தை தெரிவிக்கலாம் அம்மா.. என்றார் தலைமையாசிரியர்.

அதுசரி, அதுவரைக்கும் இந்த உட்சபட்ச ஆக்ரோஷ நிலை நம்முடனேயே இருக்கவேண்டுமே எழுதுவதற்கு! மௌனம் காப்பதால், பல விஷயங்கள் அப்படியே ஆறிப்போகும். ஆறிப்போனால், சொல்ல வந்ததை சொல்ல இலயாமலும் போகும். நாளை நான் இல்லாமலும் போகலாம், நாளைய நிலைமையும் மாறிப்போகலாம்.! ஆனால் அநீதி ஜெயிக்கக்கூடாது. அராஜகம் செய்து அடுத்தவரை வீழ்த்தி வாழ நினைப்பவர்களை வாழ விடவே கூடாது. அவர்களுக்கு எல்லா இன்னல்களையும் கொடுத்து விரட்டியடிக்கவேண்டும்.

இதில் ஒரு கூத்து என்ன தெரியுங்களா? சாட்சியை வைத்துக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடுவது. அதாவது, இப்படி குறுந்தகவல்களை அனுப்பினால், அங்கே சம்பந்தப்பட்டவரின் நம்பர் வரும் தானே.!?
`சைபர் கிரைம்’ அதிகரித்து வருவதால், அரசாங்கமே எல்லோருடைய கைப்பேசி எண்களையும் அதனதன் நிறுவனங்களின் பதிவு செய்து கொள்ளவேண்டுமென்கிற கட்டாய நிபந்தனையை அமலுக்குக்கொண்டு வந்தது. அதனால் எல்லோருடைய தொலைப்பேசி எண்களும் பதிவாகியே வைக்கப்பட்டிருக்கும். ஒரு எண்ணிலிருந்து, இதுபோன்ற அசிங்கமான குறுந்தகவல்கள் வந்தால், தகுந்த இடத்தில் புகார் கொடுத்தோமென்றால், ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார்கள்.  காவல்துறையில் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்கிற பச்சை சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும், வீடு புகுந்து இழுத்துவருவார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் ஏற்கனவே எம்மாதிரியான குற்றச்செயல்களில் இந்த தொலைப்பேசி எண்களைக்கொண்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதனையும்  வெட்டவெளிச்சமாக தெரிவித்தும் விடுவார்கள். இது போன்ற நவீன தொழில் நுற்ப சூழலில் நாம் இருக்கின்றோமென்கிற புரிதல் கூட இல்லாத அப்பாவிக் குற்றவாளியாக இருக்கின்றார்கள் என்பதுதான் மற்றொரு வேதனைக்குரிய விஷயம்.  என்ன செய்வது, மலேசிய சூழலில் நாம் தான் இப்படி, மற்ற இனத்தவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள்.

உண்மையே உன் விலை என்ன?

   

திங்கள், ஜூலை 09, 2012

விசிலடிச்சான் குஞ்சுகள்

ஒத்திகை

கனவிற்கு ஒத்திகை
பார்த்த பின்
விரைவாகவே வருகிறது
உன் நினைவோடு கூடிய
உறக்கம்

%%%%%%%

விசிலடிச்சான் குஞ்சுகள்

மரத்திலிருக்கும் குருவிகளை
`ஈவ் டீசிங் சட்டத்தில்
சிறையில் போடுங்கள்
கிளைகளில் மறைந்துகொண்டு
தினமும் விசில் அடிக்கிறன
என்னைப்பார்த்து...

%%%%%%%

நன்றியாய்..

அதிக உஷ்ணத்தில்
அசைகின்ற என் செடிகள்
நான் ஊற்றிய நீருக்கு
நன்றியாய் தென்றலை வீசிக்கொண்டு...


%%%%%%%

தவிப்புகள்

தவணை முறையில்
வராதே...
தவிப்புகள் கூட 
காலாவதியாகிறது

%%%%%%%

லவ்

ஐ லவ் யூ
சொன்ன அடுத்த வினாடி
அவனே உலகமகா
மன்மதனாகிறான்
அவளின் பார்வையில்..

%%%%%%%%

பின்நவீனத்துவம்

உன் காதலிக்காக
நீ வரைந்த ஓவியத்தை
நானும் காண்கிறேன்
நவீன ஓவியமாக

%%%%%%%%

பதிலுக்காக

எதற்குமே விடைகொடுக்காமல்
கேள்வியாகவே இருக்கின்றாய்
உன்னை நான் தொடர்கிறேன்
என்பதற்காக!!

%%%%%%%%%

கவிக்கரு

உன்
கருவை சுமக்கிறேன்
பிரவத்திற்காக அல்ல
பிறக்கப்போகும் படைப்பிற்காக..!

%%%%%%%%

நான்

என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்

%%%%%%%%

எப்படிச்சொல்வேன்

என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
நீ இல்லாத பொழுது
நல்ல பொழுதாய் அமைய
இறைவனிடம் வேண்டியும்
புரோஜனமில்லாமல்

%%%%%%%

திணறல்

நீரில் மூழ்க மூழ்க
உயிரின் முட்டைகள்
மேலெழுவதைப்போன்ற ஓசையில்
உன்னை அழைக்கிறேன்
பிரிவின் வலியை
நெஞ்சில் அமுக்கிக்கொண்டு

%%%%%%%%

பூக்கின்ற

சொல்வதை ஏற்கிறேன்
பயிற்சியில் போதனைகள்
இலக்கனத்தோடு யாப்போடு..
எளிதல்லவே
உனது பாணி எனக்கு வருவது..!
நீ சிகரம் தான்,
இமயம் தான்
எனக்கு மாலைகள் வேண்டாம்
என் மனதில்
உன் நினைவில் பூக்கும்
ஒரு மலர் வேண்டியே
உன் பின்னே நான்..

%%%%%%%%
 
 
  




வெள்ளி, ஜூலை 06, 2012

சந்தித்தால்....

காதலிக்கவில்லை

கையெழுத்து அழகாக இல்லை,
சர்வ நிச்சயமாக சொல்லலாம்
அவன் யாரையும் காதலிக்கவில்லை.

%%%%

ஆய்வுக்கூடம்

ஒரு நேர சமையலுக்கு எவ்வளவு ஆய்வு..
இரால் ஆய்ந்தேன்
கீரை ஆய்ந்தேன்
கறிவேப்பில்லை ஆய்ந்தேன்
வெங்காயம் ஆய்ந்தேன்
பூண்டு ஆய்ந்தேன்
சமையல் கூடம்
ஆய்வுக்கூடமே..

%%%%%%

ஜி

உயிர் என்றால் - உயிர்
மெய் என்றால் - உடல்
இரண்டும் சேர்ந்தால்
ஜி..

%%%%%%

வெள்ளை கலாச்சாரம்

மின்சாரத்தடை
மெழுவர்த்தி ஏற்றினேன்
மின்சாரம் வந்தது
மெழுவர்த்தியை ஊதி அணைத்தேன்
பழக்கதோஷத்தில்
கைகளைத்தட்டினாள் குழந்தை.

%%%%%%

சுய நினைவு

கடைக்குப்போனேன்
பொருள் வாங்கினேன்
பர்சை பாக்கெட்டில் வைத்தேன்
பாக்கெட்டில் இருந்து எடுத்து
ஹேன்பெக்கில் வைத்தேன்
இவை எல்லாம் சுய நினைவோடுதான் நிகழ்ந்தது
இருப்பினும் மீண்டும் ஒருமுறை
ஹென்பெக்கில் பர்ஸ் உள்ளதா என 
சரி பார்க்கச்சொல்கிறது மனசு....

%%%%%%

எனக்குமானவன்

உனக்குள் வைக்கப்பட்ட திறமைகள்
நான் தலையசைத்து 
ரசிப்பதற்காகவே..

%%%%%

அழியும் சேகரிப்புகள்

நமது சேகரிப்பை,
நமது யூகத்தை,
நமது பின்பற்றலை,
நமது தேடலை,
நமது நியாயங்களை,
நமது கூர்மையை,
நமது கணிப்பை ,
நமது பார்வையை,
நமது திறமையை,
நமது சிறப்புகளை
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் 
யாரோ ஒருவர்
சர்வசாதணரமாக
உடைத்துக்கொண்டே இருக்கின்றார்..
ஆதாரத்தோடு.!

%%%%%%%

தமிழ்தான்

என் உழைப்பில்,
நான் சம்பாதித்த பணத்தை,
அவர் கொடுக்கச் சொன்னார்
என்றால்தான்
வாங்கிக் கொள்கிறார்
அம்மா. 

%%%%%%%

பட்டு

உள் சொட்டுகள் கூட
பட்டுவிடுகின்றன
வெயில் வெளியேதான் அடிக்கிறது.!?

%%%%%

நோய் தன்மை

தன்னாலே சரியாகிப் போகிற
வியாதிகளுக்குத்தான்
நாம் மருந்து எடுத்துக்கொண்டிருக்கின்றோம் -
தினமும்.

%%%%%%


உன்
விழியும்
என்
`வாலும்’
சந்தித்தால்?

%%%%%%






வியாழன், ஜூலை 05, 2012

புறக்கணிக்கப்பட்ட மனது

பிரிய மனமில்லாததால்
பிரிந்து விடுவாயோ
என்கிற பய உணர்வால்
பிரிந்து செல்கிறேன் உன்னை.!

விலகிட மனமில்லாததால்
எங்கே விலகிவிடுவாயோ
என்கிற உளவியல் சிக்கலில்
விலகிச் செல்கிறேன் உன்னை.!

மறக்கவே முடியாததால்
மறந்துவிடுவாய்
என்கிற உணர்வுக்கொந்தளிப்பிலே
நானே மறந்து விட்டுச் செல்கிறேன் உன்னை.!

புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள
பக்குவமற்றவளாய்
புறக்கணித்து விட்டு செல்கிறேன் உன்னை

தவிக்கவிடுவதாய் நினைத்து
நித்தம் நித்தம் தவிப்பில் உழன்று
தவிப்பிலே கழிகிறது
புறக்கணிக்கப்பட்ட என் மனது





புதன், ஜூலை 04, 2012

வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்

நம்ம ஊர் வானொலி நாடகங்களின் தரம் படு மோசமாகிக்கொண்டிருக்கிறன என்கிற புரிதல் நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கின்றது..!? ஒரு காலத்தில் தமிழர்களின் வீடுகளில் கலைக்கட்டிய இந்நாடகத்துறை இப்போது வலுவிழந்து காணப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்று என்பது பலரின் மனக்குமுறல். 

இலக்கியத்தில் அறவே பரிச்சயம் இல்லாதவர்கள் இத்துறையின் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்துகொண்டுநிலைமையை படுமோசமாக்கிக்கொண்டிருப்பது வெளியே ரசிகர்களான எங்களுக்குப் புரிந்திருக்கும் வேளையில், உள்ளே தமிழ் துறையில் தலைமை வகிப்பவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் இங்கே வியப்பு.!   

நாடகங்களை தயாரிக்கின்றார்களே, உலக அரங்கில் மிகபிரபலமாகப் பேசப்பட்ட நாடங்களை இவர்கள் பார்த்ததில்லை போலும். அல்லது எது நாடகமென்று சரிவர புரியவில்லைதான் போலும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை விடுங்கள், மௌலி, கே.பாலசந்தர், விசு, ஒய்.ஜி என இப்படிப் பலரின் சினிமா படங்கள் அனைத்தும் நாடகங்களே.! மக்களுக்கு அருமையான கருவைக் கொண்டுவரவில்லையா அந்நாடகங்கள்!இன்றுகூட திரையரங்குகளை அலங்கரிக்கும் அற்புதமான திரைப்படங்கள் அனைத்தும் நாடகங்களே. அதையும் எடுத்துக்கொள்ளலாமே துணையாக வழிகாட்டியாக.!

நம்முடைய நாடகங்கள் குறிப்பாக வானொலி நாடகங்கள் இன்னமும் அதன் கதைப்போக்கில் 1950திலேயே நின்றால் எப்படி? இன்றைய இளஞர்களின் கைகளிலே உலகம். உலகத்தை கைகளில் கைப்பேசியாக வைத்துக்கொண்டு உலவும் இளஞர்களுக்கு பாடமாக அமைகின்ற கதைகளுக்குப் பஞ்சமா என்ன?

இவர்களாகவே (வானொலி தயாரிப்பாளார்கள்) கதைத்தேர்வில் ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு, இதுதான், இப்படித்தான் நாடகம் இருக்கவேண்டுமென்கிற வரையறையை முதலில் தகர்த்தெறிந்து விசாலமாக பார்வைக்குள் வந்துவிடவேண்டும். சொல்லப்படும் கதைகள் தற்போதைய நாட்டு நிலவரத்தில் எம்மாதிரியான பங்குதனை வகிக்கின்றது என்பதனை ஆராயும் கதைக்குழு நமது வனொலியில் இருக்கின்றதா? அதற்காக புரிதல்தான் நமது வானொலி தயாரிப்பாளருக்கு இருக்கின்றதா?

ஒரிரு நாடகத்தில் நானும் பங்கேற்று அங்கே அரங்கேறும் நிகழ்வுகளைக் கண்காணித்தவள்  என்பதால்தான், இதை நான் இங்கே சொல்ல வருகிறேன். அதாவது, நாடகங்களை நல்ல முறையில் நடத்தப்பட வேண்டுமென்கிற அக்கறையில், நல்ல கதைகளைக்கொண்ட நாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறார் தயாரிப்பாளர். வசனத்தில் சரியாக உச்சரிகவில்லை, பேசும்போது ஒலிகளை சரியாக ஒலிக்கவும். வசனத்தில் ஏற்ற இறக்கங்கள் அவசியம், அழும்போது கையில் இருக்கும் காகிதத்தைப் பார்க்கவேண்டாம், இது சரியில்லை.. அது சரியில்லை என நடிப்பவர்களை நடுங்கச் செய்வதில் வல்லவரான தயாரிப்பாளார், ஒன்றுமேயில்லாத கதைகளை மட்டும் எப்படி கட்டிக்கொண்டு அழுகிறார் என்பதுதான் இங்கே வினா.!

அடுத்த வினா உடனே வரும் சிலருக்கு.. ஏன் நம்ம தயாரிப்பாளருக்குக்குட வரலாம்.! நீ இவ்வளவு பேசுகிறாயே, உன்னால் ஒரு நாடகம் எழுத முடியுமா? என்னங்க அந்நியாயம் இது? இறந்தால்தான் இறப்பைப்பற்றி பேசமுடியுமென்றால், ஒருவரும் மரணம் குறித்து மூச்சு விட முடியாது தானே!? ஒரு ரசிகர் என்கிற பார்வையில் நமது கருத்துக்களைச் சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லையா? எழுதுகிறவர்கள்தான் கருத்து சொல்லவேண்டுமென்றல், தங்களின் வட்டத்தில் உள்ள அந்த பத்து பதினைந்து எழுத்தாளர்கள் மட்டுமே கருத்தைச் சொல்வதற்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பார்த்தோமென்றால், அவர்கள் தைரியமாகத் தமது கருத்துதனைச் சொல்லுவார்களா என்ன? பணம் வாங்கிக்கொண்டு விசுவாசமில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்கிற அவச்சொல் அவர்களுக்கு வந்துவிடாதா, உங்களால்?!  

சரி அதை விடுங்க, என்னால் ஒரு நாடகத்தை எழுதித்தர முடியுமா என்றால்.....முடியாதுஏனென்றால் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக, கற்பனையை மழுக்கடிக்கின்ற வேலைகளில் நான் ஈடுபடவே மாட்டேன். எனக்கென்று சுதந்திர எழுத்துச்சூழல் கைவசம் இருக்கின்றபோது, யாரோ ஒருவர் வகுத்துவிட்ட சட்ட விதிமுறை என்கிற வட்டத்திற்குள் பணத்திற்காக சோரம் போகும் செய்கையை ஒரு நல்ல எழுத்தாளன்  செய்யவேமாட்டான், நான் மட்டும் என்ன விதிவிலக்கா!. உங்களின் விதிமுறை கெடுபிடிக்கெல்லாம் கதைகள் எழுதினால், கற்பனை என்கிற குப்பைகளைக் கட்டிக்கொண்டு கழுதைபோல் பொதிசுமக்கவேண்டி வரும். அல்லது எதாவது ஒரு சினிமா அல்லது சீரியல் கதைகளை திருடி (வாழ்வே மாயம் திரைப்பட கதையைப் போல்) அதை அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் மாற்றி, நமது பெயரைப் போட்டுக்கொண்டு வானொலிக்கு அனுப்பி விடவேண்டியதுதான். தயாரிப்பாளர் என்ன கண்டு பிடிக்கவாப் போகிறார்.! (கேட்பவர்கள் எல்லோரும் கேணயர்கள் என்கிற நினைப்புதான்.) இது போன்ற அசிங்கமான வேலைகளையெல்லாம் நான் செய்ய மாட்டேன். இதற்கு அப்பார்பட்ட கதைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் அங்குள்ளவர்களுக்கு இல்லை. மெனகட்டு எழுதினாலும், நம் சக்திதானே விரையம். தேவையா? அதுவும் அடுத்து யாருடைய கதை நாடக வடிவம் கொடுக்கப்படவேண்டும்! யாரெல்லாம் அதில் நடிக்கலாம், பணம் யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்படும் என்கிற நியதியெல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதுதானே.! இதில் நான் நுழைந்து என்ன கிழிக்கப்போகிறேன்.!?

எல்லா கதைகளையும் நான் குறை சொல்லவில்லை. சில நல்ல நாடகங்களும் அரங்கேறிய வண்ணமாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலும் குப்பைகளே. அடுத்த வினாவும் வரலாம், `நல்ல கதைகளுக்குக் காத்திருந்தால், கதைகள்/நாடகங்கள் வராது. வாரந்தோரும் வெளிவரும் நாடகங்கள் முற்றாக நிறுத்தப்படும் நிலை வரலாம். இது அபத்தமில்லையா?’  என்னங்க இது கூத்து? உங்கள் கைகளில் அதிகாரம் இருக்கின்றதுதகுந்த சன்மானம்வேறு வழங்குகிறீர்கள், என்னவேண்டுமானலும் செய்து இந்ததுறையை மேல் நிலைக்குக்கொண்டு வரமுடியாதா என்ன? கெடுபிடிகளை அதிகப்படுத்தினால், தற்போது எழுதிக்கொண்டிருக்கும் அதே எழுத்தாளர்கள் கூட நல்ல முறையில் தமது எழுத்துக்களை மெருகேற்றிக் கொண்டு வருவதற்கு முயல்வார்கள்தானே!? கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அற்பத்தனமான காரண்ங்கள் முகஞ்சுழிக்க வைக்கின்றன பலவேளைகளில்.

இறுதியாக ஒரே ஒரு கேள்வி.. நிறைய பணவிரையம் செய்து, குறுநாடகப்போட்டி, சிறந்த நடிகர்/நடிகைகள் தேர்வுப்போட்டி, எழுத்தாளர் சங்கத்துடன் நடத்தி நாடுதழுவிய நிலையிலான பல போட்டிகள் என நடைப்பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நிலை என்ன? வானொலி நாடகத்துறை அவரகளை வரவேற்கிறதா?

(நீண்ட நாட்களுக்குப்பிறகு, இன்று நான் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய ஓர் கடிதம்.. வந்தால் என்ன வராவிட்டால் என்ன.! )