செவ்வாய், செப்டம்பர் 18, 2012

தீ

ஒரு புகைச்சல்
ஒரு தீக்குச்சி
ஒரு தணல்
மண்ணெண்ணய்
பற்றிக்கொள்ளல்
நீராய் ஒரு வத்தி
வருடலாம் ஒரு புகைச்சல்
தணலால் ஒரு பேருவகை
மீண்டும் தீப்பிடிக்கக்கூடும்..

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஒழுக்கம் விழுப்பம்

வெட்டி வேதாந்தம்,
வீண்கதை மன்னன்
பேச்சில் எப்போதும் கேலி கிண்டல்
எல்லாவற்றிலும் அலட்சியம்,
தேவையற்ற வீராப்பு
இவர்தான் தாத்தா..

வெற்றிலை உரலை
`டொக் டொக்’ என இடித்துக்கொண்டு
எல்லாரையும் பழித்துக்கொண்டு
வாயிற்கு வந்த வார்த்தைகளைப் புலம்பி
காறி உமிழ்ந்துக்கொண்டிருக்கும்
பாட்டி..

நானே சாகிறேன்
எனக்கு என்றுதான் விடுதலையோ
பொழுது போய் பொழுது வந்தா
குடிகாரனோடு பாடாயிருக்கு
எழவு..சனியனுங்க..
எமன் கொண்டுக்கிட்டு போகமாட்டானா.
இப்படி ஓயாமல் சாபங்களின் வழி
பெற்ற பிள்ளைகளையும் கட்டிய கணவனையும்
வசவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கும் அம்மா.....

அக்கம் பக்கத்தில் போடும்
குழாயடி சண்டையில்
வீதியில் பட்டமாய் பறக்கும்
ஆபாச வசனங்கள்
கெட்டவார்த்தைகளின் பல்கலைக்கழகம்..

சீர்க்கெட்ட உறவில்
உழலும் சுற்றுச்சூழல்கள்
தந்தையோடு மகள்
அண்ணனோடு தங்கை
அண்ணியோடு கொழுந்தன்
தம்பியோடு அக்காள்
கொல்லைப்புறத்தில் முகமூடிகளோடு
ஓடி மறைகிற கள்ளக்காதல்

தெருவெல்லாம் ஆர்ப்பாட்டம்
திருவிழா குண்டர் சண்டை
மது,போதை, கஞ்சா, கொலை, கொள்ளை
பெண் கடத்தல், கற்பழிப்பு
அரிவாள் வெட்டுக்குத்து
ஓயாத ரணகளம்

இப்படியே ஓடி மறைந்த
இருட்டு பின்புலத்தை நினைத்துப்பார்க்கின்றேன்
எதுவுமே என்னோடு ஒட்டிக்கொள்ளவில்லை
துணையாக வந்த
குறளும் வள்ளுவரையும் தவிர..


16/9/2012 கிள்ளானில் திரு பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 100வது  வாசகவட்ட இலக்கிய நிகழ்வில், கவிதைப்போட்டியில், ஒழுக்கமே விழுப்பம் என்கிற தலைப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட எனது கவிதை இது. விதிமுறை, 16வரிகள். எனது கவிதை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை இருப்பினும் பங்குபெற்றதில் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்து, அற்புத பரிசை வழங்கி - மேடையிலேயே சிறப்புச் செய்தார்.  
நன்றி தலைவரே. 




சனி, செப்டம்பர் 15, 2012

விக்டோரிய ஸ்டேஷன் (Victoria Station)

ரம்லான் பெருநாள் தொடங்கி ஒரு மாதகாலம் முடிவுக்கு வருவதால், அதைக்கொண்டாடும் இறுதிகட்ட விருந்துகள்  கடந்த ஒரு வாரகாலமாக ஓயவேயில்லை எங்களின் அலுவலகத்தில். மதிய உணவு கொண்டுவரவேண்டாம் எங்களின் டிப்பார்ட்மெண்டில் விருந்து, வந்து கலந்துக்கொள்ளுங்கள் என்கிற மின்னஞ்சல் வந்த வண்ணமாக இருந்தது.

தினமும் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்ற விருந்துகளை விட, நேற்று கலந்துக்கொண்ட விருந்து எனக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. எங்களின் டிப்பார்ட்மெண்ட் ஏற்பாடு.

விக்டோரிய ஸ்டேஷன் என்கிற ஐரோப்பிய ரெஸ்டரண்டில் இந்த மதிய வேளை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு ஐரோப்பிய வகை உணவுகள். ஓரளவுதான், நம்மவர்களின் உணவுபோல் இல்லை. எப்பேர்பட்ட தங்கத்தட்டில் சாப்பாடு கொடுத்தாலும் வாழையிலையில் சாப்பிடுவதைப்போல் வராது. அது வேறு விஷயம். இருப்பினும் விருந்து என்று வந்து விட்டால் எல்லாவகை உணவுகளையும் ருசி பார்த்து உண்பதென்பது ஒருவித அனுபவமே.

அங்கே பரிமாறிய உணவுவகைகள் - Lobsters, fish & chip, chicken chop, beef chop, baked patato, corn stick, baked prawn, escargots, butter & bread, coffee, fruits juice  என இப்படிப் பலதரப்பட்ட உணவு வகைகள். உணவுகளின் சிறப்பு என்னவென்றால், எதிலுமே காரமில்லை, புளிப்பு இல்லை, அதிக கரிப்பு இல்லை, அதிகமான இனிப்பும் இல்லை, சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை. (இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழனை சாப்பிட வைப்பதென்றால் சும்மாவா.!) அதனால் இவையெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. விடுங்க.

உணவு ஒரு பக்கமிருந்தாலும், அந்த உணவு விடுதியின் சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பழைய பாணி ரயில் வண்டியின் பெட்டியில் அமர்ந்துக்கொண்டு சாப்பிடுவதைப்போன்ற உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.எங்கு பார்த்தாலும் பழைமை மாறாத தோற்றங்கள்.

1800களில் தொடங்கப்பட்டு இன்னமும் அதே பரபரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகப் பிரசித்திப்பெற்ற லண்டன் விக்டோரிய ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்ப கால நிலையைப் பறைச்சாற்றுகின்ற சூழலாகவே இருந்தது அந்த ரெஸ்டரெண்ட்.

பழைய வானொலிப்பெட்டி, கடிகாரம், நீர் கோதிக்கவைக்கும் கேத்தல், தொலைக்காட்சிப்பெட்டி, திசைகாட்டும் கைவிளக்குகள், புகைவண்டி நிலையத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள் என எல்லாமே பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. சுற்றிலும் உள்ள பொருட்கள் மின்சாரம் இல்லாத பழைய காலத்தை நினைவுக்கூர்ந்தன.

ஆரம்பத்தில் எனக்குப்புரியவே இல்லை. ஏன் இந்த விக்டோரிய ஸ்டேஷன் ரெஸ்டரெண்ட் இப்படி வித்தியாசமாக இருக்கின்றதென்று.! எங்களின் குழுவில் உள்ள சக பணியாளர் ஒருவர், லண்டனுக்குச் சென்றிருக்கையில் இந்த ரயில்வே ஸ்டேஷனை நேரில் கண்டுள்ளதால், அங்கே உள்ள சூழல் பற்றி எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். கூடுதல் தகவல் பெற, விக்கிபிடியாவில் காணலாம்.

# பி.கு : உணவுகளின் விலையும் அதிகம் இங்கே - ஃபைவ் ஸ்டார் ரேஞ்சில்#


நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு மேஜையில் அமர்ந்துக்கொண்டோம்.. சாப்பிட்டுக் கிளம்பும்போது எடுத்த புகைப்படம் இது.

பழைய பாணி ரயில் பெட்டியின் அருகில் நானும் என் சக பணியாளரும்.


நாங்கள் சாப்பிட்ட உணவுகளின் வகைகள். முதல் முதலில் இருப்பது ஒருவகை நத்தை. 


அந்த ரெஸ்டரெண்டின் உள்ளே உள்ள சில காட்சிகள். 

ஒரு கதை ஒரு விளக்கம்

அற்புதமான சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ளேன், நம் நாட்டிலும் பின்நவீனத்துவம் வளர்ந்துள்ளது என்பதனைப் பறைச்சாற்றும் ஓர் கதை இது, வாசித்துப்பாருங்கள், உங்களின் கருத்து எனக்குத்தேவை. என, எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவரும் இலக்கியத்துறையில் உள்ளவர்தான். அந்த சிறுகதையும் என் கைவசம் உள்ளது. இருப்பினும் அது வேண்டாம். தனி நபர் தாக்குதல் போலாகிவிடும்.

படித்துப்பார்த்தேன், என்னைக்கவரவேயில்லை அச்சிறுகதை. அழகான நடை, அற்புதமான தமிழ்.. அறவே ஆங்கிலக்கலப்படமில்லாத ஒரு கதைதான். இருப்பினும் அதில் ஒன்றுமேயில்லை.

முன்று பகுதிகளாகப்பிரித்து, அங்கேயும் இங்கேயும் தாவி, வாசகர்களை குழப்பி, முடிவு தெளிவில்லாமலும், கதையை எந்த கோணத்தில் வாசித்தாலும் கருவே தென்படாமலும் முடித்திருக்கின்றார் எழுத்தாளர். குழப்புவதுதான் பின்நவீனத்துவமா?, என்கிற என் கருத்தை, வழக்கம்போல் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நம்மவர்களுக்குத்தான் வெளிப்படை என்றால் பாகற்காய் போல் கசக்குமே.! முகஸ்துதியைத்தானே பெரும்பாலும் பால்பாயசம்போல் விரும்புவார்கள்.

`நான் நிறைய வாசிக்கின்றேன், என்னையே அவமதிப்பதைப்போல் உள்ளதே உன் கருத்து. அப்போ நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா(ளா)? இவ்வளவு காலம் எழுதுகிறேன் வாசிக்கின்றேன், எனக்குத் தெரியாதா, எது நல்ல கதை என்று..! ’ அப்படி மனதில் நினைத்திருக்ககூடும். ஆனாலும் சொல்லவில்லை. இருப்பினும், என்னிடம் மிக நாகரீகமாக ஒரு கோரிக்கையை வைத்தார்.

நீங்கள் எப்போது பார்த்தாலும் எல்லா சிறுகதைகளையும் நன்றாக இல்லை, அப்படி.. இப்படி என ஏதாவது குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்களே, உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த, ஒரு சிறுகதையைச் சொல்லமுடியுமா? காட்டமுடியுமா? அது எப்படி இருக்கு என்றும், என்னைக் கவர்கிறதா என்றும் பார்க்கப்போகிறேன், என்றார்.

நமக்குத்தான் அழியாச்சுடர்கள் கைவசமிருக்கே.. அங்கே நிறைய அற்புதமான சிறுகதைகளை அவ்வப்போது வாசித்துவருகிறேன். பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அற்புதமானவை. எதாவதொரு வகையில் நமக்குப் பாடம் புகட்டிக்கொண்டிருக்கும்.

அங்கே சென்றேன், சாரு எழுதிய முள் என்கிற சிறுகதையை எடுத்தேன், அந்த நபருக்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, லிங்க் அனுப்பினேன். இதைப் படித்து விட்டு கருத்து பகிருங்கள் என்று. ஒரு நாள் முழுக்க மூச்சு பேச்சே இல்லை.

மறுநாள், மெயில் வந்தது.. அந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே.! மீன்பிடித்தொழிலைப் பற்றி சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர், அதோடு அற்புதமான காதலையும் அங்கே இழையோடவிட்டிருக்கின்றார் அவ்வளவுதான், மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லையே, என்றார் பாருங்களேன், எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. என் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது.

எது காதல் என்பது கூட சரியாகத் தெரியாதவர்களுக்கு, அந்த சிறுகதையைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதினாலும், விளங்கிடும் பாருங்க...!

சரி, அது அவரின் புரிதல். அதை அப்படியே விட்டிடவேண்டியதுதான். நமக்கென்ன வந்தது.



  

வியாழன், செப்டம்பர் 13, 2012

நீண்ட கூந்தல் அவசியமா?

திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்திருக்க  மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும்.  கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான முறையில் கூந்தலைப் பாதுகாக்காவிடில் பேன் பொடுகு பிடித்துவிடும். முடி உதிரும். தலையில் புண்கள் வரும்.


முன்பெல்லாம் நான் மிகவும் மெலிந்து காணப்படுவேன். ஆனால் தலையில் பேன் மட்டும் அதிகமாக மொய்க்கும். இரட்டை இரட்டையாக மொய்க்கும். எப்போது பார்த்தாலும் கைகள் தலையையே பிராண்டிக்கொண்டிருக்கும். சாப்பிடுகிற சாப்பாட்டையெல்லாம் பேனுக்குக்கொடுக்கின்றீர்களா ? என்று கூட சிலர் கிண்டலாகக் கேட்பார்கள்.

நீண்ட கூந்தல் வைத்திருக்கின்ற காலகடத்தில், பள்ளிக்குச் செல்லுகையில், தலைவாரி சடை பின்னி பள்ளிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சரியாக வாரிக்கொள்ளாமல் சும்மானாலும் சுருட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றால், பொது மேடையில் பல மாணவர்களின் முன்னிலையில், இது சரியில்லாத தலைவாரல்; என்று உதாரணம் காட்டி அவமதிப்பார்கள். அதற்காகவே எண்ணெய் வைத்து, இழுத்து வாரி, இறுக்கமாக இரண்டு சடைகள் நுனிவரை பின்னி, அதை ரிப்பன்னால் தொடர்ந்துப் பின்னி, மடித்துக்கட்டிக் கொள்வோம். (மூணு படத்தில் பள்ளிக்குச்செல்லும் நடிகை ஸ்ருதி போல்.)


இந்த இரட்டைச் சடை பின்னல் பார்ப்பதற்கு சுலபம் போல்தான் இருக்கும், ஆனால் அதைப் பின்னுவதற்கு மிகவும் கடினம். முதலில் நேர்கோடு, அதன் பிறகு பின்பக்கம் நேர்கோடு எடுத்து முடியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். வலதுபக்கம் வாரி சடை பின்னி, ரிப்பன் கொண்டு கட்டியபிறகு, இடதுபக்கம் வார வேண்டும். எல்லாம் சரியாக செய்துமுடித்து கண்ணாடியைப்பார்த்தால் ஒன்று மேலேயும் மற்றொன்று கொஞ்சம் இறங்கி கீழேயும் இருக்கும். ஒன்றை அவிழ்த்து சரி செய்து பின்னியபின் மற்றொன்று கோளாறாக இருப்பதைப்போல் இருக்கும். எல்லாம் சரியாக வந்ததுபோல் இருந்தால் ஒரு பக்கம் சடை மொத்தமாகவும் இன்னொரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். அப்படி இப்படி என பின்னிக் கொண்டு பள்ளிக்குச்சென்றால், தோழிகள் கிண்டல் செய்வார்கள், `உன் பின் பக்கம்  இருக்கின்ற பின்னல் வகிடு, கிள்ளான் ஆறு மாதிரி கோணல் மாணலாக செல்கிறதே.!’ என்று.

ஆக, யாருமே இல்லாமல் தனியாளாக நமது நீண்ட கூந்தலை நாமே பின்னி முடிப்பதென்பது கஷடமான காரியமே..

வாரத்திற்கு இரு முறை தலை குளிக்கவேண்டும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில்தான் தலை குளியல். மற்ற நாட்களில் மழையில் நனைந்தால் கூட, தலையைத் துண்டால் துடைத்துக்கொண்டு உடம்போடுதான் குளித்துவிட்டு வருவோம்.

நாங்கள் கூட்டுக்குடும்பம். ஆக, நிறைய பெண்கள் இருப்போம். வீட்டில் ஷம்பூ எல்லாம் வாங்க மாட்டார்கள். கட்டுப்படியாகாது என்பதால். கிலோ கணக்கில் சியக்காய்களை வாங்கிவைத்துக்கொண்டு, அதை ஒரு அண்டாவில் ஊறவைத்து, அம்மியில் நன்கு அரைத்துத்  தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் நுரையே ஷம்பூ போல் தான் இருக்கும்.

நாங்களே குளித்தால், மிக ஜாலியாக குளித்துவிட்டு வருவோம், சில வேளைகளில் அம்மா, தலை குளிக்கும்போது, குளியலறைக்குள் நுழைவார், திக்கென்றிருக்கும். அதாவது, தலை கசக்கி விடுகிறேன் என்று சொல்லி, தலை முடியை பிடித்து பிய்த்து இழுத்து, பலம் கொண்டு தேய்த்து கசக்கிக்குளிப்பாட்டி ஒரு வழி பண்ணிவிடுவார்.

அவர் தலை தேய்த்துக்குளிப்பாட்டி விட்டால், முடியில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவே இரண்டு நாள்கள் ஆகும். சடைமுனி மாதிரி முடி அப்படியே திரித்துக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்கும். எண்ணெய்யை விட்டு வழித்து வழித்து சீவுகிற போதுதான் பழைய நிலைக்கே வரும். கொடுமையாக இருக்கும் நிலைமை..

முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துகொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங் கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.

பேன் விடுகதைகளும் அப்போது மிகப்பிரபலம். கிளை இல்லாத மரங்களில் ஏறுவான், மரத்திற்கு மரம் தாவுவான், குரங்கு அல்ல, அவன் யார்? எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார்? என இப்படி....

நம் இனப் பெண்பிள்ளைகளின் தலைகளில் பேன் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். காரணம் எல்லோருக்கும் நிச்சயமாக பேன் பிடிக்கும். முன்பு, நான் பள்ளிப்பயிலும் காலகட்டத்தில், அரசாங்க கிளினிக்குகளில் பேன் மருந்து இலவசமாகக் கொடுக்கப்பட்டது. பேன்களை ஒழிப்போம் என்கிற பிரச்சாரப் பலகைகள் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் காணலாம். பேன்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை நன்னெறி பாட நூலிலும் சேர்த்திருப்பார்கள்.

நீண்ட கூந்தலைச் சரியாகப் பராமரிக்கதெரியாமல் இருப்பவர்களுக்கு சடைமுனி மாதிரி திரிந்த கூந்தல் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் விட்டு சரியாக வாரிவந்தால் இப்பிரச்சனைக்கு ஒரு விடிவு ஏற்படும்.

இப்படி எண்ணெயினை அதிகம் விட்டு வாரிவருவதால், நேரம் செல்லச்செல்ல அந்த எண்ணெய்யானது நெற்றியின் வழி முகமெல்லாம் வடியத்துவங்கிவிடும். எண்ணெய் வடிகிற முகத்தில் பளீரென்று படுகிற சூரியன் விட்டுச்செல்கிற கோலமானது, இன்னும் கொடுமை. முகத்திற்கு கருமையைக் கூட்டிவிட்டுச்செல்லும். பல இனங்கள் பயிலும் பள்ளிகளில், நம்மவர்களைக் கண்டாலே, ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். நமது எண்ணெய் வழிகிற முகம் கவரும்படியே இருக்காது. பழைய எண்ணெய்யின் நாற்றம் வேறு தூக்கலாக இருக்கும். அதுவும் ஒரு காரணம்.



இவ்வளவு அவஸ்தைகளிலும், நீளமான கூந்தலுக்குத்தான் காவியம் என்று கவிஞர் சொல்லிச்சென்றுள்ளார் என்பதால், நீண்ட கூந்தல் பிடிக்கவில்லை, முடி வெட்டிக்கொள்ளப் போகிறோமென்று சொன்னால், அப்பாவிற்கு அவ்வளவு கோபம் வரும். நீண்ட கூந்தல்தான் அழகு. முடி வெட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டாம் அப்படியே எங்கேயாவது குளம் குட்டையில் விழுந்து சாவுங்கள், என்று சொல்லி மிரட்டுவார்கள். சாபமிடுவார்கள். அவ்வளவு ஸ்டிரிக். கூந்தல் விஷயத்தில்.

சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா எல்லாம் விக் வைத்துக்கொண்டு குடும்ப பாங்கான படங்களின் நீண்ட கூந்தலைக் காட்டி  நடிக்கின்றார்கள். அவர்கள் மாதிரி நாங்களும் இருக்கவேண்டுமென்றால் எப்படி முடியும்? முடி வெட்டினால் காலை வெட்டுவேன், என்று கூட மிரட்டியிருக்கின்றார் அப்பா.

சில வேளைகளில், ஆரோக்கியமில்லாத நீண்ட கூந்தலின் நுனியில், கூந்தல் வெடிப்பு இருக்கும். அதாவது ஒரே முடிதான் ஆனால் அதன் நுனியில் மட்டும் வெடித்து இரண்டாகத்தெரியும். இப்படி இருந்தால் கூந்தல் வளராது என்று சொல்லி, பலவிதமான எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்திய அனுபவமும் உண்டு.

பாம்பு எண்ணெய் - எப்படித்தான் செய்வார்களோ தெரியாது, ஆனால் அதன் பெயர், பாம்பு எண்ணெய். பாம்பின் கொழுப்பில் செய்வார்கள் போலிருக்கு. கூந்தலின் நுனியில் அழுத்தித்தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும் என்பார்கள். (அட முருகா, கூந்தலின் நுனிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கா என்ன.!) செம நாற்றம் தெரியுங்களா இந்த எண்ணெய். எங்க சின்னம்மா அடிக்கடி இதைப் பயன்படுத்துவார். வாடை, அவரின் பக்கமே செல்ல முடியாமல் செய்துவிடும்.

உடும்பு எண்ணெய் - கடவுளே இதுவும் பயங்கரமாக நாற்றமடிக்கும். கூந்தல் வளர்ச்சியில் நம்மவர்களுக்குத்தான் எவ்வளவு பேராசை பாருங்களேன்.

சொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை நன்கு காய்ச்சி எண்ணெய்யாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணங்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கும் எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.

கடையில் விற்கிற பொண்ணாங்கன்னித்தையலம் - முன்பு இவ்வெண்ணெய் இங்கே மிகப்பிரபலம். ஒரு பெண் நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டபடி போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார். கரும் பச்சை வர்ணத்தில் இருக்க்கும் இந்த எண்ணெய். இதைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பேன் புளுத்துக்கிடக்கும். காரணம் அதன் மணம் பேனுக்கு விருப்பமாம்.

இவற்றையெல்லாம் மாறி மாறி தேய்த்துக்கொண்டிருந்தாலும் கூந்தல் எலி வால் மாதிரி மெலிந்துதான் இருக்கும் சிலருக்கு. கூந்தல் வளர்ச்சியில் எண்ணெய்களின் பங்கு, சிக்கல் இல்லாமல் வாரிக்கொள்வதற்குத்தான், மற்றபடி உணவுப்பழக்கம், தூய்மை, நல்ல காற்று, நீர், வயது, சுற்றுச்சூழல், கவலையில்லா நிலை, வாழ்க்கை முறை, பரம்பரை போன்றவைகள்தான் கூந்தல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றதென்று இன்னுமும் நம்ப மறுப்பவர்களை மாற்றுவது கஷ்டமே.

அண்மையில், என் பள்ளித்தோழி ஒருவளை ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தேன். பள்ளியில் பயில்கிற போது, நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ட கூந்தல் வைத்திருப்போம் இருவரும். இப்போது என் கூந்தல் எனக்கு தோள்வரைதான் இருக்கிறது, ஆனால் அவள் இன்னமும் அதே நீண்ட கூந்தல் வைத்திருக்கின்றாள். ஒற்றைச்சடை பின்னல் இட்டு பிட்டம்வரை ஆடிக்கொண்டிருந்தது அவளின் கூந்தல்.  அடிக்கிற காற்றில் உடைகள் கூட அசையவில்லை, ஆனால் அவளின் சடை அசைந்து கொண்டே இருந்தது. அவ்வளவு மெல்லிய சடை.

எதுக்கு இன்னமும் இந்த வால் போன்ற கூந்தலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய! என்கிறாள்.  அடப்பாவமே இன்னமுமா? நீண்ட கூந்தலால் என்ன வந்து விடப்போகிறதோ தெரியவில்லை.!

என்ன செண்டிமெண்டலா இருக்கும்..!!?  இப்படி எலி வால் போல் இருக்கும் கூந்தலை விட மொட்டைத்தலையே மேல்.

நீண்ட அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் போது, விதவிதமாக தலைவாரிக்கொள்வோம். ஒரு அனுபவம் பின்நோக்கி.....



இரட்டைப்பின்னல்

பூராண் சடை - இதை நாமே பின்ன முடியாது. யாராவது பின்னி விட்டால்தான் உண்டு.

சடையை ரிப்பன் கொண்டு மடித்துக்கட்டுவது

நன்றாக இழுத்து, பின்னே ஒரு ஒற்றைக்கொம்பு கட்டி, அதை சடையாக்கிக்கொண்டு பின்னி ரிப்பன் கட்டுவது.

நீண்ட சடை பின்னிய பிறகு அதை கொண்டையாகக் கட்டிக்கொள்வது

இரண்டு சடை பின்னி, வலதுபுற சடையை இடதுபுற சடையில் ரிப்பன் கொண்டு கட்டுவது. இடதுபுற சடையை வலது புற சடையில் கட்டுவது.

இரண்டு சடை பின்னி இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக்கட்டிக்கொள்வது.

முடியை லூஸ் செய்து, பாதியிலிருந்து சடை பின்னிக்கொள்வது. (80’ஸ் நடிகைகள் போல்..)

கோணல் சடை - முடியைச்சீவி ஒரு பக்கமாக வைத்து சடை பின்னிக்கொள்வது.

ரெண்டு கொம்பு - அதில் சடை.

தலையிலேயே வலதுபுறமாகப்பின்னிக்கொண்டு பிறகு இடதுபுறமாகக் கொண்டு வருவது.

நீண்ட சடை பின்னி, ரப்பர், ரிப்பன் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்வது.

எல்லாவற்றிலும் சடை இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக நடந்தால், கிழவி வெற்றிலை உரலை நம்மீது வீசும். (முன்பு நாங்கள் கூட்டுக்குடும்ப வாசிகள்)











  

Enlargement procedure - News View

New Jersey
A man who is only 22year old, seeking for penile enlargement procedure, treatment went wrong and causes him death the next day.

The lady who has  no midecal licence or training, administered a silicone shot to the man's penis end up tragedy.

His death was ruled as homicide after an investigation and a medical examiner's determination that he died of a silicone embolism.

Thank you THE STAR news paper.