வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேட்டரி வீக்

மதிய உணவு நேரம். உணவு வாங்கச்சென்றேன். நான் மட்டும் தனியே..

வழக்கம்போல், உணவு வாங்குமிடத்தில் காரை நிறுத்தியபோது, என் காரின் முன்னே இரண்டு மலாய்க்காரர்கள், கைகளைப் பிசைந்து கொண்டு என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்தவண்ணம் இருந்தார்கள்..

நான் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், கடைக்குள் நுழைந்து, அறுசுவை உணவை ஒரு பிடிபிடித்து விட்டுத் திரும்பினேன். திடீரென்று பயங்கர மழை. என் காருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், குடை பிடித்தே ஆகவேண்டும். அவ்வளவு கடுமையான மழை.

கடைவரிசையிலேயே நடந்த பிறகு, நான்கு ஐந்து அடிகள் வைத்தால் காருக்குள் சென்று விடலாம்.. இருப்பினும் கடுமையான மழையில் நிச்சயமாக உடைகள் (யூனிபர்ம்) நனையும். ஓரமாக நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்..

முதலில் பார்த்தேனே அதே மலாய்க்காரர்கள் அங்கே குடையோடு நின்றுகொண்டிருந்தார்கள்...

“காருக்குச் செல்ல வேண்டுமா? குடை வேண்டுமா?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே என்னருகில் வந்தார்கள். எனக்கு பயம் தான், காரணம் இங்கே நிறைய ஜேப்படி,வழிப்பறி கொள்ளைகள் மலிந்துகிடக்கிறது. எங்குபார்த்தாலும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகை வானொலி தொலைக்காட்சிகளின் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை காரணம், உணவிற்குத்தேவையான பணத்தை மட்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மற்றதையெல்லாம் பர்சிலே, ஆபிஸில் பத்திரமாக வைத்துவிட்டுத்தான் வெளியே செல்வது என் வழக்கம். நகைகளைப்பிடுங்கப் போகிறார்கள் என்றால், எனக்குத் தங்கமணிவது பழக்கமில்லை..மஞ்சள் கயிறு, அதில் ஒரு சின்ன குண்டுமணி, அவ்வளவே.!

இருப்பினும் நானே ஒரு தங்கம், என்னை எதாவது செய்துவிட்டால்.. (ஏற்கனவே நான் சொன்ன ஒரு சிறிய தகவலால், பெண்களெல்லாம் ஒன்று திரண்டு, என்னை வாசகவட்டத்திலிருந்து விரட்ட பலவாறான எஸ்.எம்.ஸு களை நாடுதழுவிய நிலையில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற குறுந்தகவல் என்க்கும் சிலாப்பா (தவறுதலாக) வந்திருந்தது.) அதுவேறு எனக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒன்னும் பெரிதாகச் சொல்லிவிடவில்லை. ‘ உங்கள் எல்லோருக்கும் வாசிப்புப் பழக்கமில்லை, வாசகர் என்கிற பெயரில் பேனா பிடித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? இலக்கிய உலகம் பாழாய்ப் போக!’ இதுதான் நான் எழுதியது. கோபித்துக் கொண்டார்கள். உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. நீ என்ன பெரிய மேதையான்னு சண்டைக்கு வருகிறார்கள்.!! !@#$%^&* என்னத்தச் சொல்ல.!!?

சரி அது கிடக்கட்டும், கதைக்கு வருவோம்.. அப்போது அவர்கள் என் அருகில் வந்தவுடன், நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு..

“பரவாயில்லை, காரி பக்கத்தில்தானே இருக்கின்றது ஓடிவிடலாம், குடை வேண்டாம்!” என்றேன்.

அதில் ஒருவன் தயங்கித்தயங்கி,  “இல்ல அக்கா (மலாய்க் காரர்கள் பண்புள்ளவர்கள், வயதில் மூத்தவர்களை அக்கா என்றும், சிறியவர்களை தங்கையென்றும் அழைப்பார்கள்) குடைக்குள் வாருங்கள், நான் கார்வரை கொண்டுவிடுகிறேன்..” என்று சொல்லி, குடையை விரித்தார். எனக்கு தர்மசங்கடமாக இருப்பினும், பயங்கர மழையாதலால், சரியென உதவியைப்பெற்றுக் கொண்டு, அவர்களின் துணையோடு கார் வரை சென்றேன்.., அப்போது அவனின் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளியே வந்தன.

“அக்கா, என்னுடைய காரை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை, உன்னுடைய எஞ்ஜின் பக்கம் கொஞசம் திறந்துக் கொடுத்தால், நான் என்னுடைய கொனெக்டரைக் கொண்டு உனது பேட்டரியில் பொருத்தி, எனது காரை ஸ்டார்ட் செய்துக்கொள்வேன், எனது நண்பனை அழைத்தேன், கடுமையான மழை என்பதால் வரவில்லை.. தொலொங் லா (உதவுங்கள்)” என்றான்.

அடப்பாவமே, இதுதான் பிரச்சனையா? இதில் எனக்கு எந்த குறைவும் வந்து விடாதே.. ஏற்கனவே இதே போல் ஒரு பிரச்சனையில் நான் மாட்டிக்கொண்டபோது, ஒரு மலாய் அன்பர்தான் எனக்கு உதவினார். அதுவும் அதே உணவு வேளையின் போதுதான், ஆனால் அன்று மழையில்லை.

’நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.’

(என்ற அவ்வையின் செய்யுள்தான் உடனே நினைவுக்கு வந்தது.)

“சரி அஃடிக் (தம்பி) பிரச்சனை இல்லை,தாரளமாக எடுத்துக்கொள்!” என்றேன்.

அவனும் எனது காரின் எஞ்ஜின் பகுதியைத்திறக்கச் சொன்னான். நான் அப்படியே செய்தேன். வயரின் நீளம் போதவில்லை. உடனே நான் அவனிடம் “காரைக் கொஞ்சம் பின்னாடி கொண்டு வா! “ என்றேன்.

இருவரும் சிரித்தார்கள். நான் மட்டும் தாமதமாகச் சிரித்தேன்.

மின்குழல்தான்


நம்பிக்கையின்மையால்

முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களின் நேர காலமில்லாமல் கொட்டமடித்து விட்டு, 24மணி நேரமும் ஸ்டேடஸ், கமெண்ட்ஸ், லைக்ஸ் என ஜாலம் காட்டிவிட்டு, ஊர்கதை பேசிவிட்டு, மணிக்கணக்காக வெட்டியா பொழுதைக் கழித்து விட்டு, ஜொள்ளு விட்டு, மயங்கி மொக்கையாக மாறி, போடுவதற்கு ஒன்றுமேயில்லாமல், யாராலோ முகத்திரை கிழிக்கப்பட்டு, தாம் நினைத்தபடி எதுவும் நடவாத போது, ஒரு வித விரக்தியின் விளிம்பிலும், வெறுப்பின் உச்சத்திலும் இருந்துகொண்டு விலகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனநோயாளிகள்...,

அங்கே நெட், வலைத்தளங்கள், பேஸ் புக், இணைய இதழ், குகூள் என, எதோ ஒரு உன்னதத் தேடலில் இருக்கும் நம்மைப் பார்த்து, அறிவுரை மழை பொழிதால், அரை விடனும் போல் இருக்குமா இல்லையா?

அறிவுரையோடு இருந்தாலும் பரவாயில்லை, என் கணவருக்குப் பிடிக்கவில்லை! மாமியாரைக் கவனிக்கனும்! பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம்! வீட்டு வேலைகள் செய்யாமல் பொம்பளைங்க இங்கேயே குடியாய் இருப்பதை நினைக்கும் போது அருவருப்புதான்! நான் உருப்படியான வருமானம் வரும் தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன்! பின்னல் தையல் என என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்! எதாவது தன்முனைப்புப் பயிற்சியில் என்னை நிரப்பிக்கொள்ளப்போகிறேன்..! மனிதனாகப் பிறந்தவர்கள் பயன் உள்ளவர்களாக வாழ்ந்துச் சாகவேண்டும்! வெற்றியைதேட வேண்டாம், அது உன் காலடியில் கிடக்கிறது!!!! (ஷப்ப்ப்பா) என் தத்துவமெல்லாம் சொன்னால் சும்மா விடலாமா?

எதோ ஒரு தன்முனைப்பு சொற்பொழிவில் கலந்துகொண்டு, மறுநாள் திடுத்திப்பென..  மந்திரிச்சு விட்ட மங்கம்மாக்களாய், புனித ஆத்மாக்களாய் மாறி, காலகாலமாக தன்னம்பிக்கையோடு  இருப்பவர்களிடம்,  இதுபோன்ற அறிவுரைகளை வாரி வழங்க நினைத்தால், பாச்சா பலிக்குமா என்ன.!? பாவம், இல்லை..இல்லை  பரிதாபப் பிறவிகள்.

சரி, பிடிக்கவில்லை, மனநெருடலைத்தருகிறது, போதும் பட்டதெல்லாம் இனி இது வேண்டாம், எல்லாம் நல்ல அனுபவம், இதுவும் வேணும் இன்னமும் வேணும், சருக்கல் எல்லாம் பாடமாக, வருங்காலத்தில் இந்தப் பாடம் நல்ல வழிகாட்டி, இருந்த வரை கொட்டம் கும்மி கொண்டாடம் என வெளிப்படையாகக் கூறி, ஏற்றுக்கொள்கிற பக்குவம் என்றுதான் வருமோ நம்ம பெண்களுக்கு?

இப்படிச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆரம்பத்தில் சுத்தமாக மறந்து விட்ட மாமி, கணவன், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள், ஆன்மிக வாழ்வு.. (எனக்கு இப்போதெல்லாம் கடுங்கோபத்தைத் தருவது, இந்த, நான் ஒரு ஆன்மிகவாதி, என்கிற வார்த்தையே, எனோ தெரியவில்லை) என எப்படி இப்படித்திடீரென பொங்கியவண்ணம்.. (டவுட்டு) . எல்லாம் ஒரு பாதுகாப்பிற்க்காகத்தான் எனபதுதான் நன்றாகத் தெரிகிறதே!. உணர்வுகளை அழகாக மறைத்துவிட்டோமென்று மகிழவேண்டாமே.. புரியும் ஒரு சிலருக்கு, நமது அறியாமை.

சிலர், சில பல வேளைகளில் விரக்தியின் விளிம்பில் இருப்பதற்கு இந்த அறியாமையே மூலக்காரணம். யார்தான் தவறு செய்யவில்லை? யார் தான் உத்தமர்கள்? யார் தான் திருட்டுத்தனம் செய்யவில்லை? யாரிடம்தான் கள்ளத்தனமில்லை? யார்தான் அவமானப்படவில்லை? யார் தான் ஹெங்கி பங்கி வேலைகளுக்கெல்லாம் ஆசைப் படவில்லை? யாருக்குத்தான் காதலில்லை? யாருக்குத்தான் காமமில்லை??  இப்படி இன்னும் பல யாருக்குத்தான்.. என, அடுக்கிக்கொண்டே போகலாம்...

உலகின் நிலை இப்படியாக இருக்கும் பட்சத்தில், ஏன் நாம் நமது உணர்வுகளுக்கு மட்டும்  வர்ணம்பூசி, பூதக்கண்ணாடிக்கொண்டு பார்த்து, மனம் வெதும்பி புத்தராக மாற நினைத்து, போதனையில் பல்டி அடிக்கவேண்டும்?! அசிங்கமாக இல்லையா!? வெளியே வாங்கப்ப்பா செல்லங்களா.!

சொல் புத்தியும் இல்லாமல், சொந்த புத்தியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இருந்தால், யார் காப்பாற்றுவது.!?  எவ்வள்வு பெரிய குருவிடம் பயிற்சிப் பெற்றாலும், மாற முடியுமென்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி?.

வியாழன், டிசம்பர் 22, 2011

ஆண் பார்வை

முன்னே நடக்கும் போது
பின்னே ஒரு உருத்தல்

கீழே குனியும் போது
மேலே ஒரு நெருடல்

நேர் பார்வையிலும்
நேர்மையில்லாமல்..

பேச்சின் போது
அகலமாய் விரியும் கண்கள்

எதாவது தென்படாதா!?
என அங்கும் இங்கும்
ஏக்கத்துடன்..

எதோ ஒரு ஆவலில்
அலைபாயும் சுமையுடன்

“ நீங்களெல்லாம் அக்கா தங்கைகளோடு பிறக்கவில்லையா?”
என்கிற வசனம் எங்களுக்கே புளித்துத் தான் போனது.



புதன், டிசம்பர் 21, 2011

இவன் யார் ?

பொழுது 
நல்ல பொழுதாகட்டும்! 
என்கிற வாழ்த்தினை
சொல்லியே 
பொழுதை 
பொலிவிழக்கச்செய்தவன்...... 

சாப்பிட்டாயா? 
என்கிற ஒரே கேள்வியை 
அடிக்கடி கேட்டு 
என பசியை 
பிடுங்கிச்சென்றவன்....... 

நலம் பேண்! 
என்கிற சுக 
எச்சரிக்கையால் 
நித்தமும் 
என்னை நோயாளியாக 
மாற்றிக்கொண்டிருப்பவன்........ 

இறைவன் 
என்றும் துணையிருப்பான்! 
என்கிற ஆறுதல் 
வார்த்தையால்.... 
இறைவனையே 
மறக்கச்செய்து 
சதா 
இவன் 
நினைவிலேயே 
மூழ்க வைத்த...ஒரு 
'______________' fill in the blank

காதல் ஆராய்ச்சி


ஓயாத அழைப்பு
தீராத பேச்சு
மணிக்கணக்கில் மூழ்கி
எதேதோ உளறல்
காதலாம் …..!

நித்தம் சிணுங்கும்
சத்தமில்லாத கைப்பேசி..
எழுத்துகள் கூட
அழிந்து போயின
குவியும் குறுந்தகவல்கள்
காதலாம்....!

கரம் பிடித்து
கைகோர்த்து
கண் நோக்கி
‘அப்பா அம்மா’ விளையாட்டிற்கு
மௌன அழைப்பு
காதலாம்….!

காணும்போதெல்லாம்
கட்டித்தழுவி
இதழோடு இதழ்
பதித்த முத்தம்
காதலாம்….!

கனவில் கூட
பிரிவு கூடாதாம்….
கண்ணீரோடு விடிந்து
காலைப்பொழுது
காதலாம்….!

இதில் எதுவுமே
நமக்குள் நடக்கவில்லை
உன் முகம் பார்த்து
பேசியதில்லை
உன் விரல் கூட என்மீது
பட்டதில்லை…..

எப்படி நீ
எனக்குள் இவ்வளவு ஆழமாய்
நுழைந்து அரியணையிட்டாய் ?
இதற்குப்பெயர் என்ன ??
ஆராய்கிறேன் …
ஆனாலும் இது எனக்கு
பிடித்திருக்கு.!!
 

காமம்

என் தனிமைக்குள்
என்னையறியாமலேயே
நுழைந்துகொள்கிறான்.

எனது தனிமையில்
நான் நிரப்பிக்கொண்டிருப்பது
உன்னைப்பற்றிய சிந்தனையே

இன்று மனதில் ஏதோ ஒரு பயம்

தினமும் வேலைக்குச்செல்லுகையில், குறுக்குப்பாதையைப் பயன் படுத்தி விரைவாக பிரதான சாலைக்குச் செல்வது  என் வழக்கம்.

நேர்சாலை என்பது நிறைய கார்கள் பயணிக்கு. கொஞ்சம் நெரிசலாக இருக்கும், போகும் வழியில் நாசிக் லெமக் விற்பனை, பத்திரிக்கை விற்பனை, ஒரு பெரிய ஆட்டுக்கொட்டகை, கடைத்தெரு, பஸ் ஸ்டாப் என ஆட்களின் நடமாட்டம் என இருந்த வண்ணமாகவே இருக்கும்.  வாகனத்தை மெதுவாக நகர்த்தவேண்டிய நிலை வரும்.

நாமோ எல்லா நாட்களிலும் சுடுநீரைக் காலில்  ஊற்றிக்கொண்டு அரக்கபரக்க  ஓடுபவர்கள்.  இதில் சென்று மாட்டிக்கொண்டால், கொஞ்சம் தாமதமாகும். ஆக இந்தக் காட்டுக்குறுக்கு வழி எனக்குச் சுலபம்.

அந்தக் குறுக்குப்பாதையில் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. வழிநெடுக மலேசிய பூர்வீக குடிகளின் (orang asli) வீடுகள், வளர்ச்சியடையாத பழய மலேசியக் குடியிருப்புகளை ஞாபகப்படுத்தியபடி இருக்கும். எண்பதுகளின் இறுதிவரை மலேசியா இந்த மாதிரியான குடியிருப்பைக் கொண்டதாகவே இருந்தது.

பெரும்பாலும் புறம்போக்கு நிலத்தில், இஷடம்போல் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு, சுற்று வட்டார நிலப்பரப்பையெல்லாம்  தமதாக்கிக் கொள்கிற ஜமிந்தார் வாழ்க்கைத்தான் முன்பெல்லாம்..!

எங்களின் வீடும் பெரிய வீடுதான். நான்கு பெரிய பெரிய அறைகள் கொண்ட விஸ்தாரமான வீடு. கோழிப்பண்ணை, ஆடு வளர்ப்பு, காய்க்கறித் தோட்டம், குழந்தைகள் விளையாட்டுத்திடல், துணி காயப்போடுகிற நீண்ட கொடிக்கம்புகள், விறகு அடுக்கும் கொட்டகைகள், காட்டு வேலைக்குப் பயன்படுத்தும் துணிமணிகள், வாளி, காண்டா, உளி, பால் தூக்கும் தோம்பு, அரிவாள், தேங்காய் அறுக்கும் கத்தி, வேலைக்குப்பயன்படுத்தும் சைக்கிள் போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு கொட்டகை. கோழிக்குப் போடும் தீவனம், ஆட்டிற்க்கு புல்கட்டு, சோறு வடிக்கிற நீராகாரம் ( மாடுகளுக்குக் குடிக்க எடுத்துச்செல்வார்கள்)  என சேகரித்து வைக்கின்ற வாளி போன்றவைகள் வைப்பதற்கு ஒரு கூடாரம். நாய் வளர்ப்பிற்கு ஒர் இடம், இரண்டுப்பக்கமும் பெரிய கட்டைகளைக் கொண்டு அடித்து ஒரு நாட்காலி போல் செய்து வைத்த வாங்கு. வீட்டின் பக்கவாட்டில் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, அரைக்கல், அண்டா குண்டா  போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு ஒதுக்குப்புறமென மிக அழகான நந்தவனம் போல் வாழ்ந்து வந்தவர்கள் நாங்கள் இங்கே.

அந்தச் சூழலெல்லாம் காலத்தின் கட்டாயத்தின் பேரில் மாறி பலவருடங்கள் ஆகிவிட்டன. நாட்டின் அதீத வளர்ச்சியின் காரணமாக அவைகள் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் தான் போயிருந்தன.



சரி விஷயத்திற்கு வருவோம், இப்போது இங்கே இந்தக் குறுக்குப்பாதையில் இவைகளைக் காணுகிற போது, மீண்டும் பழைய வாழ்க்கைக்குச் செல்வதைப் போன்ற உணர்வுவரும். ஆகவே அச்சூழலை காலைவேளையில் ரசித்துக்கொண்டே, சுற்றும் முற்றும் நோட்டமிட்டவண்ணமாக என் காரைச் செலுத்துவதில் எனக்கு மகிழச்சி.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் அமைதி மையானமாகவே காட்சியளிக்கும். வீட்டைச்சுற்றி அழகழாகான பூச் செடிகள், பாதையின் இரு புறங்களிலும் அடர்ந்த மரங்கள், தென்னை பலா வாழை மரவள்ளி என தினசரி வாழ்விற்கு உதவும் பயிர்கள்.

தூரத்தில் எங்கோ ஒரு மூளையில் அந்தக்குளிர் காலையில் புகை வெளிப்பட்ட வண்ணமாக  இருக்கும்.
ஒரு இதமான சூழலைக் கொடுக்கும் அற்புதக் காட்சிகள் இவை. எவ்வளவு தாமதமானாலும், நமது படபடப்பை ஒரே நொடியில் அகற்றிவிடும் ஆற்றல் இந்தச் சூழலுக்கு உண்டு .

மேலும் சில காரணங்களுக்காகவும் நான் இந்தப் பாதையைப் பயன் படுத்துவது வழக்கம். அதாவது, பழங்களும் காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும்.  காட்டு வாழை, காட்டு டூரியான், மிகச் சுவையான பலா, சிறிய கொய்யா, பப்பாளி, பெரிய பெரிய மரவள்ளிக்கிழங்கு, தளத்தளவென இருக்கும் கீரைவகைகள், நாட்டுக்கோழி அதன் முட்டை, மலைத்தேன் என, எதாவதொரு பொருள் தெரு ஓரமாக விற்பனைக்கு வரும்.. காலை மாலை கணக்கில் இல்லை, பார்த்தவுடன் காரை நிறுத்தி விடுவேன். மலிவாகக் கிடைக்கும் நல்ல பொருட்கள் அவை.


இப்போதான் கதையே ஆரம்பமாகிறது....

இன்று சனிப்பெயர்ச்சி. காலையிலேயே சன் டீ.வி யில் திருநள்ளாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுப வைபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இரவிலிருந்து இங்குதான் உள்ளோம், அற்புதமான பூஜை, தரிசனம், விடிய விடிய தூங்காமல் ... ” என்று மக்கள் ஒரு பக்கம் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்...

பின்புறத்தில் வேலையாக இருந்த என்னை, விரைவாக முன்னுக்கு வரும்படி அழைத்தார் கணவர்.

“டாலிங் ஓடிவா, அற்புதமான நிகழ்ச்சி ஓடுகிறது” என்றார்.

பார்த்தேன், `ம்ம்ம்ம்ம்’ என்கிற ஒர் சிறிய ஒலியை எழுப்பிவிட்டு நான் என் வேலையைத் தொடர்ந்தேன்.

“எல்லாம் அலட்சியம் தான் உனக்கு.படுவாய்!” சாபம் மாதிரி இருந்தது. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

வழக்கமான பணிகளையெல்லாம் முடித்து விட்டு, வேலைக்குக் கிளம்பினேன். வழக்கமாக நுழையும் அதே குறுக்குப் பாதைக்குள் புகுந்தேன். கார் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

மழையில் நனைந்த மரங்கள், மீண்டும் தூரலைச் சிதறியவண்ணமாக இருந்தது. சாலையும் ஈரமாக.

மீண்டும் ஒவ்வொரு காட்சிகளாக, ரசித்தபடி.. இன்று ஏனோ கூடுதல் அழகுடன் இயற்கை.

அப்போது.... ஒரு பெரிய பாம்பு. சாலையை ஒய்யாரமாக கடந்துகொண்டிருந்தது. உடம்பில் ஒரு மினுமினுப்பு, பளபளப்பு..  உருண்டு திரண்டு செல்லும் அதன் அழகை என்னால் ரசிக்க முடியவில்லை.

என் உரோமங்கள் சிலிர்த்தன. கால்கள் கூசின. உடலில் ஒரு நடுக்கம். கார் ஜன்னல் எல்லாம் சரியாக மூடியிருக்கின்றதா என்பதனைச் சரி பார்த்துக்கொண்டேன்.

திடிரென்று எதோ ஒரு எண்ணம் தோன்ற... குரூர குணமுள்ள ஒரு பெண்ணாக மாறி, அதன் மேல் என் காரை ஏற்றினேன்.
ஏற்றிய மறு நொடி, திரும்பிப்பார்த்தேன்..அது அங்கில்லை. எதோ ஒரு குழப்பத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். அப்போதும் கால்களின் ரோமங்கள் சிலிர்த்தவண்ணமாகவே இருந்தன.

காணாமல் போன அந்த விஷப்பாம்பு எங்கு சென்றிருக்கும்? காரை விட்டு இறங்கியவுடன்.. முடிந்தவரை கீழே குனிந்துப்பார்த்தேன். யார் கண்டது, டையர் பகுதியில் பதுங்கியிருந்தால்.!!!

ஒரு குழப்ப நிலையில், மெதுவாக நடந்துவந்தேன். என் சக ஊழியரும் என்னுடன் வர (முஸ்லீம்) இந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். கொஞ்சம் பதற்றத்துடன்.

அவர் என்னை உற்று நோக்கி.. கிண்டல் சிரிப்புடன் “ அடி பட்டவுடன், அது ஓடியிருக்கும், எங்கே வந்து உன் காரில் ஏறப்போகிறது!” என்றார்.

சரி இவனிடம் சொல்லலாமே என ஒரு சீன நண்பரிடம் விசாரித்தேன், அவன், “ ஐயோ, எனக்குக் கிடைத்திருந்தால்.. சூப் செய்து சாப்பிட்டிருப்பேன், காட்டில் உள்ள பாம்புகள் சுவை அதிகம்..” என்றான் கண்களைச் சிமிட்டியபடி. இவன் வேற நிலைமை புரியாமல் என சிணுங்கிக்கொண்டு...
கொஞ்சம் ஆறுதல்தான் இருப்பினும் தமிழர் யாரிடமாவது கேட்டுப்பார்க்கலாமே, என்றெண்ணி காத்திருந்தேன்..வந்தார் நம்ம ஹீரோ. அவரிடமும் பகிர்ந்தேன்

“அய்யோ, அடிப்பட்டப் பாம்பு, சும்மா விடாது. கவனமா இருக்கணும். பழிவாங்கும். இனி அந்தப்பக்கம் போக வேண்டாம்.. இன்றைக்குச் சனிப்பெயர்ச்சி, கோவிலுக்குப் போய் சனி பகவானுக்கு விளக்குப் போடுங்கள்...எல்லாம் சரியாயிடும்..” !!!!