சனி, ஜூலை 21, 2012

இப்போ என்ன?

ஒரு முக்கியமான டாக்குமண்ட் தொலைந்து விட்டது  எங்கள் அலுவலகத்தில். எப்படித் தொலைந்தது எனத் தெரியவில்லை. அது ஒரு ரெஜிஸ்டர்எங்க சி.இ.ஒ செகரட்டரியின் (அவருக்கு நிறைய செகட்டரிகளில் இவளும் ஒருவள்)  கார் ரோட் டஃக்ஸ். ஏற்கனவே, மூன்று நாட்களுக்கு முன்னமே அவள் என்னிடம் சொல்லி வைத்திருந்தாள். 


``ரொம்ப அர்ஜெண்ட், எங்க அப்பா அனுப்பி வைப்பார், பத்திரம் பத்திரம்..’’ என.! 


``சரி, வந்தால் நிச்சயம் எடுத்து வைக்கிறேன்’’ என, நானும் உறுதி வழங்கியிருந்தேன்.


முடிந்த சனிக்கிழமை எங்களுக்கு வேலை. நான் செல்லவில்லை. பொங்கல், வீடு சுத்தம் செய்யனும் என்பதால் லீவு எடுத்துக்கொண்டேன். ஒரு போலிஸ் புகார் செய்வதற்காகவும்,  வெளியே சென்றிருந்தோம். தொலைப்பேசி தொல்லை என்பதால், அதை அடைத்துப்போட்டு விட்டு, எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின், தொலைப்பேசியை ஆன்செய்தேன். என்ன ஆச்சிரியம், 19 மிஸ்டு கால்கள். எல்லாமே அவளுடைய எண்கள். பதறிப்போய், பதில் அழைப்பு விட்டேன்.

ஹாலோ, என்னுடைய அந்த ரெஜிஸ்டர் வந்து மூனு நாளாச்சாம்..

அப்படியா?, என்னிடம் இல்லையே.!

யாரோ..ஷம்சூல் என்பவன் சையின் பண்ணி எடுத்திருக்கான்..

, அவனா? பக்கத்து பில்டிங்கில் ஸ்டோரில் வேலை செய்பவன்.. அவனிடம் போய் கேளு..!

இன்னிக்குச் சனிக்கிழமை, அவர்களுக்கு வேலை இல்லை..

அப்போ இரு, திங்கட்கிழமை கேட்போம்..

நான்..திங்கட்கிழமை வெளியூர் போறேன், அந்த ரோட் டக்ஸ் இல்லாமல் என்னால் நகர முடியாது..” மனதிற்குள் திட்டினேன் அவளை, அதற்கு நான் என்ன பண்ண முடியும். !? சொல்றது விளங்குதா பாரு.. இவளை.... இர் இர் இர் !


ஹாலோ, என்ன பண்ண முடியும்? எப்படிப் பார்த்தாலும், திங்கட்கிழமை வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
மீண்டும் தொடர்கிறாள் .. குருட்டுத்தனமான கேள்விகளோடுஷம்சூலுக்கு போன் போட்டால்?”

ம்ம்..போடு நம்பர் இருந்தால்.. என்னிடம் அவன் நம்பர் இல்லை.!’’

நீ, இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது விஜி..


எனக்குக் கோபம் வந்துவிட்டது.. இப்போ நம்மால் எதுவும் பண்ண முடியாது, காத்திரு திங்கட்கிழமைவரை.. பிறகு பார்க்கலாம்.. என் போனில் கிரெடிட் வேறு ரொம்ப குறைவா இருக்கு..போனை வை.என துண்டித்து விட்டு வேலைகளைக் கவனித்தேன். இருப்பினும் என் மனம் அவளைச் சுற்றியே.. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இங்கிதமென்பது ரொம்ப குறைவாகவே தான் இருக்கு, ஒரு சின்ன விஷயத்தைக்கூட புரிந்துக்கொள்ள முடியாமல், இப்படிச் சூழ்நிலை கைதியாகிக் கிடக்கிறாளே! இதனைக்கும் அவள் வெளி நாடு சென்று படித்து பட்டமெல்லாம்(!) வாங்கியவள்.


திங்கட்கிழமையும் வந்தது.
அவள் வேலைக்கு வரவில்லை. சொன்னது போலவே வெளியூர் பணயம் சென்று விட்டாள். நான் காலையில் காரில் வந்துக்கொண்டிருக்கும் போதே, என் கைத் தொலைப்பேசி சிணுங்கியது. அவள் தான். நினைவூட்டினாள், அந்த ரெஜிஸ்டர் விவகாரத்தை. 


``கவலைப்படாதே, நினைவில் இருக்கு.’’, என சொல்லிவிட்டு, அலுவலகம் கூட நுழையாமல், ஷம்சூலைத் தேடி அடுத்த பில்டிங்கிற்குச் சென்றேன்.
அவன் இன்னும் வரவில்லை. அங்குள்ள மற்றொரு ஊழியரிடம் கேட்டேன், “லேட் ஆகும், பிறகு வா!என்றான்.
சரி என கூறி, சரியாக ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவனைத்தேடிச் சென்றேன். அவன் இன்னும் வரவில்லை. நமக்குன்னு ஒரு பிரச்சனையென்றால் இப்படித்தான் கடவுள் சோதிப்பார்..இது தெரிந்த விஷயம் தானே.! அதற்குள் அவள் என்னை நிறைய முறை தொல்லை தந்த வண்ணம்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்துச் சென்றேன். அவன் அறையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஷம்சூல் எங்கே?” கேட்டேன்.

அவன் இன்று, இமெர்ஜென்சி லீவு, பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்..பதில் அவளிடமிருந்து. போச்சுடா என்றிருந்தது எனக்கு. இந்த லூசுக்கு வேறு பதில் சொல்லித்தொலைக்கனுமே.. நினைக்கும் போதே, தெலிஃப்பதி வேலை செய்தது. அவள் அழைத்தாள்.

என்னாச்சு?”

ஷம்சூல் வேலைக்கு வரவில்லை..அங்குள்ளவர்களிடம் கேட்டேன், யாருக்கும் தெரியாது என சொல்லிவிட்டார்கள். நாளை வரை பொறு.!என்றேன். அவள், விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். முணகினாள், வேலைக்கு வராத அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.. என்னிடம் சலித்துக்கொண்டாள். சமாதானம் சொன்னேன், அவளால் பொறுமையாகவே இருக்க முடியவில்லை.


மறுநாள், எனக்கு முன், என் இருக்கையில் எனக்காகக் காத்திருந்தாள். சரி வா இருவரும் ஷம்சூல் அறைக்குச் செல்வோம் என சென்றோம். அவன் இருந்தான். காலைப் பசியாற, தட்டில் வைத்திருந்த மீ கொரிங்கை (நூடல்ஸ் பிரட்டல்)  பொறுமையாக சுவைத்த வாறு.. புருவத்தை உயர்த்தி என்ன? என்பதைப்போல் எங்களைப் பார்த்துக்கேட்டான். பதற்றத்துடன் விளக்கிக்கொண்டிருந்தாள் அவள். அவன் சாப்பிடுவதைக்கூட நிறுத்தாமல், “நானா? என்னிடம் கொடுக்கப்பட்டதா? எப்போ?” என கேட்டவாறு, மெதுவாக எழுந்து, கடிதங்கள் அடுக்கியிருக்கும் இடத்தில் எட்டிப்பார்த்தான்.


``நீ சாப்பிடு, எங்கிருக்கும் என்பதை மட்டும் சொல்லு, நாங்கள் தேடிக்கிறோம்..’’ என அவசரப்படுத்தினாள் அவனை.


``அங்க பாரு, இங்க பாரு..’’ என இடத்தை மட்டும் காட்டி விட்டு, சாப்பாட்டைத்தொடர்ந்தான். ரெஜிஸ்டர் கிடைக்கவில்லை. குப்பைத்தொட்டியில் கிளறினாள், மேலே அடுக்கி வைத்திருக்கும் டாக்குமெண்ட்ஸ் பெட்டிகளில் தேடினாள். (யாராவது அவ்வளவு உயரத்தில் எடுத்து வைப்பார்களா என்ன!!) அவனின் அனுமதி இல்லாமல் அவனுடைய பேஃகைத் திறந்தாள், தேடினாள். அவனின் ட்ரேய், ஒவ்வொன்றாகத்தேடினாள், பக்கத்தில் இருந்த அலமாரியை அலசினாள், நானும் எதையோ தேடுவதைப்போல் பாசாங்கு செய்தேன். ஒரு சின்ன ரெஜிஸ்டர் அவ்வளவு பெரிய கடிதக் குப்பையில் சுலபமாகக் கிடைத்து விடுமா என்ன!?
ஷம்சூலும், கைகளைக் கழுவச் சென்று விட்டான். மெதுவாக உள்ளே நுழைந்தான். ஒரு துண்டை எடுத்து, வாய் கை என மெதுவாக துடைத்துக்கொண்டே.கிடைத்ததா?” என்றான். அவனின் பதற்றமில்லாத இந்த செய்கை வேறு அவளை எரிச்சல் ஊட்டியது.

நீ, இப்படி ரெஸ்பான்சிபல் இல்லாமல் இருக்காதே.! உன்னுடைய சையின் தான் இருக்கு. நீ தான் சையின் பண்ணி ரெஜிச்டரை எடுத்திருக்கின்றாய். இதற்கு நீதான் பொறுப்பேற்கனும்!அவனை எச்சரித்தாள். அவன் அதைக் கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.

அப்படியா? உன்னுடையது ஏன் இங்கு வருது? சரியான முகவரி நீ கொடுக்கலையோ!?” அதே அமைதியான தொணியில் அவனிடமிருந்து பதில். நான் அந்தக் காட்சியை உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் நெருப்பில் இட்ட புழுவாய் நெளிந்துக்கொண்டிருந்தாள் படபடப்பாக.!


அவளின் சுபாவமே அப்ப்டித்தான். அவசரக்குடுக்கை. ஒரு நாள் இப்படித்தான், நான் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே உள்ள கண்ணாடிக்கதவு திறப்பதற்குள் வேகமாகச் சென்று முட்டிக்கொண்டாள். படார் என்று ஒரு சத்தம், நான் பதறிப்போனேன்.. அவளின் மூக்குக் கண்ணாடி உடைந்து நொருங்கியது. தலையில் காயம். மண்டையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு, சிரிக்கக் கூடாதுதான் ஆனால் சிரிப்பு வருதே, இது போன்ற கோமாளிகளை நினைக்கும் போது என்ன செய்ய!? விபத்தைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது ஆனால் அரக்கப் பறக்கச்சென்று எதிலுமே பொறுமையில்லாமல் பீடு நடைபோட்டு, முட்டி மோதுபவர்களைக் கண்டால் குழந்தைகள் கூட சிரிக்கும். 


அப்போதும் கூட அவள் ஆள் தேடினாள், யார் மேல் பழி போடலாமென. நல்ல வேலை கதவு என்னுடையதல்ல.! இருப்பினும் எனக்கு அறிவுறுத்தல் வந்தது, கதவு திறக்கும் முன் சென்று விட வேண்டாமென, வருவோர் போவோருக்கு எச்சரிக்கை வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்கிற பைத்தியக்கார நிபந்தனையும் அவள் மூலமாகக் கொண்டுவரப் பட்டது. சரி செய்கிறேன் என்றுச் சொல்லி, பின்னால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.!


சரி, ரெஜிஸ்டர் போஸ்டைக் காணவில்லை. நாம் அங்கு தானே விட்டோம்.!? அவனின் பதிலும் திருப்தியளிக்கவில்லை. அவள் புழுவாய். நான் ஒரு பாத்திரமாய்...


அவள் தான். நான் சரியான முகவரி தான் கொடுத்திருந்தேன், தவறிப்போய் இங்கு வந்திருக்கும், நீ என்ன செய்யனும்!, உங்களுடையது இல்லையென்றால் அந்த போஸ்ட்மென்னிடமே கொடுத்திருக்க வேண்டும்.. அதை நீ செய்தாயா?” அவளிடம்.
அவனுக்குக் கொஞ்சம் கூட பதற்றமே இல்லை. ஆமாம், நான் எடுத்தேன், என்னுடைய சையின் தான் இருக்கு. ஆனால் உன் பெயர்போலவே எங்களுக்கும் இங்கே ஒரு ஸ்டாஃவ் இருக்காங்களே, அவர்களுடையது என நினைத்து எடுத்திருப்பேன்....!
பதற்றத்தோடு அவள்.. இல்லை அங்கேயும், நான் கேட்டுப் பார்த்து விட்டேன், அந்த ஸ்டாஃவ்யிடமும் இல்லை..

அப்படியில்லையென்றால், அந்த கடிதம் மீண்டும் போஸ்ட் ஆபிஸிக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்.....அவனின் பதில்.

சரி விஜி, இப்போ நீ, இங்கேயே போஸ்ட் ஆபிஸூக்கு அழை.என்னை உருட்டி எடுத்தாள். நானும் அழைத்தேன். எல்லாத்தகவல்களும் கொடுக்கப்ப்ட்டது.. அங்கிருந்து பதில், “இல்லை, இன்னும் எங்களுக்கு அந்த ரெஜிஸ்டர் திருப்பி அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பியிருந்தால் எங்க ஊழியர்கள் நிச்சயம் அதை கணினியில் பதிவு செய்திருப்பார்கள்.”...


மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “பார்த்தாயாஅங்கும் இன்னும் செல்லவில்லை. இங்கு எங்கேயாவது தான் இருக்கனும், தேடு தேடு இல்லையேல், நீ தான் அதற்காக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்..சொன்னதுதான் போதும்ஷம்சூலுக்குக் கோபம் வந்தது..
கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்தான்.


``இது என்ன பணமா, எடுத்து வைத்துக்கொண்டு உன்னிடம் வித்தைக் காட்டுவதற்கு! நாக்கு வழிக்கக்கூட உதவாத அந்த ரோட் டாக்ஸை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவதாம்.!? எங்கேயாவது போயிருக்கும், கிடைத்தால் கொண்டு வந்து கொடுக்கிறேன், இடத்தைக் காலி பண்ணு, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, என ஓட்ட ஆரம்பித்தான்.

சரி நான், உன்னுடைய போஸ்சைத் தொடர்புக்கொள்கிறேன்.!என முணகிக் கொண்டே, என்னோடு நடந்தாள் எங்களின் அலுவலகம் நோக்கி.. அவனும், “உன்னால் முடிந்ததைச் செய், இனி எதுவென்றாலும் போஸிடமே பேசிக்கொள்..எனக் கூறிகணினியை ஆன் செய்துக்கொண்டிருந்தான்.


கோபத்தில் என்னன்னமோ உளறினாள்அவனை என்ன பண்ணுகிறேன் பார், என என்னிடம் மங்கம்மா சபதமெல்லாம் போட்டுக் கொண்டே வந்தாள்.....


நான் மௌனமாக அவளின் வசவுகளைக் கேட்டுகொண்டே வந்தேன்..


இதை வாசிப்பவர்களுக்கு, இன்னேரம் ஒரு கேள்வி தோன்றியிருக்குமே!?
ஆம், அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்டவுடன் தான் அவள் அடங்கினாள். வாயை மூடினாள்.


(
ரெஜிஸ்டர் கிடைத்துவிட்டது - செவ்வாய்க் கிழமை மாலையில்) 


சென்ற மாத மின்னல் வாரப்பத்திரிகையில், போட்டிக் கதைகளுக்குத் தேர்வாகி பிரசுரமான கதைகளில் ஒன்று.. எனது சிறுகதை...

வெள்ளி, ஜூலை 20, 2012

ஒற்றை எழுத்து சொற்கள்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்



இவை எனக்கான சேமிப்பு... (நன்றி ஸ்மிலி பிரபு திருச்சி) 

வட்ட மேசை

ஒரு வார
முதல் பக்க நாளிதழ்
செய்திகளை வாசித்து
மீள்பர்வை செய்துகொண்டேன்

நாட்டு அரசியலில் நிகழும்
மாற்றங்கள் குறித்து
தெரிந்து வைத்துக்கொண்டேன்

அலுவலக அரசல் புரசல்
செய்திகளையும்
சேகரித்துக்கொண்டேன்

நாட்டு நிலவரம்
சாலை நெரிசல்
நித்தமும் நிகழும்
வாகன விபத்துகள் குறித்து
தகவல் தெரிந்துக்கொண்டேன்

போன மாதம்
மருத்தவமனையில் சேர்க்கப் பட்ட
ஜேம்ஸ்சின் நிலை குறித்து
அறிந்து வைத்துக்கொண்டேன்

கூட்டுபவர்கள்
பெருக்குபவர்களின்
பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டேன்

என்னை சதா
`டார்ச்சர்’ செய்யும்
ஒரு மேலதிகாரியைப் பற்றிய
சம்பவங்களை மனதில்
ஓடவிட்டுக்கொண்டேன்

சுற்று வட்டார உணவகங்களின்
அறுசுவை உணவுகள் குறித்து
சில ‘பில்டாப்’கள்
செய்துவைத்துக் கொண்டேன்

இன்று
உயர் அதிகாரியோடு
சாப்பிடச் செல்கிறோம்

ஒரே மேஜையில் சாப்பிடும்போது
பேசுவதற்கு ஒன்றுமில்லாமல்
போய்விடக்கூடாதே..

அங்குதான்
அவர்
நாங்கள்
சொல்வதைக்கேட்பார்..

வியாழன், ஜூலை 19, 2012

நேற்றைய நான்

நேற்றைய நீ
இன்றைய நீயாகவே இரு
நாளைய நான்
இன்றும் இல்லை
நேற்றும் இல்லை

நேற்றைய என்னை
நீ என்ன தேடுவது?
நானே தேடுகிறேன்
பிரம்பால் அடித்து
மரண தண்டனை கொடுக்க

அங்கிருந்து தான் வந்தேன்
ஆனால், அது நான் இல்லை
கடந்து போன நாளில்
நாளும் இல்லை
நேரமும் இல்லை
நானும் இல்லை

செல்வேன் இன்னும்
பல அவதாரங்களில்
பொழுதுகளை
நாளையாக்கிக் கொள்ளும்
நேற்றைய நான்


புதன், ஜூலை 18, 2012

என்னுள் எழும் சில வினாக்கள்??

சில கேள்விகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும், அவைகள்தான் சிலவேளைகளில் உணர்வுக் கொந்தளிப்பாக  விஸ்வரூபம் எடுக்கும்.


இதோ இவைகள் :-

எல்லார் மீதும் எரிந்து விழும்போதுதான் இலக்கியவாதி என்கிற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்கிற அற்ப சிந்தனை வருவது எதனால்?


யாருமே அவரை வாசித்திருக்கமாட்டார்கள், ஆனால் அவர் நாடுபோற்றும் இலக்கியவாதி. எப்படி?


இணையத்தில் எழுதினால் எழுத்தாளர்கள் இல்லையா?


கதை எழுதினால்தான் எழுத்தாளரா?


பேட்டி எடுக்கப்படும் இலக்கியவாதிகளிடம், அம்மாவிற்கு பிடித்தவை, மனைவிக்கு பிடித்தவை, கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்கிற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, இலக்கியதைப் பற்றி மட்டும் பேசினால் நல்லா இருக்குமே.! இலக்கியப் புரிதல் பேட்டி கொடுப்பவரை விட, பேட்டி எடுப்பவருக்கு அவசியம்.. சரியா?


திட்டுகிறவர்களை திட்டிவிடலாம். பாராட்டுகிறவர்களை என்ன செய்யலாம்?


சினிமா பாடல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, பேச்சின் போது இடையிடையே அதில் வரும் கருத்தினை நுழைத்துப் பேசுகிறவர்களை பெரிய இலக்கியவாதியாகப் பார்க்கப்படுவது எதனால்?


மேடையில் முழங்கிவிட்டால் பெரிய இலக்கியவாதியா?


தமிழ் எழுத்துக்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் பற்றில் உச்சத்தில் இருப்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு வெறிவருகிறது. ஏன்?


நாத்திகம் பேசுகிறவர்கள் பெண்களின் நிலையை யோசித்திருக்கின்றார்களா? பெண்களால் நாத்திகம் பேசமுடியாது என்பதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் இருந்தால், பல பெண்கள் மனநோயாளியாகியிருப்பார்கள்! யோசித்துப்பாருங்கள்!?


பரிசு பெற்ற சிறுகதை/நாடகம் ஒரு சினிமா படக் கதையின் காப்பி என்கிற கருத்தை நாம் முன்வைத்தால், ஏன் பரிசு கொடுக்கக்கூடாது!? எத்தனையோ பேர் அந்த சினிமா படத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்!! (சினிமா பார்க்க மாட்டார்களாம், இவர் எழுதிய கதை/நாடகத்தை உட்கார்ந்து கேட்பார்களாம், படிப்பார்களாம்.. இது எப்படியிருக்கு?) சரி அப்படியே சினிமா கதையாக இருந்தால் என்னவாம்!? அது போன்ற கதைகளை மீண்டும் எழுதினால் தப்பா? கதை எழுதுவது எவ்வளவு கடினமான வேலை... பேனா பிடித்து எழுதிப்பாரும், பிறகு தெரியும்!!? இப்படியெல்லாம் வெட்டியாக எழுதுபவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்பவர்களை  என்னவென்று சொல்வது?


இலக்கியத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது எது? பல இலக்கியவாதிகளிடம் கேட்கப்பட்ட கேள்வி? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லலாம்.?  கஷ்டமான கேள்விதானே.!?


தமிழ் மொழியில் மாஸ்டர்/ பி.எச்.டி பட்டம் வைத்திருப்பவர்களுக்கு, இலக்கியப் புரிதல் வந்துவிடுமென்று நம்பலாமா? நான், ஒரு தமிழ் பேராசிரியர் ஆய்வு செய்த கதைகளைக் கவனித்தேன், அவர் ஒரு அற்புதமான கதையில் ஒன்றுமேயில்லை என்று சொல்லி ஆய்வு செய்திருந்தது  இன்னமும் எனக்கு வருத்தம்.


இலக்கியப் புரிதல் எனபது ஒரு ஜென்.. ஆன்மிகப் புரிதல் போல். வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு அது. எல்லோருக்கும் வந்து விடாது. ஏற்றுக்கொள்கிறீர்களா?


மாற்றத்தைக் கொண்டு வர முடியாத ஒரு துறை, நம் இலக்கியத்துறை (தமிழ்). வாய் சவுடால்களும் வெட்டிப்பேச்சுகளும்தான்  அதிகம் இங்கே.!?

ஏதோ முட்டாள் போல் உளறுவதாக இருந்தால், மன்னிக்கவும். என் மனதில் பட்டது.  ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் அமைதி அமைதி...





செவ்வாய், ஜூலை 17, 2012

Geoduck (பூகோள வாத்து)


சீனா, ஹாங்காங், ஐரோப்பியா நாடுகளில் மிக பிரபலமாகப் பேசப்படும் இந்த நீர் வாழ் உயிரினத்தின் உணவு மிக சுவையானதாம். தமிழில் இதன் பெயர் எதுவாக இருக்கும் என கூகுளில் போட்டுப்பார்த்தேன், பூகோள வாத்து என்று வந்தது. அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆமாம் பேஸ்புக், முக நூல் என்று மாற்றம் பெறும்போது, இதையும் அப்படியே மாற்றிடலாம்  தப்பில்லை.

அதிக விலையில் விற்பனையாகும் (கிலோ அமெரிக்க டாலர் 200) இந்த நீர்வாழ் உயிரனத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதன் இனப் பெருக்கத்திற்குப் பாடுபடும் வேளையில், இதனைக் கடத்தும் வேலைகளும்  பெரிய அளவில் நடந்துக்கொண்டிருப்பதாக தகவலும் செய்தியில் பரிமாறப்பட்டுள்ளது.


இதனின் ஆயுள் நூற்றுஐம்பது வருடங்களாம். கடல்கரையோறமாக தேங்கி நிற்கும் சேற்றில் ஊறி கழுத்தை மட்டும் வெளியே நீட்டி,  நெளிந்து ஊர்ந்து வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்குமாம் இந்த நீர்வாழ்.

இதைப் பிடித்து வருகிற வேலை பேராபத்து நிறைந்ததாகவும், இதில் போடப்படும் பணமும் பெரிய அளவில்  இருப்பதால், தற்போது சீனா மட்டுமே இதன் இனப்பெருக்கத்தில்  முன்னனி வகிக்கின்றதாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கடற்படை நீர்மூழ்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வாழ் உயிரினம், இப்போது பலவித உணவுகளாக மாறி உலக முழுக்க பிரசித்திப்பெற்று வருகின்றது. இதனை உணவாக வைத்திருக்கும் உணவுக்கடைகள் பெருத்த லாபத்தில் சுழன்றுக்கொடிருக்கின்றதென்கிற தகவலும் சுவாரிஸ்யமே.!


  

திங்கள், ஜூலை 16, 2012

நான் செய்த வைரம்

காலநேரம்

சிரிக்கும் நிலையில்
நான் இல்லை
நாளை வா
நகைச்சுவை சொல்ல..

%%%%

திருடா

நான் உனக்குக்கொடுத்ததும்
நீ எனக்குக் கொடுத்ததும்
எல்லாமும் எழுத்துகள்தாம்
நான் அவைகளை கவிதையாக்கிக்கொண்டேன்
அதையும் நீ திருடிக்கொள்கிறாயே...

%%%%%

நடுத்தரவர்க்கம்

சேகரித்து வைத்த
பழைய காகிதங்களை
வியாபாரியிடம் கொடுத்து விட்டு
கிடைக்கப்பெற்ற பணத்தை
மீண்டும் எண்ணி
பையிற்குள் வைக்கும்போதுதான்
தெரிகிறது, நானும் நடுத்தரவர்க்கமே.!

%%%%%

வடை பாயாசம்

அப்பாவிற்கு திவசம்
பிள்ளைகள் நாங்கள் மறந்தே போனோம்
அம்மா கோவிலுக்குச்சென்றார்
உறவுகளுக்கு வருத்தம்
`எங்கண்ணனை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.’

%%%%%%

ஜேம்ஸ் பாண்ட்

எல்லோரும்
சாகும் போது
நாமும் பிணமாகிறோம்

%%%%%

நான் செய்த வைரம்

மேலே மாட்டியிருக்கும்
செடிகளில் ஊற்றிய நீர்,
கொஞ்ச நேரங்கழித்து,
தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் தேங்கி,
கீழே சொட்டுவதற்கு தயாராகும்,
அப்போது அதன் மேல் விழும்
காலை சூரியன் மின்னும்
அதுதான் இன்று
நான் செய்த வைரம்.

%%%%%%%